Thursday, November 26, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-177: நான்காம் கட்ட ஈழப் போர்!

By Paavai Chandran and published in Dinamani.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு செல்லாது என்ற தீர்ப்பின் மூலம் வீழ்த்தப்பட்டது புலிகள் அல்ல; ஈழத்தந்தை செல்வநாயகத்தின் கனவுதான் தகர்க்கப்பட்டது. தமிழ் மக்களின் தனித்தேசியம்-மொழி-காப்பாற்றப்பட வேண்டுமானால், பாரம்பரிய மண் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்தத் தீர்ப்பு தகர்த்தது. அதுமட்டுமல்ல, இத் தீர்ப்பு அதிபர்களாக இருந்த ஜெயவர்த்தனா, பிரேமதாசா, விஜயதுங்க, சந்திரிகா ஆகியோரையும் முட்டாள்களாக்கிவிட்டது. ஆனால் மகிந்த ராஜபட்ச இத்தீர்ப்பு குறித்து மகிழ்ந்தார்.

அதேபோன்று, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஜே.வி.பி. பாராட்டுவிழா நடத்தி, "தமிழர்களுக்கு வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியைத் தந்துவிட்டோம்' என்று கூறியது. வழக்கைத் தொடுத்தவர்களுக்கு "ஜனபிரணாபிமானி' என விருதும் வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு எழுதிய கடிதத்தில், "வடக்கு-கிழக்கைப் பிரிப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட உரிமையை மறுப்பதாகும். வடக்கு-கிழக்கை, தனித்தனியாகப் பிரித்ததன் மூலம் அங்கு வாழும் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது மட்டுமன்றி 18 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட இவ்விரு மாகாணங்களையும் ராஜபட்ச அதிரபராக வந்தபின்பே பிரிக்கப்பட்டுள்ளது (தினக்குரல்-24-11-2006)' என்று குறிப்பிட்டு, உடனடி மாற்று நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார்.

இந்தியத் தரப்பில், 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு மதிப்பளித்து, இலங்கை அரசு செயல்படவேண்டும், அதன்படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொள்வதாக, வெளியுறவு அமைச்சகச் செயலாளர் சிவசங்கர் மேனன் வேண்டுகோள் விடுத்தார் (27-11-2006).

கியூபாவில் 10-12-2006 அன்று நடைபெற்ற அணிசேரா நாடுகள் மாநாட்டில் ராஜபட்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், "வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை' வலியுறுத்தினார் என்று தினசரிகளில் (11-12-2006) செய்திகள் வெளியாயின. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சுரேந்திரகுமார் உள்ளிட்டோர் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இணைப்பு குறித்து வலியுறுத்தியபோது, அதை அவர் ஏற்றார் என்ற செய்தியும் 11-1-2007 தேதியிட்ட நாளிதழ்களில் காணக் கிடைத்தது.

ஆனால் இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபட்ச, "கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் வடக்குடன் இணைந்திருப்பதா அல்லது தனியாக இருப்பதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றமோ, அதிபரோ, நீதிமன்றமோ அல்ல' என்று கூறினார்.

தமிழர்களின் கேள்வியோ, அத்தீர்வை கிழக்கில் உள்ள சிங்களவர்கள் ஏன் தீர்மானிக்க வேண்டும் என்பதாக இருந்தது.


விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஓயாத போராட்டத்துக்கிடையே, சிறுநீரகப் பாதிப்பால், அந்நோய் கொடுமையின் உச்சத்தை அடைந்த நிலையில் லண்டனில் உயிரிழந்தார் (டிசம்பர் 14, 2006).

'எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் ராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயல்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு...

...தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது...

...பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன்...

...ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்...

...எமது அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு மூலாதாரமாக முன்னால் நின்று செயல்பட்டவர்...

...பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து "தேசத்தின் குரல்' என்ற மாபெரும் கெüரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.'' எனறு பிரபாகரன் தமது அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப் புலிகள் 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தங்களின் முதல் வான்படைத் தாக்குதலைக் கட்டுநாயக்கா விமானப்படை விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது நிகழ்த்தினர். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க ராணுவமும் அரசும் தீவிரமாக முயன்ற நிலையில், ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது முறையாகவும் வான்படைத் தாக்குதல் நடைபெற்றது.

நாலைந்து பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய இலகுரக விமானம் புலிகளுக்கு எப்படிக் கிடைத்தது என்ற ஆராய்ச்சியில் இலங்கை அரசு ஈடுபட்டது. செக் குடியரசில் இருந்து விமானம் வாங்கப்பட்டு, அதைப் பிரித்து, இலங்கை கொண்டுவந்து திரும்ப விமானமாகச் சேர்த்திருக்கிறார்கள் என்றது உளவுத்துறை. அப்படியென்றால் இதில் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் புலிகள் தேர்ந்தது எவ்வாறு என்று எதிர்க்கட்சிகள் ராஜபட்சவைக் குடைந்து எடுத்தன.

