Thursday, November 19, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 170: "நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்!


By Paavai Chandran and published in Dimanani


பிரபாகரன் பேட்டி தொடர்கிறது...

""சமாதானப் பேச்சுக்கு அமெரிக்கா இடையூறு செய்கிறதா?''

""நான் அப்படி நினைக்கவில்லை''

""மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்ததால் ஆயுதங்கள் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு சமாதானத்துக்கு வந்ததாகக் கருதலாமா?''

""ராணுவத்தினருடன் நடத்தும் மோதல் மற்றும் போர்களில் இருந்தே எமக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஆனையிறவுத் தாக்குதலிலும், முல்லைத்தீவு தாக்குதல்களிலும் சிறியரக ஆயுதங்களில் இருந்து கனரக ஆயுதங்கள் வரை பெற்றிருக்கிறோம்''

(ராணுவத்தினரிடமிருந்தே ஆயுதங்களைப் புலிகள் பறித்தனர் என்பது புரிந்து, பத்திரிகையாளர்களிடையே சிரிப்பலை எழுந்தது).

""இந்தியா உங்கள் மீது விதித்துள்ள தடை குறித்து?''

""எங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும். இதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாங்கள் வற்புறுத்துவோம். இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம். நாங்கள் இந்தியாவைப் புறக்கணிக்கவில்லை. சமாதானப் பேச்சுகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முன்வரவேண்டும் என்றே விரும்புகிறோம். இந்திய அமைதிப்படை எங்கள் மக்களுக்கு வேதனைதரும் நினைவுகளை அளித்தபோதிலும் எங்கள் மக்கள் இப்போதும் இந்தியாவை நேசிக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் பிராந்திய வல்லரசாக இருந்துவரும் இந்தியாவுடன் எங்களது உறவு கலாசார ரீதியானது''

""மலையகத் தமிழர்கள் பற்றி?''

""இந்திய வம்சாவளித் தமிழருடனான உறவையும் வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். எங்களைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளோம்''

""உங்களைச் சந்திக்க வரும் மலையகப் பிரதிநிதிகள் உண்மையான பிரதிநிதிகள் அல்லவே!''

""மலையகத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேசாமல் வேறு யாருடன் பேசுவது?''

""இடைக்கால நிர்வாக அரசு கோரிக்கை ஏன்?''

""இன்றைய சூழ்நிலையில் ரணில் அரசால் நிரந்தரத்தீர்வை நோக்கிச் செல்லமுடியாது. அவர் பிரதமர் என்றாலும்; அதிபர் அல்ல. அதிபரிடம் அதிகாரம் புதைந்துள்ளது. எனவேதான், இடைக்கால நிர்வாக அரசு என்ற திட்டத்தை வலியுறுத்துகிறோம்''

""வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் காலி செய்யவேண்டும் என்று கூறப்பட்டதே?''

""வடபகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இஸ்லாமியர், மலையகத் தமிழர் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தப்படும்''

""முஸ்லிம்களில் யாரும் பிணைக்கைதிகளாக உள்ளார்களா?''

""அப்படி யாரும் இல்லை. ஆதாரம் இருந்தால், பெயர் விவரங்கள் இருந்தால் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வனிடம் கொடுக்கலாம்''

""முஸ்லிம்கள் வடபகுதியில் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்?''

""யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டபின் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு தமிழர்களுடன் இணைந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள் என உறுதியளிக்கிறோம்''

""அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்து?''

""செப்டம்பர் 11-இல் அமெரிக்கா மீதான தாக்குதலை நாங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளோம். அமைதியை விரும்பும் மதத்தின் பேரால் மனித உயிர்கள் கொல்லப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாமும் இப்போது சமாதான முயற்சியில் வெளிநாட்டு அரசின் உதவியுடன் ஈடுபட்டுள்ளோம். இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை''

""தற்போதைய முயற்சிகள் குறித்து...''

""தற்போதைய சமாதான முயற்சிகளில் திருப்தியடைகிறேன். ஸ்ரீலங்கா பிரதமரும் உறுதியான முடிவுகளை எடுக்கிறார். அதன்மூலம் சமாதான முயற்சிகள் வெற்றிகரமாக நகரும் என்று நம்புகிறேன்''

""சுயாட்சி வழங்கப்படாது என்றால்?''

""சுயாட்சி, சுயநிர்வாகம் போன்ற எங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே சுயநிர்ணய உரிமையை நாங்கள் வலியுறுத்தினோம். அதாவது தமிழர்களுக்கான சுயாட்சி அல்லது பிரிவினை என்பதே இதன் சாராம்சம். அரசு சுயநிர்வாகத்தைத் தொடர்ந்து மறுத்தால் பிரிவினைதான் வழி''

""அப்படியென்றால் சமாதானத்தை எதிர்க்கிறீர்களா?''

""பொதுவாக எங்களது போராட்டம் சமாதானத்தில்தான் ஆரம்பித்தது. எங்களுடைய முந்தைய தலைவர்கள்கூட சமாதான வழியில் போராடி எங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் தொடர்ந்தும் அவர்களுடைய அந்த சமாதான முயற்சிகள் மறுக்கப்பட்டு இனவாதம் எங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டதால் நாங்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமாதான முயற்சிகளைத் தவிர்த்ததில்லை''

""பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்?''

""தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்''

""உங்களது சமாதானப்பேச்சு ஆர்வம், அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்ப்பையொட்டி அமைந்ததா?''

""அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பே சமாதானத்துக்கான நல்லெண்ண முயற்சிகளாக ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை நாங்கள் அறிவித்துவிட்டோம்''

""வடக்கு-கிழக்கு நிர்வாகம் யார் பொறுப்பில் இருக்கும்?''

""பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப நிலையே தற்போது உள்ளது. நிர்வாகம் பற்றிப் பேச இயலாது''

""இடைக்கால அரசு குறித்து?''

""அதுகுறித்து தாய்லாந்தில் பேச உள்ளோம்''

""ராஜீவ் காந்தி கொலை குறித்து...''

""ராஜீவ் காந்தி கொலை, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வேதனை தரும் துன்பியல் சம்பவம் ஆகும்''

""ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உங்களைப் பிடிக்க, சர்வதேச போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளதே?''

""ராஜீவ் காந்தி கொலை வழக்கு இருக்கும்வரை இதுகுறித்து கருத்து கூறமுடியாது''

""முந்தைய பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தப் பேச்சுவார்த்தைக்கும் என்ன வித்தியாசம்?''

""இது முந்தைய பேச்சுவார்த்தைகளைவிட வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கும். ஏனெனில் இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பாக நார்வே நாடு தொடர்பாளராகப் பங்கேற்றுள்ளது. இம்முறை பேச்சுவார்த்தை ஓரளவு சுமுகமாக இருக்கும் என்றே நம்புகிறோம்''

""பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா?''

""சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர் அப்படி ஏதும் செய்தால் அதைப் பார்த்துக்கொள்வது ரணிலின் பொறுப்பு''

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சிங்களப் பத்திரிகையாளர் ரஞ்சன் பெரேரா கூறுகையில், "பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்ச்சியாகும். 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு செய்தியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்து, மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு மூலம் உலகில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரமுடிந்தது. பிரபாகரனைப் பற்றி எவ்வளவோ கதைகளும், கற்பனைகளும் பரவியிருந்த வேளையில் செய்தியாளர்கள் மாநாட்டில் மிகச் சாதாரணமாகக் காட்சியளித்தார். அவரது ஒவ்வொரு சொல்லும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளைப் போக்கின என்றே சொல்ல வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார் (நன்றி: தென்செய்தி).

No comments:

Post a Comment

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...