Thursday, December 16, 2010

தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம்

Source:http://www.eelampress.com/2010/11/5272/

கரும்புலிகளின் “எல்லாளன் நடவடிக்கை” வெற்றிக்களிப்பில் இருந்த எமக்கு 02.11.2007 அன்று விடியக்காலை தலையில்  பேரிடி விழுந்தது. “தமிழ்ச்செல்வனின் இடத்துக்கு அடிச்சிட்டானம்” என்ற காற்று வழிச் செய்தி கேட்டு பறந்தோடிப் போன எமக்கு தோழர்களுடன் சேர்ந்து தன் மூச்சையெல்லாம் எம்மிடம் தந்துவிட்டு விடுதலை மூச்சாகிப்போன எம் தமிழ்ச்செல்வத்தைத் தான் கண்டோம்.
“நீ வீரச்சாவு அடைஞ்சா அக்கா உன்னைப் பற்றி எழுத நிறைய வைச்சிருக்கன்” என்று சிரிப்படன் கூறிய தம்பியைப் பற்றி எழுத வந்திட்டுதே என்று நினைக்கவே இதயம் கனக்குது அவன் உயிருடன் இல்லை என்பதனை இன்று கூட எம் மனசு ஏற்குதில்லை ஒரு போராளி கூறியது போல் அவன் எம்மைவிட்டு பிரிந்து விட்டான் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல அவன் (உயிர்) எம்மைவிட்டு பிரிய வில்லை என்பதும் அதேயளவு உண்மை தான்.
என் ஆழ்மனசில பதித்த அவன் சார்ந்த விடயங்கள் எழுதுவம் என்றால் எங்கிருந்து தொடங்குவது? ஆரம்ப நாட்களில் இருந்தா…? என மனசு போராட, என் விழியை நிமிர்த்திப் பார்த்தால் மன்னால் நின்று சிரிக்கின்றான்
“அக்கா இந்திய இராணுவ காலத்துச் சம்பவங்களை எழுதிவை வரலாற்றுக்கு உதவும்” என்று அன்புக் கட்டளையிட்டவனுக்கு எழுதவேண்டி வந்திட்டுதே என மனசு குமுறுகிறது என்றாலும் எழுதவேண்டும் என்ற ஓர் உந்தல் இதோ என் மனதில் பதிந்த அவன் பற்றிய நினைவுகள்

1986ம் ஆண்டு வல்வை மருத்துவமனைக் கடமையில் இருந்து ஒரு நாள் காலை லெப்.கேணல் டேவிற்றுடன் ஓர் பையன் 18 19 வயது இருக்கும் தலைநிறைய முடியும் முகம் நிறைய சிரிப்புமாக என் முன்னால் நின்று “வணக்கம் டொக்டர் அக்கா” என்றான். “ஆள் தினேஸ் தென்மராட்சியில் இருந்து வாரார் உங்களைப் பார்க்க வேணும் என்றார். அது தான் கூட்டிற்று வந்தனான்” என்றான் டேவிற். அந்த முதல் சந்திப்பிலேயே தன் பாசவலைக்குள் என்னை இழுத்துவிட்டான் அந்த குட்டித் தம்பி தினேஸ் அன்றில் இருந்து தன் இறுதி மூச்சு வரைவற்றாத பாசத்துடன் என்னுடன் பழகிய உயிர் தான் அந்த பாசச்செல்வம்

