Tuesday, November 24, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 175: புலிகளைத் தாக்கிய ஆழிப்பேரலைகள்!







By Paavai Chandran and published in Dinamani:

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுக்கோப்பு என்பது கருணாவின் நடவடிக்கையால் குலைந்தது. கிழக்கு புறக்கணிக்கப்படுகிறது என்ற புகாரைக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து விலகிய கருணா, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டிஎம்விபி) என்ற கட்சியைத் தொடங்கினார். 20 ஆண்டுகளாகப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு-அம்பாறை பகுதிகளின் பொறுப்பாளராக இருந்ததால், அவரின் கீழ் சுமார் ஏழாயிரம் போராளிகள் இருந்தனர். அவர்களில் 1400 பேர் மட்டும் அவருடன் இணைந்தனர். கிழக்குப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, புலிகள் வடக்கிலிருந்து புறப்படும் முன்பாகவே, கருணாவின் ஆட்கள் ராணுவ முகாமில் சரணடைந்து, கருணா படையணியாக உருவாக்கப்பட்டு, 20 ஆண்டுகால புலிகளின் யுத்த தந்திரங்கள் ராணுவத்துக்குப் போய்ச் சேர்ந்தன.

அவரைக் கட்டுப்படுத்த, போர் நிறுத்த ஒப்பந்தத்தை சேதப்படுத்தாத வகையில் அவரது குழுவினர் மீதான நடவடிக்கைகளை புலிகள் இயக்கம் மேற்கொண்டது. ஆனாலும் அவரின் வெளியேற்றப் பின்னணியில் ரணிலின் கட்சி இருக்கிறது என்பது புலிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. (இதைப் பின்னாளில் காமினி திஸ்ஸநாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸநாயக்கா, "புலிகள் இயக்கத்திடமிருந்து கருணாவை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம்' என்று நுவரேலியா தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது வெளிப்படுத்தினார். அக்கூற்றை ரணில் உள்ளிட்டவர்கள் மறுக்கவில்லை.)

தென் இலங்கை சக்திகளாலும், ராணுவத்தாலும் கருணா ஒரு விலைமதிப்பற்ற சொத்து எனக் கருதப்பட்டு, அவருக்கு ஊட்டம் அளிக்கும் வேலைகளில் மும்முரம் காட்டப்பட்டது. ("இலங்கையில் சமாதானம் பேசுதல்'-குமார் ரூபசிங்க-அடையாளம் வெளியீடு).


அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உருமய ஆகிய சிங்களவெறிக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கப்பட்டதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று, பிரதமராக மகிந்த ராஜபட்ச தேர்வு ஆனார் (4.4.2004).

இதே தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் கூடி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டு, 2001-ஆம் தேர்தலில் பங்கேற்றது போலவே இப்போதும் தேர்தலில் நின்றனர். இக்கால கட்டத்தில் புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் "புலிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்' என வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இத் தேர்தலில், 22 இடங்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்தில் இவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் முன்னணியாகச் செயல்பட்டனர்.


தேர்தலுக்கு முன்பு சந்திரிகாவின் விமர்சனம் என்பது வேறு; தேர்தல் முடிந்ததும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க அவரே ஆர்வம் காட்டி, நார்வே குழுவினரிடம் பேசினார். புலிகளிடமும், இடைக்கால தன்னாட்சி நிர்வாக சபை குறித்தும், நிரந்தரத் தீர்வு குறித்தும் ஒரே நேரத்தில் பேசலாம் என்றார்.

அது தவிர சந்திரிகா காலத்தில், 2000-ஆம் ஆண்டில் அவரது தயாரிப்பான தீர்வுத் திட்டத்தையும் கூடப் பரிசீலிக்கலாம் என்றும் விருப்பப்பட்டார்.

