Monday, October 12, 2009

வன்னியில் சிங்களவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர்: பசில் ராஜபக்ச



வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போது சிங்கள மக்களும் அதில் இடம்பெறுவர் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா அரச தலைவரின் சகோதரரும் 'வடக்கின் வசந்தம்' சிறப்புச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ச. இருப்பினும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் வார ஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் உள்ள முக்கிய விபரம்:
வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து சமூகத்தவர்களும் அங்கு மீளக்குடியமர்த்தப்படுவார்கள். தாங்கள் முன்னர் அங்கு தங்கி இருந்தார்கள் என நிரூபிக்கும் எவரும் குடியமர்த்தப்படுவார்கள். ஆனாலும் முன்னுரிமை இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களுக்குத்தான். எல்லா சமூகத்தவர்களும் மீள்குடியேற்றப்படுவார்கள். ஏற்கனவே முஸ்லிம்கள் பலர் வடபகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். சில சிங்களவர்களும் கூட வவுனியா வரைக்கும் வந்து குடியேறி உள்ளனர். இதில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்படுவதான குற்றச்சாட்டுக்கள் எழ வாய்ப்பு இல்லை. ஏனெனில் முன்னர் இப்பகுதிகளில் இல்லாதவர்கள் மீளக்குடியமர்த்தப்பட மாட்டார்கள்.
'வடக்கின் வசந்தம்' சிறப்பு அணியினர் மீள்குடியமர்வு விடயத்தினை மட்டுமே கையாள்கிறார்கள். மற்றையது குடியேற்றம் தொடர்பானது அதற்கும் எமக்கும் தொடர்பில்லை.
இந்தப் பகுதியில் இருந்து வெளியேறியவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மட்டுமே நாம் மீள்குடியமர்வுப் பணிகளை மேற்கொள்கின்றோம். அதில் நாம் இன மற்றும் மத அடிப்படையிலான வேறுபாடுகளைப் பார்க்கவில்லை.

முகாம்களின் நிலைமை
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத தடுப்பு முகாம்கள் என்று இடம்பெயர்ந்தோர் தங்கி இருக்கும் நலன்புரி நிலையங்களைச் சொல்வதில் அர்த்தம் இல்லை. அங்கே யாரும் தடுத்து வைக்கப்படவில்லை. மருத்துவமனைகள், வங்கிகள், தபால் அலுவலகங்கள், தொலைத்தொடர்பு வசதிகள், விளையாட்டு வசதிகள் என அனைத்து வசதிகளும் தடுப்பு முகாம்களில் கிடைக்கின்றனவா?
நாம் இந்த விடயத்தைச் சரியாக முகாமை செய்து வருகின்றோம். இடம்பெயர்ந்த மக்கள் அரசின் கவனிப்பில் அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி இல்லை எனில் பலர் காணாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் வரும். மிகக் கவனமாகப் பதிவுகளை நாம் வைத்திருக்க வேண்டி இருக்கிறது.
மருத்துவமனையில் நீங்கள் சேர்க்கப்பட்டால் மருத்துவரின் அனுமதி இன்றி நீங்கள் வெளியேறிச் செல்ல முடியாது. இருக்கக்கூடிய ஒரே மாற்று வழி சொந்தப் பாதுகாப்பில் நீங்கள் வெளியே செல்வது. நலன்புரி நிலையங்களை தடுப்பு முகாம்கள் என்று அழைக்க முடியாது.
கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை, அதனால் பல முறைப்பாடுகளை நாம் பெற்றோம். அவர்களது தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டன. அவர்களது வீடுகளில் திருட்டு இடம்பெற்றது. தமது பிள்ளைகளை துணைப் படைக் குழுக்கள் பிடித்துச் சென்றதாகப் பெண்கள் முறையிட்டனர். தமது சொந்தப் பாதுகாப்புக்காக தம்மைப் பாதுகாக்குமாறு அந்த மக்கள் எம்மிடம் கேட்டார்கள்.


