Thursday, March 25, 2010

சிறிலங்காவின் மறக்கப்பட்ட அகதிகள்

Source: http://www.puthinappalakai.com/view.php?20100316100708

எலும்பும் தோலுமாக இருந்த வலிடர்சிங் என்ற அந்த நபர் எங்களைப் பார்த்து புன்முறுவல் செய்கிறார்.

“வலிடர்சிங் என்ற இந்தியக் குத்துச் சண்டை வீரர் எங்களது நகரத்திற்கு வந்து சென்ற பின்னர் எனக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது” என அவர் தமிழில் எம்மிடம் தெரிவித்தார்.

1990இல் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கரையோரத்தில் சிறிலங்கா படையினர் உயர் பாதுகாப்பு வலயத்தினைத் உருவாக்கியதைத் தொடர்ந்து வலிடர்சிங் தனது வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துவதற்காகத் தினமும் போராடி வருகிறார்.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பயணம் செய்யும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளர் எழுதியுள்ளார். தொடர்ந்து அவர் எழுதியுள்ளதாவது -

55 வயதுடைய வலிடர்சிங்கிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

இதே போலவே குடாநாட்டின் கரையோரப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த தவேந்திரசிங்கத்திற்கும் ஆறு பிள்ளைகள். யாழ்ப்பாணத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலுள்ள கொன்னபுலம் முகாமில் தவேந்திரசிங்கத்திற்கு ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள்.

முகாமிலேயே வளர்ந்த ஆறு பிள்ளைகளுள் மூத்தவர்கள் திருமணம் செய்து தற்போது குழந்தைகளைப் பெற்றெடுக்க இருக்கிறார்கள்.

வெறும் கூடாரங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக குடில்களிலேயே இவர்கள் இன்னமும் வசித்து வருகிறார்கள். இங்கு அமைக்கப்பட்டிருக்கும் தேவாலயமும் இந்து ஆலயமும் தான் நிரந்தரக் கட்டத்தில் காணப்படுகிறது.

20 வருடமாக முகாம்களில் வாடும் இவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கோ அல்லது இந்த அகதிகளை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதற்கோ ஏற்ற நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஐ.நா சபையின் அறிக்கையின் படி யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்திருக்கும் 61,470 பேரில் இவர்களும் அடங்குகிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காக அரச படையினருக்கும் இடையிலான இறுதிப் போர் உக்கிரமடைந்திருந்த 2008-2009 காலப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை விட, இந்த அகதிகள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் மிக நீண்ட நெடுங் காலமாக அகதி முகாம்களில் வாடுகிறார்கள்.

“இந்த மக்கள் மத்தியில் இரண்டு தலை முறையினைச் சேர்ந்தவர்கள் அகதிகளாகவே இருக்கிறார்கள்” என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரும்பாலான ஆண்கள் குறைந்தளவு ஊதியத்திற்கு கூலித் தொழிலுக்கே செல்கிறார்கள்.

ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 1250 ரூபாய் பெறுதியான நிவாரணப் பொருட்களை தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு வழங்குகிறது.

“இரண்டு குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 600 ரூபாய் பெறுமதியான பொருட்களும் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட குடுப்பத்திற்கு 900 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இவை தவிர இந்த அகதிகளுக்கு வேறெந்த நிவாரணமும் கிடைப்பதில்லை” என அந்த அரச அதிகாரி தொடர்ந்தும் தெரிவித்தார்.

ஜனவரி 2006இல் இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் என்ற அறிவிப்பினை மகிந்த ராஜபக்ச மேற்கொள்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

பதிலாக, இராணுவ முகாம்களை முற்றாக அகற்றாமல் முகாமிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் மக்களைக் குடியேற்ற முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்பும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து 25,000 முஸ்லிம் குடும்பங்களைப் பலவந்தமாக வெளியேற்றிய விடுதலைப் புலிகள் அவர்களை அகதிகளாக்கியிருந்தார்கள்.

இரண்டு மணி நேர முன்னறிவிப்புடன் 90,000க்கும் அதிகமான முஸ்லீம்கள் யாழ்ப்பாணம் உள்ளிட வடக்கின் நான்கு மாவட்டங்களிருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

“ஜனவரி மாதம் முதல் 50 வரையான முஸ்லீம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள். இவர்களுடைய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னமும் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை.

20 வருடங்களின் பின்னர் தங்களது வாழ்க்கையினை மீளவும் ஆரம்பிப்பதற்கு அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என யாழ்ப்பாண நகர சபை உறுப்பினரான Ash. Shaikh BAS Sufyan கூறுகிறார்.

“அரசாங்கத்தினது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் - இடம்பெயர்ந்த முஸ்லீம்களும் குடா நாட்டின் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களும் உள்ளடக்கப்படவில்லை” என முஸ்லிம் பெண்கள் மத்தியில் பணி செய்யும் சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்களுக்கு நகரத்தின் சோனகத் தெருவில் வீடுகளோ அல்லது காணிகளோ இருக்கின்றன.

பல ஆண்டுகளாக இந்த வீடுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால் பெரும்பாலான வீடுகள் பாழடைந்துவிட்டன. இவர்களது காணிகள் பற்றைக் காடுகளாகி விட்டன. இந்த முஸ்லீம்கள் மீளக்குடியேற வேண்டுமெனில் வீடுகள் செப்பனிடப்பட வேண்டும், பற்றைக் காடுகள் துப்புரவாக்கப்பட வேண்டும்.

குத்துச் சண்டை வீரர் ஒருவரின் பெயரைக் கொண்ட வலிடர்சிங் என்ற 55 வயதுடைய இந்த முதியவரது வாழ்வுக்கான போராட்டம் இன்னமும் முடியவில்லை.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...