அந்த 2000-வது திட்டமும் இடைக்கால நிர்வாகம் சார்ந்ததுதான். அதே நேரத்தில் அதிபர் முறையை ஒழித்து, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான நாடாளுமன்ற அரசை நிறுவவும் முயன்றார். இலங்கை அரசியல் அமைப்புப்படி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும். வெஸ்ட்மினிஸ்டர் முறையிலான நாடாளுமன்ற அரசமைப்புக்குத் தாவினால் மீண்டும் ஒருமுறை பிரதமராகும் வாய்ப்பு அவருக்கும் கிடைக்கும் என்பது மறைமுகத் திட்டமாகும்.


2004-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை ஏற்படுத்திய இழப்புகள் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. அந்த சுனாமியும் கூட ஏற்கெனவே போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் முகாமிட்டது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தி, மிகப் பெருந்தொகையான கட்டுமானங்களையும் அடியோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு போன நிலையில், புலிகளுக்கே அதிக அளவில் இழப்பு ஏற்படுத்தியிருந்தது.

புலிப் போராளிகளில் 1500 பேருக்கு மேல் பேரலைக்குப் பலியானார்கள். அவர்களின் கடற்படைத் தளமும், ஏராளமான ஆயுதங்களும், கப்பல்களும் கடலலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.

திகைத்து நின்று வேடிக்கை பார்க்காமல் இலங்கை அரசு செயல்படுவதற்கு முன்பாகவே, புலிகள் களத்தில் இறங்கி, மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் தீவிரம் காட்டினர். இந்த சுனாமிக்குப் பிரபாகரனும் பலியானதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அரசு கெஜட்டும் அவ்வாறே செய்தி வெளியிட்டது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய பத்திரிகை ஒன்று "பிரபாகரன் மறைவு' என்றே செய்தி வெளியிட்டது. இதுபோன்ற செய்தியை அப் பத்திரிகை, இதற்கு முன்பும் ஒருமுறை வெளியிட்டது.

அந்தப் பகுதியில் இருந்த தூதரகங்கள் (இத்தாலி) தங்களால் முடிந்த நிதியை புலிகளிடம் அளித்தனர். இதனால் சந்திரிகா வெகுண்டெழுந்து, புலிகளுக்கு யாரும் நிதியளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். வரும் நிதிகளையெல்லாம் வாங்கிக் குவித்தார். இதனால் எழுந்த புலிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க "சுனாமி புனரமைப்பு ஒப்பந்தம் போடலாம்' என்று சமாளித்தார்.

சுனாமி பாதிப்புகளைப் பார்வையிட, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது கண்களில் புலிகளின் செயல்பாடுகள் படாமல் அதிபர் சந்திரிகா பார்த்துக் கொண்டார்.


சுனாமிக்குப் பின்னர், வெளிநாட்டு உதவிகளை வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மீட்பு, மறுகட்டுமானம், புனர்வாழ்வுப் பணிகளுக்காக தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பு (டர்ள்ற் பன்ள்ய்ஹம்ண் ஞல்ங்ழ்ஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங் -டபஞஙந)ஒன்று புலிகள்-சந்திரிகா அரசிடையே உருவானது (ஜூன் 2005).

இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள கரையோர மக்களுக்கு விரைவாக நிவாரணம் அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கில் மன்னார், வவுனியா மாவட்டங்கள் இதில் உட்படாத மாவட்டங்களாகும். ஆனாலும் போரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை. எனவே மறுவாழ்வுப் பணிகளில் இந்த மாவட்டங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தத் திட்டத்தின்படி நிதியளிப்பு கிடைக்கும் சூழ்நிலையில், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சந்திரிகாவின் அணியிலிருந்த ஜே.வி.பி. கட்சி வழக்குத் தொடர்ந்தது. இலங்கை உயர்நீதிமன்றம் இவ் வழக்கினை ஏற்று ஒப்பந்தத்திற்குத் தடைவிதித்தது. புலிகள் மற்றும் அரசுத்தரப்பிடையே (சந்திரிகா) மீண்டும் நெருக்கம் ஏற்படும் என்று நம்பிய நேரத்தில் நீதிமன்றத் தடை மூலம் இடையூறு நேர்ந்தது. எனவே வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளும் புனர்வாழ்வுப் பணிகளுக்கான நிதி யாவும் சிங்களப் பகுதிகளுக்கே சென்றது.

