Friday, November 20, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 171: தாய்லாந்தில் முதல்கட்டப் பேச்சுவார்த்தை!

By Paavai Chandran and published in Dinamani.

போர் நிறுத்த ஒப்பந்தமும், பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்பும் முடிந்த நிலையில், பாலசிங்கம் தனது சிகிச்சையைத் தொடர லண்டன் செல்லவேண்டியிருந்தது. வன்னிப் பகுதிக்கு அவர்கள் வந்திறங்கியபோது உண்டான இயல்பு சூழல் திரும்பும்போது இல்லாமல் போனது. இலங்கை கடற்படையினரின் தொல்லை காரணமாக சில இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் பாலசிங்கமும், அடேலும், நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அலுவலர் செல்வி.ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டலுடன் கடல் விமானத்தில் ஏறி மாலத்தீவு சென்றனர். அங்கே ஒருநாள் தங்கி, மறுநாள் லண்டன் சென்றனர்.

அதிபர் சந்திரிகாவின் பொறுப்பின்கீழ் இருந்த ராணுவத் தளபதிகள் ஒப்பந்தப்படி நடக்க மறுத்தார்கள். சில பொது இடங்களில் இருந்து வெளியேற மறுத்தனர். கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதியளிக்க கடற்படை மறுத்தது. புலிகளின் மீதான தடையும் விலக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜூனில், தாய்லாந்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள பிரபாகரன் விரும்பாததால், இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நார்வே தூதுக்குழுவினர், தாய்லாந்து பேச்சுவார்த்தை குறித்து விவாதிப்பதற்காக லண்டனில் பாலசிங்கத்தைச் சந்தித்தனர். அவர்களிடம், ஒப்பந்தத்தின் நிலை குறித்தும், ஒப்பந்தம் சரிவர நிறைவேற்றப்படாதது குறித்தும் பாலசிங்கம் கவலை தெரிவித்தார்.

இதனையொட்டி இலங்கையின் அரசுப் பிரதிநிதியான அமைச்சர் மிலிண்டா மோரகோடா நார்வே குழுவினருடன் வந்து பாலசிங்கத்தைச் சந்தித்தார். இதன் தொடர் நிகழ்வாக நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் இருதரப்புப் பிரதிநிதிகளும் சமாதானக் குழுவினர் முன்னிலையில் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்துப் பேசினர்.

இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது உள்ளிட்டவற்றை உடனடியாகத் தீர்ப்பது என்றும் முடிவானது. அதன்படி 2002, செப்டம்பர் 6-ஆம் தேதியன்று புலிகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரபோனே அரசிதழில் வெளியிட்டார்.

உடனடியாக, நார்வே சமாதானக்குழுவின் சார்பில் செப்டம்பர் 16-18 தேதிகளில் புலிகள்-அரசுத்தரப்புப் பேச்சை தாய்லாந்தில் நடத்த இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.


இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகளைப் போலவே, முடியாட்சியும் நாடாளுமன்ற ஆட்சிமுறையும் தாய்லாந்திலும் நடைபெற்றதே இந்த ஏற்பாட்டுக்குக் காரணம். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள "ஜோம் தாய்' என்ற பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான "அம்பாசடர் சிட்டி'யில் நடைபெற்றது.

இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மிலிண்டா மோரகோடா மற்றும் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டனர். புலிகள் சார்பில் பாலசிங்கம் தம்பதியினர் கலந்துகொண்டனர். தாய்லாந்து நாட்டின் நிரந்தர வெளியுறவு அமைச்சர் தேஜ் பன்னாக் தொடக்க உரையாற்றுகையில், "இலங்கையில் அமைதியும் சமாதானமும் நிகழ, எங்களின் பங்களிப்பாக இந்தப் பேச்சுவார்த்தை இங்கே ஆரம்பமாகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டும்' என்றார்.

அடுத்து பேசிய இலங்கை அமைச்சர் பீரிஸ், "இலங்கையில் 50 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, சர்வதேச அரங்கில் பேச்சுவார்த்தையாக வெளிப்பட்டிருக்கிறது. யுத்தத்தால் இப்பிரச்னை தீராது என்பது எங்களது முடிவு. அதில் உறுதியாக இருப்பதன் காரணமாகவே நார்வேயின் இந்த முயற்சியை ஏற்றோம் என்று தெரிவித்தார்.