1987ம் ஆண்டு மே மாதம் தொடங்கி விட்டபின் வடமராட்சி கைப்பெற்றவென “லிபேரெசன் ஒப்ரேசன்” போர் தொடர, இராணுவம் நகர, வல்வை மருத்துவனையில் இருந்து நகர்ந்த நான் மந்திகை முள்ளியூடாக கொடிகாமம் வந்து இறங்க. பேருந்து தரிப்பில் நின்ற யோகி அண்ணா என்னைக் கூட்டிப்போய் ஒப்படைத்தது தினேசிடம் தான். பொறுப்பேற்ற என்னை பத்திரமாக இருக்க ஒழுங்கு செய்து மருத்துவ சேவை செய்ய வசதி பண்ணி தந்தது மட்டுமல்லாமல் எங்கள் தேசியத் தலைவரையும் சந்திக்கும் பாக்கியத்தையும் ஏற்படுத்தி தந்து வாழ்வில் மகிழ்வின் எல்லைக்கு என்னைக் கொண்டு சென்றவனும் அந்தப் பொறுப்புச் செல்வம் தான்
1987ம் ஆண்டு இறுதிப் பகுதிக்கு இந்திய ஆக்கிரமிப்புக் காலம் எனக்கு ஆபத்து என அறிந்து தென்மராட்சியில் இருந்து இராணுவ வேலிகளை ஊடறுத்து முள்ளி வெளியூடாக வந்த போது இராணுவத்தினரை எதிர்கொண்டு மோதி ஓட்டி வந்த ஈருருளியையும் பறிகொடுத்து நடைப் பயணமாக வந்து என் இருப்பினை கண்டவுடன் முட்கீறிய காயங்கள், கிழிந்த சாறம், கலைந்த கேசம், சவரம் செய்யாத முகம் எல்லாம் ஒன்று சேர, கண்ணில் நிறைந்த நீருடன் சிரிப்பில் அன்புச்செல்வத்தைக் கண்டேன்
1988 – 1989ம் ஆண்டு காலப் பகுதியில் நோய் வாய்ப்பட்ட, காயமுற்ற தன் தோழர்களை சிகிச்சைக்காக வடமராட்சிக்கு அனுப்பிவிட்டு அவர்களின் உடல் உள நிலைபற்றி நேரில் வந்து விசாரிக்கும் தருணங்களிலும், பின்னாளில் நவமறிவுக்கூடம், சிறீ முகாம், மயூரி முகாம் போராளிகளிடமும் சென்று அவர்களின் உடல் நலம் பற்றி விசாரிக்கின்ற போதிலும் இனியவாழ்வு இல்லம், அன்புச்சோலை, மூதாளர் பேணலகம் போன்ற இடங்களிற்கு விசேட தினங்களில் சென்று அன்பினைப் பரிமாறுகின்ற போதிலும் அக்கறைச் செல்வத்தைக் கண்டேன்.
இந்திய இராணுவத்தினருடன் சமர் நடக்கையில் உங்கட தம்பியவே மலைக்கு முட்டை எறிகினம் இருந்து பாருங்க என்ன நடக்கும் என்று கூறியவர்களுக்கு முன்னால் தலைவரின் ஆசியுடன் ஆலோசனைகளையும் பெற்று வீறு நடைபோட்டு சளைக்காது போராடிவென்ற போதும் யாழ்.மாவட்ட தளபதியானவுடன் மருத்தவப் பிரிவினைப் பொறுப்பெடுத்து அதன் விரிவாக்கத்துக்காக மருத்துவப் போராளிகளை வளர்ப்பதிலும் மருத்துவர்களை உள்வாங்குவதிலும் காட்டிய தீவிரம் இடைவிடாது குட்டிக் குட்டித் தாக்குதல்களை சளைக்காது எதிரிக்கு கொடுப்பதில் காட்டிய வீரம் என்பனவும் அவனை ஒர் உறுதிச் செல்வமாக எடுத்துக்காட்டியது
ஆனையிறவு பெரும்போரில் (1991ம் ஆண்டு) நெஞ்சில் பாரிய விழுப்புண் ஏற்றபோதும், யாழ்தேவி சமரில் மூக்கில் செல்துண்டு செருகி நின்ற போதும் அதன் பின்பு தவளைத் தாக்குதலின் போது உடலில் இருபத்தியாறு காயங்கள் பெற்ற வேளையிலும் கூட, முகத்தில் வேதனையோ அன்றி அழுகையோ வெளிப்படாது புன்முறுவல்  தென்பட அங்கு அதிசய செல்வத்தை கண்டேன்
தவளைத் தாக்கதலில் விழுப்புண் ஏற்று அதி தீவிர சிகிச்சை பிரிவில் குற்றுயிராகக் கிடந்து துடித்த போது அண்ணனின் அன்புக் கடிதம் “என் செல்லத் தம்பிக்கு” என விழித்துத் தொடங்கி தொடர அதைத் திரும்பத்திரும்ப வாசித்து உடல் உளம் புத்துயிர் பெற்றதினை அருகில் இருந்து பார்த்த எமக்கு அங்கு நம்பிக்கை செல்வம் தெரிந்தான்