இந்த விமானத் தாக்குதல் சாதாரணமானதல்ல; இனி இந்தியாவுக்கும் ஆபத்து என்று புலிகளின் எதிர்ப்பாளர்கள், குரல் கொடுத்தார்கள்.

கிழக்கு மாவட்டத்தில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இலங்கை ராணுவம் "அரசின் உயர்பாதுகாப்பு வலையம்' என அறிவித்தது. ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்க விரும்பாத அப்பகுதி மக்கள், இறுதியாக இரண்டரை லட்சம் பேர் அகதிகளாக அவ்விடங்களைவிட்டு அகன்றனர் (15-1-2007).

கிழக்குப் பகுதி முழுவதையும் கைப்பற்றிவிட்டோம் (2-6-2007) என்று ராணுவம் அறிவித்த அடுத்த மாதத்தில் புலிகள் வசமிருந்த கடைசி நகரான தொப்பிக்கல்லை 11-7-2007 அன்று பிடித்து, கிழக்குப் பகுதியை முழுவதுமாகப் பிடித்ததாகவும் ராணுவம் அறிவித்தது.


புலிகளின் வான்படை அக்டோபர் 22, 2007 அன்று அனுராதபுரம் தளத்தில் குண்டுவீச்சை நடத்தியது. 5 பேர் பலியானார்கள். பலருக்குக் காயம் ஏற்பட்டது. இரண்டு எம்.ஐ. ரக ஹெலிகாப்டர்கள் சுக்குநூறாகச் சிதைந்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தொடர்ந்து இலங்கையில் மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

ஆதரவற்ற சிறுமிகளின் இல்லமான செஞ்சோலைக்கு சுப.தமிழ்ச்செல்வன் சென்ற சமயம், புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கிருக்கிறார் என்ற உளவுத் தகவலையடுத்து, இலங்கையின் விமானப்படை விமானங்கள் அங்கு பறந்து சென்று வானத்தை வட்டமிட்டன. தொடர்ந்து நடத்திய குண்டுவீச்சில் சுப.தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார் (நவம்பர் 27, 2007). அவருடன் இருந்த 5 போராளிகளும் குண்டுவீச்சுக்குப் பலியானார்கள். இந்தத் தாக்குதலில் பிரபாகரனும் உயிரிழந்திருக்கலாம் என்ற ஊகச் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாயின.

இவ்வகைத் தாக்குதல்கள் அனைத்தும் யுத்தமீறல்கள் கணக்கில்தான் வருகின்றன.


உலகின் ஆதிக்கச் சக்திகளான அமெரிக்கா, இங்கிலாந்து ஆயுத உதவி வழங்க,

உலகம் முழுவதும் இருக்க இடமின்றி ஓட, ஓட விரட்டப்பட்டு முகாம்களில் வாழ்க்கையைத் தொலைத்து, முகாம்களிலேயே தங்களது சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து, தங்களுக்கென ஒரு நாடு கண்ட இஸ்ரேலும்,

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது இனத்துக்கென ஒரு பிரிவினையாகத் தனிநாடு கண்ட பாகிஸ்தானும்,

மாசேதுங்கின் நீண்ட பயணத்தின் மூலம் புரட்சி நடத்தி "செஞ்சீனம்' என மக்கள் அரசைக் கண்ட சீனாவும்,

27 நாடுகள் மூலம் இணைந்து தங்களது இருப்பைக் காட்டும் வகையாக அமைந்த, ஐரோப்பிய யூனியனும் ஆதரவளிக்க,

காந்தியின் அகிம்சைக் கொள்கைகளால் சுதந்திரம் கண்ட இந்தியாவினது ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் உதவியுடன் ராணுவ ஆலோசனையும் வழங்கப்பட்டு,

சில தமிழ்க் குழுக்களின் அனுசரணையுடனும் சிலரின் கண்டும் காணாத போக்கினாலும் துணிவு கொண்ட மகிந்த ராஜபட்ச,

தாய் மண்ணுக்காக, தமிழினத்துக்கான வாழ்வுரிமையை நிலைநாட்ட விரும்பும் விடுதலைப் புலிகளுடனான நான்காம் கட்ட ஈழப் போரை,

2008-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாளுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை முறித்துக்கொள்ளும் என்ற செய்தியுடன் ராஜபட்ச தொடங்கினார்.

தமிழினத்தை அழித்து ஒழிக்கும் ராஜபட்சவுடன் மேற்கண்ட நாடுகள் கைகோர்த்தது எதற்காக? ஏன்? என்ற கேள்விகளும் தொடர்வது போன்றே, நான்காம் கட்ட ஈழப் போரும் தொடர்கிறது...

நாளை: வேலுப்பிள்ளை பிரபாகரன் 2006-ஆம் ஆண்டு நிகழ்த்திய மாவீரர் தின உரை!

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...