யாரை வரவேற்பது என மக்கள் தீர்மானிப்பார்கள்
இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் செல்ல வேண்டி இருப்பவர்கள் அங்கு செல்வது வரவேற்கப்படுகிறது. உங்கள் வீடுகளுக்குக்கூட நீங்கள் விரும்பாதவர்கள் வருவதை அனுமதிப்பது இல்லைத் தானே.
ஆனால் யார் விருப்பத்துக்கு உரியவர்கள் யார் விருப்பத்துக்கு உரியவர்கள் அல்லர் என்பதை முகாம் மக்களே தீர்மானிப்பார்கள். இடம்பெயர்ந்த மக்கள் பற்றி உண்மையில் கவலைப்படுபவர்கள் மற்றும் அவர்களுக்குப் பயன்தரும் விடயங்களைச் செய்பவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
முகாம்களில் பெற்றோரை அல்லது ஆதரவற்ற நிலையில் 1,064 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரது பிரச்சினைகளும் நீதிமன்றங்கள் ஊடாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன. சிலர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அரச தலைவரின் மனைவியும் சிறிலங்காவின் முதல் பெண்மணியுமான சிராந்தி ராஜபக்ச வவுனியாவில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
முகாம்களில் பிரிந்திருந்த 18 ஆயிரத்து 800 பேர் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். இப்போது நாம் குடும்பங்களைச் சேர்த்து வைக்க வேண்டி உள்ளது. தமிழ் பேசக்கூடிய 5 காவல்துறைக் குழுக்கள் இந்த விடயத்தில் பணியாற்றி வருகின்றன.


அரசு மீதான விமர்சனங்கள்
எந்த ஒரு அரசும் சிறிலங்கா அரசின் மீது தெரிவிக்கும் விமர்சனங்களை நாங்கள் வரவேற்கின்றோம். அரச அதிபர் கூட அப்படித்தான் நினைக்கிறார் என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் அறிந்து வைத்திருக்கின்றேன். அதேசமயம், அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் சுதந்திரம் அரசுக்கு இருக்கின்றது.
அப்படி நடக்கும்போது அரசு அச்சுறுத்துகின்றது என்று அவர்கள் கூறுகின்றது. அதுதான் எமக்கு இருக்கும் பிரச்சினை.
ஊடகவியலாளர்களிடம் அதிகாரம் இருக்கின்றது. அதனை சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிராகப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் தனிப்பட்ட நபர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் எதையாவது எழுதிவிட்டால் அதனைத் திரும்பப் பெற முடியாது.


சீனாவுடனான உறவு
சீனா தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. சீனா மட்டுமல்ல இந்தியா மற்றும் ஏனைய நாடுகளும் எமக்கு உதவி வருகின்றன. அவற்றில் சீனா மிகப் பெரிய வளமாக இருக்கலாம். இந்த உறவு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நட்பு சார்ந்தது.
நாம் சீனாவுடன் நீண்ட காலமாகவே உறவு வைத்திருக்கின்றோம். ஐ.நா.வுக்கு வருவதற்கும் அனைத்துலக மன்றங்களிலும் சீனாவிற்கு ஆதரவளித்திருக்கின்றோம். சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைத் தொடங்கிய முயற்சில நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று.
இந்தியாவும் கூட இங்கு மிகப் பெரியளவில் செயற்படுகின்றது. இந்தியாதான் எமக்கு முன்னுரிமையானது என்பதை அரச தலைவரே கூடத் தெரிவித்திருக்கிறார்.


தீர்வுத் திட்டம்
நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிச்சயம் ஒரு அரசியல் முன்மொழிவு தேவை. அரச தலைவர் அப்படித்தான் சிந்திக்கிறார். அனைத்து கட்சிக் குழுவின் தீர்வுத் திட்டம் கூட வந்துள்ளது. ஆனால், கடைசியில் எல்லாவற்றையுமே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்கான மக்களின் கருத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அல்லது அரச தலைவர் தேர்தல் மூலம் பெறப்படும். மக்கள் அதனை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.


Source: www.puthinam.com

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...