உங்கட தம்பிக்கு சில சமயம் இனி நடை சாத்தியப்படாது சற்கர நாற்காலிதான் தஞ்சம்” என்ற மருத்துவ அறிஞரின் கூற்றை பொய்யாக்கி மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து தன் அன்பு (கப்டன் முகிலன்) முய்யா” வின் உதவியுடன் அங்குலம் அங்குலமாக படிப்படியாக முன்னேறி ஒரு தடியில் வீறு நடைபோட்ட போதும் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டினை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்வதற்காக பல சுற்றுப் பேச்சுக்களுக்கு ஏறி இறங்கிப் பறந்த போதும் நாம் அங்கு விடா முயற்சிச் செல்வத்தைக் கண்டோம்

பாலா அன்ரியின் மழலைத் தமிழை ரசிப்பான், அவ சமைத்துக் கொடுத்த மீன் சொதியையும் ருசிப்பான், அம்மாவின் கீரைக் கறிக்;கும்; பால் கத்தரிக்காய் கறிக்கும் சப்புக் கொட்டுவான் நாம் ஏசினாலும் சிரிப்பான், பகிடிவிட்டால் கெக்கட்டம் போட்டுச் சிரிப்பான் அதிலும் பாலா அங்கிள் சும்மா கதைச்சாலே கண்ணில் நீர்; வரச் சிரிப்பான் இக் கணங்களில் எல்லாம் அவனை பிள்ளைச் செல்வமாக பார்த்தோம்

1995ம் ஆண்டு யாழ் இடப்பெயர்வின் பின்பு சாவகச்சேரியில்  இரவு பகலாக சூறாவளியென சூழன்று மக்களுக்கும் போராளிகளுற்கும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததுடன் காயமடைந்த  போராளிகளிற்குரிய மருத்துவ சிகிச்சை ஒழுங்குகளையும் செய்து தந்ததோடு மட்டுமல்லாமல் வன்னிக்கு வந்த பின்னர் மக்களுக்கும் புலிகளுக்குமான  மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதற்காக தலைவரின் ஆலோசனையைச் சுமந்து கொண்டு இராணுவ மருத்துவமனைகளையும், திலீபன் மருத்துவ மனையையும் அமைத்து காயமடைந்தவர்களுக்கும் உரிய சிகிச்சையை மேற்கொள்ள தகுந்த வழி சமைத்தவன் எங்கள் திறமைச் செல்வம் தான்

தன் நிர்வாகத்துக்கு கீழ் உள்ள போராளிகளை அணுகும் விதத்திலும், மாறாத புன்னகையுடனும், உரிமையுடன் நெருங்கும் விதத்திலும் சேர்ந்திருந்து கூழ் குடிக்கும் கணங்களிலும் தோழமைச் செல்வத்தைக் கண்டோம்
எனக்கோர் அன்புத் துணையை தேர்தெடுத்த செய்தியை முதன் முதல் எமக்க கூறி சேர்ந்து ஆனந்தப்பட்ட போதிலும் பின் திருமண மேடையில் எம் பெரும் தலைவன் அன்புக் கட்டளைக்கு இணங்க அன்பத் தம்பியாக திருமணத் தோழனாக என் தாயின் அருகில் இருந்து எம்மை மனம் நிறைந்த புன்னகையுடன் வாழ்த்திய போதிலும் எடுத்ததிற்கெல்லாம் ரேகாவை அழைக்கும் தருணங்களிலும் அவன் உரிமைச் செல்வமாக மிளிர்ந்தான்

