Wednesday, November 18, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 169: உலகைக் கவர்ந்த பிரபாகரன் பேட்டி!




By Paavai Chandran and published in Dinamani.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்துகிற விஷயங்களில் ஏற்பட்ட சுணக்கங்களை நார்வே சமரசக் குழுவினரின் கவனத்திற்கு பாலசிங்கம் கொண்டு வந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரபாகரனின் ஆலோசனைகளை நேரடியாகப் பெறவேண்டிய நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்புச் சூழ்நிலை கருதி இந்தப் பேச்சுவார்த்தைகளை கொழும்பில் அல்லாமல் வேறு ஒரு நாட்டில் நடத்துவது சரியாக இருக்கும் என்றும் பாலசிங்கம் கருத்துத் தெரிவித்தார்.

பிரபாகரனுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய அடேலும், பாலசிங்கமும் வன்னி செல்வதற்கு இன்னொரு நாட்டின் உதவி தேவைப்பட்டது. மாலத்தீவு கடல் சுற்றுலாவுக்கான விமானங்களைக் கொண்டிருப்பதால், அந்த நாட்டின் உதவி அணுகப்பட்டு, மாலத்தீவு சென்று, விமான நிலையத்தின் அருகே மார்ச் 24-இல் ஓட்டலில் இரவு தங்கினர். பாலசிங்கம் குழுவினர் கடற்படை விமானத்தில் புறப்பட்டு வன்னிப் பகுதியை அடைந்தனர்.

அன்றைய தினமே பிரபாகரனுடன் விரிவாகப் பேசிய நிலையில், மாலையில் வந்த நார்வே குழுவினருடன் பேச்சு நடத்தப்பட்டது. இக் குழுவினருடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பொறுப்பாளர் ஜெனரல் ட்ரான்ட் ஃப்ரோகோவுட் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொண்டனர்.

பேச்சினூடே வவுனியா-கிளிநொச்சி வழியாகச் செல்லும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். பிரபாகரன் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் தென்படுகிறது என்று குறிப்பிட்டார். அப்போது பிரதமர் எல்லா அம்சங்களையும் நிறைவேற்ற உறுதி பூண்டிருப்பதாக நார்வே குழுவினர் தெரிவித்தனர். ஏ-9 தேசிய நெடுஞ்சாலை ஏப்ரல் 8-ஆம் தேதி திறக்கப்பட்டது.


விடுதலைப் புலிகள் இயக்க வரலாற்றில் ஏப்ரல் 10, 2002 ஒரு முக்கியமான நாளாகும். அன்றைய தினம் வே. பிரபாகரன் இலங்கைப் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கிளிநொச்சியில் சந்தித்தார். தூயவன் அறிவியல் கல்லூரியில் இம் மாநாடு நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற வளாகம் மட்டுமன்றி, அந்தப் பகுதி முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட நேரத்தில் வே.பிரபாகரன் அரங்கத்துக்கு வந்தார். அவருடன் அன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா, பதுமன் ஆகியோரும் வந்தனர்.

விடுதலைப் புலிகளின் 25 ஆண்டு காலத்தில் இவ்வளவு பெரிய பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டியது இதுவே முதல் முறை.

மாலை 4.30 மணிக்குதான் கூட்டம் என்ற போதிலும், பத்திரிகையாளர்கள் அதிகாலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டனர்.

பல்வேறு வகையான கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதிலளித்த பிரபாகரன் எந்தக் கட்டத்திலும் உணர்ச்சி வசப்படவில்லை என்பது பத்திரிகையாளர்களின் மதிப்பீடு ஆகும். இங்கே சில கேள்விகளும் பிரபாகரன் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: ""தனிநாடு கோரிக்கையை கைவிட்டு விட்டீர்களா?''

பதில்: ""1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழீழக் கொள்கைக்கு ஆதரவாக எங்கள் மக்கள் தீர்ப்பு அளித்தனர். மக்கள் அளித்த அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் இப்போது போராடி வருகிறோம். எங்களுடைய தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதற்குச் சரியான சூழ்நிலைகள் இன்னமும் உருவாகவில்லை.''

""போர்நிறுத்தம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?''

""அமைதிக்கான எங்கள் அர்ப்பணிப்பில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம். அமைதி வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிற காரணத்தினாலேதான், நாங்களாகவே முன்வந்து நான்கு மாத காலம் போர்நிறுத்தம் செய்தோம்.''

""கடந்த காலத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சு போல இந்தப் பேச்சுவார்த்தையும் தடம்புரண்டு விடுமா?''

""முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் போன்று இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடையாது. முதலாவதாக இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக நார்வே நாடு உள்ளது. இரண்டாவதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமைதி வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறார்.''

""அமைதிக்கான விலை என்னவென்று தீர்மானமாகிவிட்டதா?''

""எங்களுடைய தனிநாடு கோரிக்கையை நாங்கள் கைவிட வேண்டும் என்பது அதன் விலையானால், அதற்குச் சரியான மாற்றுத் திட்டத்தினை இலங்கை அரசு அளிக்க வேண்டும். அதைப் பார்த்துதான் எங்களுடைய கோரிக்கையை நாங்கள் கைவிடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.''

""உங்களை பயங்கரவாதிகள் என்று கூறி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளனவே?''

""நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடும் போராளிகள். பயங்கரவாதத்துக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை விளக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதுவரை இதற்கான விளக்கத்தை யாராலும் அளிக்க முடியவில்லை.''

""இனப் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணவேண்டும் என்று கூறுவீர்களா?''

""திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.''

""இலங்கை அரசு அவ்வாறு தீர்வு காணுமா?''

""திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் திட்டத்தை சிங்கள அரசுதான் அளிக்கவேண்டும். சுயநிர்ணய உரிமைப் பிரச்னையில் தனது அரசியல் சட்டத்திலேயே விளக்கம் தந்த நாடு தென் ஆப்பிரிக்கா. தேசிய இனப் பிரச்னைக்குத் தனது அரசியல் சட்டத்தில் விளக்கம் தந்த நாடு ஸ்பெயின். கனடா நாடும் தனது நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்னைக்குத் தீர்வு கண்டுள்ளது. இந் நாடுகளைப் போன்று இனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டிய கடமை சிங்கள அரசுக்கும் உண்டு.''

""உங்கள் இயக்கம் மீது தடை இருக்கிறதே? எப்படிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பீர்கள்?''

""தடை நீக்கப்பட்டபிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.''

""ஏ-9 தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதே?''

""நன்றி சொல்கிறோம்.''

""சமாதானப் பேச்சு பற்றி உலகத் தமிழர்களின் கண்ணோட்டம்?''

""நீண்ட காலத்துக்குப் பிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து தமிழர்களின் ஆதரவும் எம் பக்கம் இருக்கவேண்டும்.''

""உங்களிடம் ராணுவக் கைதிகள் உள்ளனரா?''

""சிறிய அளவிலான தொகையினர்தான் கைதிகளாக உள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக, அவர்களைத் தங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகள் நீண்டகாலமாகவே செய்து தரப்பட்டுள்ளன.''

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...