Monday, November 9, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-160: பிரேமதாசா மரணமும் சந்திரிகாவின் அணுகுமுறையும்!

கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன. கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. எனவே யாழ்ப்பாணத்தில் அனுசரிக்கப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் மாத்தையா கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில், 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள், கொக்குவில் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மகேந்திரராசா உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், ஓர் அறையை ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலசிங்கம் உண்ணாவிரதம் இருப்பதன் அவசியம் என்ன என்று கேட்டபோது, அவர், புலிகள் இயக்கத்தின் உப தலைவர் பதவியிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் தாம் விலக்கப்பட்டது காரணமாக இயக்கத்தின் தலைமைப் பீடத்தின் மீது ஏமாற்றம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணியில் மாத்தையா மீது, தனக்கென ஒரு குழுவை உருவாக்கி, செயல்படுவதாகவும் தனக்கு விசுவாசமான ஒரு சிலரின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையொட்டி, அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கி, பிரபாகரனை அகற்றும் திட்டத்துக்கு உடன்பட்டு, பெரும் சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்து, அவரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கலைக்கப்பட்டு, அதற்குப் பதில் அரசியல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் யாழ்த் தளபதியாக இருந்து வந்த சுப. தமிழ்ச்செல்வன் நியமனம் ஆனார்.


பிரேமதாசாவால் ஒதுக்கப்பட்டிருந்த அதுலத் முதலியும், காமினி திசநாயக்காவும் தங்கள் பகையை மறந்து, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி மேற்கு மாகாண இடைத் தேர்தலில் தீவிரம் காட்டினர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரால் லலித் அதுலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார் (ஏப்ரல் 23, 1993).

அதற்கடுத்த பத்து தினத்துக்குள் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அதிபர் பிரேமதாசா, ஆர்மர் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை தானே சரிசெய்கிறேன் என்று இறங்கினார். அந்த ஊர்வல நெருக்கடியிலும் கூட்டத்தில் ஊடுருவிய சைக்கிளைத் தடுத்து நிறுத்த காவலர்கள் முயன்றபோது, அந்த சைக்கிள் வெடித்து, பிரேமதாசா உள்ளிட்டோர் இறந்தனர்.

இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிக்கை வெளியிட்டனர். ஒருவாரத் துக்கத்திற்குப் பிறகு மே 7-ல் பிரதமராக இருந்த திங்கரி விஜேதுங்க, தற்காலிக அதிபராக ஆறு மாதங்கள் பதவி வகித்தார்.


கணவர் விஜயகுமாரதுங்க கொலையுண்ட பின்னர், லண்டனில் வசித்து வந்த சந்திரிகாவை உடனே நாடு திரும்பும்படி, தாயார் ஸ்ரீமாவோ உத்தரவிட்டார். நாடு திரும்பிய சந்திரிகா குமாரதுங்க நாட்டில் அமைதியை நிலைநாட்டப் பாடுபடப் போவதாக அறிவித்தார். மக்களும் அதையே விரும்பியதால், வலுவான கூட்டணியும் அமைத்து 19.8.1994-ல் பிரதமரானார். பதவி பொறுப்பை ஏற்றதும், தமிழர் பகுதிகளில் பிரேமதாசா விதித்த பொருளாதாரத் தடைகளை சிறிதளவு தளர்த்தினார்.

சந்திரிகாவின் இந்த நடவடிக்கையை வரவேற்று, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், செப்டம்பர் 2, 1994 அன்று, கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் ஒரு பிரதியை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சந்திரிகாவுக்கும் அனுப்பி வைத்தார்.

அவ்வறிக்கையில், ""முந்தைய அரசின் பொருளாதாரத் தடையை சிறிதளவு நீக்கிக் கொண்டதற்கு எங்களது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்வதுடன், அந்தத் தடையை முழுவதுமாக நீக்குவதற்கும் உத்தரவிட வேண்டும். இவ்வகையாக எமது பகுதியில் முற்றிலுமாக அமைதி நிலவ ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு புலிகள் இயக்கம் முழு ஒத்துழைப்பத் தரும். இதன் நல்லெண்ண வெளிப்பாடாக போர்க் கைதிகளாக எம்மிடம் உள்ள பத்துப் போலீஸôரை விடுதலை செய்யவும் தயாராக இருக்கிறோம். நான்காண்டு பொருளாதாரத் தடையால் அவதியுறும் மக்கள் சிங்களர்களைப் போன்று அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெறுவதற்குண்டான வழிவகைகளைச் செய்வது, எம்மை மகிழ்ச்சி அடையச் செய்யும். மேலும், நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால், நாங்கள் போர் நிறுத்தம் செய்யவும் தயாராக இருக்கிறோம்'' என்றும் அதில் உறுதியளித்திருந்தார்.

இந்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றதும் மகிழ்ந்த சந்திரிகா குமாரதுங்க, செப்டம்பர் 9, 1994 அன்று வே. பிரபாகரனுக்கு பதில் கடிதம் எழுதியதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கடிதம் எழுதிய முதலாவது பிரதமர் என்ற பெயரையும் பெற்றார்.

