Wednesday, September 16, 2009

காலமானார் தென்கச்சி ‌கோ.சுவாமிநாதன்


சென்னை:

பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார். சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.

தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகி சென்னை வானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தார். மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.


சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:
நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும். ''ஈழத் தமிழர்கள்!''



No comments:

Post a Comment

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...