பாலசிங்கம் பேசுகையில், "புதிய அரசு பொறுப்பேற்றதும் நார்வே தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளித்தது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அதனை நார்வே தலைமையில் அமையப்பெற்றுள்ள கண்காணிப்புக்குழு கண்காணிக்க ஏற்பாடாகியுள்ளது. இந்த முயற்சியானது இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்துப் பிரிவினரும் அமைதியான முறையில், அனைத்துவிதமான சலுகைகளையும் பெற்று சுகவாழ்வு பெற வகை செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தின் கூறுகள் அமையப் பெற்றுள்ளன. எங்களது மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக அமைதி முயற்சி இருக்கிறது. அவர்கள் நிரந்தர அமைதியையும், சுதந்திரத்தையும், நிலைத்த நீதியையும் விரும்புகிறார்கள்' என்றார்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை சத்தாஹிப் என்னுமிடத்தில் உள்ள கடற்படைதளத்தில் அமைந்த வளாகத்தில் நடைபெற்றது. இந்த இடம் அனைத்துவகையிலும் பாதுகாப்பான பகுதியாகும்.

புலிகள் தரப்பில், ஒப்பந்த அடிப்படையில், இலங்கை ராணுவத்தினர் இன்னும் பொதுவான இடங்களில் இருந்து வெளியேறாதது குறித்துப் பல சம்பவங்கள் பட்டியலிடப்பட்டன. இதற்கு மிலிண்டா மோராகோடா, "இதனை இருதரப்பினரும் இணைந்த குழு அமைத்து விரைவாக நடைமுறைப்படுத்தலாம்' என்றார்.

தொடர்ந்து பாலசிங்கம் பேசுகையில், "நிர்வாகம் செம்மைப்படுத்தப்படவும், போர்க்காரணங்களினால் வெளியேறிய மக்களை மீண்டும் குடியமர்த்தவும், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு போன்றவைகளைக் கவனிக்கவும், அன்றாடப் பணிகளை நிறைவேற்றவும் இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவது அவசியம்' என்றும் வலியுறுத்தினார்.

இந்த யோசனைக்கு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், "இது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகக் கருதப்படும். இத்திட்டத்தை அதிபரோ, உயர்நீதிபதியோ ஏற்கமாட்டார்கள். இப்படியொரு நிலை வந்தால் அதிபர் இந்தப் பிரச்னையில் குறுக்கிட ஆரம்பித்துவிடுவார்' என்றார்.

நார்வே குழுவினர் அரசுத் தரப்புக்கு சிறிதுகால அவகாசம் அளிக்கவேண்டும் என புலிகள் தரப்பினரிடம் கேட்டுகொண்டனர்.

பாலசிங்கம், "இதுபோன்ற நடவடிக்கைகளால் பிரபாகரன் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்' என்று கூறியதற்குப் பதிலாக பீரிஸ், "இது வேண்டும் என்று ஏற்படுத்தப்படுகிற தாமதம் அல்ல' என்றார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், புலிகள்-அரசுத்தரப்பு இணைந்து செயல்படுவது (ஜாயிண்ட் டாஸ்க் ஃபோர்ஸ்) என்பதே முக்கிய முடிவாக அமைந்தது. இது தவிர, இடைக்கால அரசு அல்லது நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இருப்பது அரசமைப்பு என்பதும் அதிபர் என்பதும் தெளிவாயிற்று. இதனை மீறி ரணில் விக்ரமசிங்கேவினால் எதுவும் செய்யமுடியாது என்பதும் புரிந்துபோனது.

முதல்கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வன்னி வந்த பாலசிங்கம், புலிகள் தலைவர் பிரபாகரனிடம் விளக்கினார்.

பிரபாகரனும், "ரணில் விக்ரமசிங்கேவினால் அதிபரை எதிர்க்கமுடியாது, அவ்வளவுதானே!' என்றார். "ஆமாம்!' என்ற பாலசிங்கம், "உலக அளவில் நாம் சமாதானப்பேச்சின் பக்கம் உறுதியாக நிற்கிறோம் என்பது பதிவாகியிருப்பது ஒரு சாதகமான அம்சம்' என்றார்.

அரசுத் தரப்பிலோ வேறுவகையான கண்ணோட்டம் இருந்தது.

"போர்நிறுத்தத்தால் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதித்துறையான ஆடைத் தயாரிப்பு, அமெரிக்காவுடனான தேயிலை வர்த்தகம் மற்றும் முதலீடு உடன்படிக்கை வரைவு மற்றும் முழு வடிவிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு வழியமைத்த ராபர்ட், செலிக் அதிகாரிகளின் வாக்குறுதி மற்றும் பிரசல்ஸில் கிடைத்த சலுகைகள் இவையெல்லாம் சாத்தியமாயின.

அதற்கு முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலையையும், தடைகளையும் இல்லாமல் செய்தது' என்கிறார் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசின் சார்பில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (இலங்கையில் சமாதானம் பேசுதல்-கலாநிதி குமார் ரூபசிங்க, பக்.184, பாகம்-2).

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...