பாசத்தலைவனின் ஆசியுடன் நடந்தேறிய அவன் திருமண பந்தத்தின் பின்பு வீட்டிற்கு வர நாம் மலர் தூவி வரவேற்க துணையுடன் சேர்ந்து நின்று சிரித்த சிரிப்பிலும் பின் நாளின் ஒளி, அலை இசையுடன் புன்னகையையும் சேர்த்து உலாவரும் போதிலும் ஒளிச் செல்வத்தைக் கண்டோம்
“என்ன விசர் கதை கதைக்கிறாய்” “வாரும் ஐசே உமக்கு இன்டைக்கு இருக்கு” “நீர் பார்த்த வேலையப்பா இது” என ஏசும் செல்லக் கண்டிப்பில் இருந்து ஆள் சேர்ப்பு ஒன்று கூடலில் பட்டென வந்து போகும் பெரும் கோபம் வரை கண்டிப்புச் செல்வத்தைக் கண்டோம்
பேச்சு வார்த்தை மேசையிலே தேசத்தின் குரல் பாலா அண்ணையுடன் 
சேர்ந்திருந்து தலைவர் சொல்லித்தந்த பாடங்களை வைத்தே எதிர்த் தரப்பினை திக்கு முக்காட வைத்த சம்பவங்களை நகைச்சுவையுடன், ஏம்மை ஒன்று கூட்டி வைத்து சொல்கையில் குதூகலச் செல்வத்தைக் கண்டோம்
“வீட்டுக்கொருவர் நாட்டைக்காக” என்பதற்கு இணங்க மேற்கொண்ட ஆள் சேர்ப்பின் போது இடையில் வந்த நெருக்கடிகள், இடையூறுகள், அத்தனையையும் தாண்டி உறுதிதளராது பணியில் வெற்றி பெற்று விடுதலைக்கு பலம் சேர்த்த போதிலும் அரசியல் கட்டமைப்பினை காலத்துக்கு கேற்ப கோட்டம், வட்டம் என நிர்வாகங்களையும் ஒரு குடையின் கீழ் ஒருகிணைத்து பணியாற்ற திட்டம் போட்ட போதும் வெற்றிச் செல்வத்தைக் கண்டோம்
சின்னத்தங்கச்சி நிற்கிறாளா என உரிமையுடன் கூப்பிட்டு கீர்த்திகாவுடன் (nஐயசிக்குறு) சமரில் கப்டன் கீர்த்திகா ஆகிவிட்டாள் செல்லச் சண்டை பிடிக்கும் போதிலும் அவளின் ஆற்றல் திறனைக்கண்டு கொண்டு ராயூ மாஸ்டரின் சிறுத்தை படையணிக்கு அவளை மருத்துவ போராளியாக அனுப்ப என்னிடம் அக்கறையுடன் கேட்டு எடுத்த கணத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக பெண் போராளிகளை பாசமாக “ப
ிள்ளையள்” என விழிக்கும் போதும் ஒன்று கூடல்களில் பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் கதைக்கும் தருணங்களிலும், பிள்ளைகள் வெற்றி படைக்கும் வேளையில் அவர்களைக் கூப்பிட்டு “திறமையான வேலை” என வாய் நிறை சிரிப்புடனும் மனம் நிறைந்த மகிழ்வுடனும் பாராட்டும் வேளையிலும் சகோதர செல்வத்தைக் கண்டோம்
எப்போதும் தலைவரின் அருகில் இருந்து அவரது ஆற்றல் திறன் வெளிப்பாடுகளை உள் வாங்கி படிப்படியாக வளர்த்ததோடு மட்டுமல்லாது தனது அனுபவப் பகிர்வுகளை போராளிகள் மத்தியில் கொண்டு செல்லும் போது அண்ணை சொன்னவர் இது அண்ணையின் எதிர்பார்ப்பு இது தலைவரின் சிந்தனையின் வெளிப்பாடு என அடிக்கொரு தடவை அண்ணை அண்ணை எனக் கதைக்கும் போது அதில் நாம் அண்ணனின் தம்பிச் செல்வத்தைக் கண்டோம்