அந்தக் கடிதத்தில், ""முந்தைய அரசு ஏற்படுத்திய பொருளாதாரத் தடையை நீக்கியதை வரவேற்று புலிகள் வெளியிட்ட அறிக்கையைக் கண்டு மகிழ்கிறேன். நல்லெண்ணம் மற்றும் நல்லுறவு மேம்பட வேண்டும் என்ற அவாவில் பொருளாதாரத் தடையின் சில அம்சங்களை விலக்கி இருக்கிறேன். அதேபோன்று பல ஆண்டுகளாக புலிகளின் சிறையில் இருந்த பத்து போலீஸôரை விடுவிக்கும் முடிவும் வடக்கு-கிழக்குப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

யாழ்ப்பாண மக்களுக்கு அனைத்துப் பொருள்களும் கிடைக்க வேண்டுமானால், அங்கே பொருள்களைக் கொண்டு வந்து இறக்குவதே முக்கியப் பிரச்னையாகும். அதற்கான வழிகளை உடனடியாகக் கண்டறிவோம்.

மின்சாரம், சாலைகள் மேம்பாடு, விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகள் போன்றவை கிடைக்க உடனே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தங்களின் ஒத்துழைப்பும் தேவை. பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கும் பிரதிநிதிகள் பெயரை அறிவித்தால், அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடலாம்'' என்றும் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தில் பிரபாகரன் எழுப்பியிருந்த முற்றிலுமான பொருளாதாரத் தடையை நீக்குதல் மற்றும் போர்நிறுத்தம் குறித்து சந்திரிகா எதுவும் குறிப்பிடாத நிலையிலும், புலிகள் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசியல் பிரிவுத் துணைத் தலைவர் கரிகாலன், எஸ். இளம்பரிதி, ஏ. ரவி, எஸ். டொமினிக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

பொருள்கள் நடமாட்டத்துக்குண்டான தடையை நீக்குவது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்தது. (12.9.1994 பிரபாகரனின் கடிதம்).

இவ்வாறு கடிதப் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலும், கடற்படைத் தாக்குதலும், புலிகளின் எதிர்த்தாக்குதலும் மன்னார் பகுதியில் நடந்து கொண்டுதான் இருந்தது. செப்டம்பர் 19-ல் நடைபெற்ற தீவிரமான தாக்குதலில், சிங்களக் கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடலில் மூழ்க இருந்த கப்பலின் காப்டனும் இதர அதிகாரிகளும் காப்பாற்றப்பட்டு, போர்க் கைதிகளாக்கப்பட்டனர்.

இவ்வகையான தாக்குதலில் புலிகள் மகிழ்ச்சி அடையாத நிலையிலும், செப்டம்பர் 21-ம் தேதி சந்திரிகா பிரபாகரனுக்கும் மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், பேச்சுவார்த்தைக்கான அரசுப் பிரதிநிதிகள் பட்டியல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமரின் செயலாளர் பாலபட்டபெந்தி, சுற்றுலாச் செயலாளர் லயனல் ஃபெர்னாண்டோ, பேங்க் ஆப் சிலோன் தலைவர் ஆர். ஆசிர்வாதம், கட்டட நிர்மாணப் பிரிவு தலைவர் என்.எல். குணரத்னே ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என்றும், அக்டோபர் மாதத்தில் 30-ம் தேதியிலிருந்து 6-ம் தேதிக்குள் ஒரு நாளும், 12-ம் தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் ஒரு நாளும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சந்திரிகாவின் பிரதிநிதிகளின் யாழ்ப்பாணம் வருகை அக்டோபர் 13, 14-ல், இருந்தால் வசதியாக இருக்கும் என்று பிரபாகரன் குறிப்பிட்டதுடன், பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கும் உறுதி அளித்திருந்தார்.

இதன்படி பலாலி விமான தளத்தில் அவர்கள் வந்து இறங்குவார்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டதையொட்டி, பிரபாகரன் பலாலி என்பதைவிட யாழ். பல்கலைக்கழக திறந்தவெளி சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

விமானப் பயணம் சரியாக வராது என்று பிரதமர் கருதினால் காங்கேசன் துறைக்கு செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் வந்து சேர்ந்தால், அங்கிருந்து எமது ஆட்கள், அந்தப் பிரதிநிதிகளை அழைத்து வந்து சுபாஷ் ஓட்டலில் தங்க வைப்பார்கள். அந்த ஓட்டல் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் அவர்களின் பாதுகாப்புக்கும் பிரச்னை இல்லை என்றும் பிரபாகரன் (8.10.1994) தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பாலபட்டபெந்தி யாழ்ப் பல்கலை திறந்தவெளியில் வந்து பிரதிநிதிகள் இறங்குவர் என்றும், அதற்கான "எச்' என்கிற பெரிய அடையாளத்தை வெள்ளை நிறத்தில் திடலில் பொறிக்கும்படியும், அதுவே தரையிறங்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். உடன், எதுகுறித்துப் பேசப் போகிறோம் என்ற குறிப்புகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

1. பொருள்களைக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி.

2. மின் விநியோகம், சாலை மேம்பாடு, நீர்ப்பாசன வசதிகளை உறுதி செய்தல்.

3. யாழ்ப் பல்கலை. நூலகம் மீள உருவாக்கம்.

4. போர் நிறுத்தத்துக்கான வழிவகை காணுதல்.

ஈழத் தமிழர் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் இந்தப் புதிய முயற்சிக்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலிருந்தும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் குவிந்தன.
Source: www.dinamani.com

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...