அதிபர் சந்திரிகாவின் பதவிக்காலம் நவம்பர் 2005-இல் முடிவுற இருந்தது. தந்தை பண்டாரநாயகா, தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா என்கிற சங்கிலித்தொடர் ஆட்சியதிகாரம் தன்னுடன் முடிவு பெறுவதை சந்திரிகா விரும்பவில்லை. எனவே, தனக்குப் பிறகு தனது தம்பி அநுரா பண்டாரநாயகாவை அதிபர் பதவிக்கு நிறுத்தப் பெரும் முயற்சியெடுத்தார்.

காலந்தாழ்ந்த இந்த முடிவினை மகிந்த ராஜபட்சவும், அவரது ஆதரவாளர்களும் முறியடித்தனர். சந்திரிகாவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தாவின் ஆதரவாளர்களே பல்வேறு பொறுப்புகளில் நிலைபெற்றிருந்ததால் சந்திரிகாவின் முயற்சி பலனளிக்காது போயிற்று. மகிந்த ராஜபட்சவை, அதிபர் வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.

சமாதான முயற்சியில் ரணில் பெற்றிருந்த நல்ல பெயர், அதிபர் தேர்தலில் அவருக்கு வெற்றியைத் தந்துவிடக்கூடாது என்பதற்காக சிங்களத் தீவிரவாதிகள் பெயரால், நார்வே நாட்டுத் தூதுவரகம் முன்பாக சவப்பெட்டிகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நார்வே நாட்டின் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம் நடத்துவது, பெüத்த இளம்பிக்குகளைக் கூட்டி வந்து ஆர்ப்பாட்டம் செய்வது உள்ளிட்ட செயல்களின் பின்னணியில் மகிந்த ராஜபட்ச இருந்தார் என "இலங்கையில் சமாதானம் பேசுதல்' (அடையாளம் வெளியீடு) என்னும் நூலில், அதன் ஆசிரியர் குமார் ரூபசிங்க தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது அன்றைய தேர்தல் காலச் சூழ்நிலையை விளக்கும்.

வாஷிங்டன் ஆலோசனைக் கூட்டத்தில் புலிகள் ஒதுக்கப்பட்டமை, அதுகுறித்துப் புலிகளுடன் ஆலோசனை நடத்தாதது, தொடர்ந்து அக்கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் கூறிய புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துகளும், "புலிகள் பேச்சுவார்த்தையை முறித்தால், கஷ்டப்படப்போவது அவர்கள்தான். நான் சர்வதேச சமுதாயத்துடனேயே சொல்வேன். புலிகள் அளிக்கும் வாக்குறுதிகளில் அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும்' என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியது, அதற்கு பாலசிங்கம் அளித்த விளக்கத்துக்கு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் அளித்த விமர்சனம், அமெரிக்காவின் கரையோரக் காவல் கப்பல் ஒன்றை பால்டிமோரில் நடைபெற்ற நிகழ்வில் மிலிண்டா மோரகொடா பெற்றது, கருணா பிரச்னையில், "சமாதான நடைமுறையின் ஓர் உற்பத்தி கருணா. யுத்தச் சூழ்நிலையில் அவரால் தற்போதைய முடிவை எடுத்திருக்கமுடியாது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியதன் மூலமும், நெடுஞ்சாலைகளைத் திறந்தவிட்டதன் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு மாற்று வழிகளை வழங்கும் சூழ்நிலையை நாம் உருவாக்கினோம்' என மிலிண்டா மோரகொடா கருத்து தெரிவித்ததன் மூலமும் (ஆதாரம்: மேலது நூல்), போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் ரணில் அரசு அக்கறை காட்டாதது, குறிப்பாக மீள்குடியேற்றம், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலிருந்து ராணுவம் வெளியேறாமை, கடலில் மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், தமிழர்கள் தேர்தலில் பங்கேற்க தயக்கம் காட்டினர். முடிவில் மகிந்த ராஜபட்ச குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார் (19-11-2005).


நாளை: ராஜபட்சவின் அதிரடிகள்

No comments:

Post a Comment

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...