புலம்பெயர் மக்கள் கடும் பனியிலும், குளிரிலும் இரவு பகல் நேரம் பார்க்காது விடுதலைக்கு உரம் சேர்ப்பதனை கண்டு வந்து எம்மிடம் கூறும் தருணங்களில் பெருமிதச் செல்வத்தைக் கண்டோம்
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடுதலைக்கு வித்தாகி போகின்ற தருணங்களிலும் விடுதலைக்கு உரம் சேர்ப்பதற்காக உழைக்கின்ற வேளையில் எதிர் பாரத விதமாக எதிரியின் கைகளில்  சித்திரைவதைப்படுகின்ற  எம் மக்களின் நிலை பற்றி கேள்விப்படும் வேளைகளிலும் அங்கு வேதனைச் செல்வத்தைக் கண்டோம்
சர்வதேச அரங்கில் புகுந்து எமது அரசியல் தெளிவை உலகிக்கு தெரிவித்ததுடன் எம் அரசியல்துறையின் கீழ் உள்ள அனைத்து நிர்வாகங்களையும் ஒன்று சேர கட்டியெழுப்பி திறம்பட செயற்பட வைத்துக் கொண்டு யாழ். குடாநாட்டை விடுவிக்க பூநகரி சண்டைக் களத்தினையும் பொறுப்பெடுத்து நடாத்திய விடுதலைச் செல்வத்தையும் கண்டோம்
மருத்துவர்களின் இருதிச் சந்திப்பிலும் மூத்த மருத்துவர்கள் செய்த கடமைகளை எடுத்தியம்பி எம் கடமையின் பெறுமதியை இளம் மருத்துவர்களுக்கு எடுத்துரைத்து மேலும் வலுச்சேர்க்க “ஸ்பாட்டன் திறிகண்றட்” படத்தினையும் போட்டு காட்டியபோது அங்கு ஆற்றல் செல்வம் தெரிந்தான்
மருத்துப் பிரிவினைப் பொறுப்பு எடுத்தவுடன் ரேகா, மனோஐ; ஆகியோருடன் இணைந்து அதனை வளர்ச்சியுடன் கூடிய விரிவாக்கம் செய்வதற்கு மும் மூர்த்திகளாக சேர்ந்து நின்று கள மருத்துவம், தள மருத்துவம் என இரு முனையில் செயற்பட அதில் களமருத்துவ ஒழுங்கினை தன் நேரடிப் பார்வையில் ஒழுங்கு படுத்தியதோடு மட்டுமல்லாது அதே களத்தில் தாக்குதல் தளபதியாகவும் செயற்பட்ட கணங்களில் ஆளமைச் செல்வம் தெரிந்தான்
எம் மண்ணில் யார் என்ன செய்தாலும் சட்டென குறையேதும் சொல்லாது “அந்தமாதிரி இருக்கு, அட்டகாசமாக இருக்கு திறமையான வேலை” எனப் பாராட்டி மனம் நோகாது பார்க்கும் தருணங்களில் உள வளத்துணைச் செல்வத்தைக் கண்டோம்
எத் துன்பம் வந்தாலும் ஆழ்மனக் கிடப்பில் போட்டு விட்டு யார் முன்பு வந்தாலும்  எப்போதும் முகம் நிறைந்த சிரிப்புடன் உலாவரும் வேளையில் சர்வதேசத்தையே சுண்டி இழுத்த புன்னகைச் செல்வத்தைக் கண்டோம்
நவம்பர் 2ம் நாள் 2007 எதிரியின் குண்டு வீச்சில் விடுதலை மூச்சான செய்தி கேட்டு ஆழ்மனசு கலங்கிய தலைவர், குமுறிய போராளிகள், கதறி அழுத தமிழீழ மக்கள் ஆகியோருடன் தமிழக மக்களும் உலகத்தமிழினமும் சேர்ந்து துடித்ததைக் கண்டதில் எங்கள் தமிழ்ச்செல்வம்  தமிழீழச் செல்வமாகியதையும் கண்டோம்
அக்காள் – Eelam Press வலையமைப்பு

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...