Friday, April 1, 2011

கொளத்தூர்: கடும் போட்டியைச் சந்திக்கும் மு.க. ஸ்டாலின்

Source: www.dinamani.com


சென்னை, மார்ச் 31: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் (சென்னை) தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளரின் மிகக் கடுமையான போட்டியை அவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொளத்தூரில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கொளத்தூர் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். இங்கு 50-வது வார்டில் உள்ள பெரியார் நகர், ஜவஹர் நகர், வெற்றி நகர் போன்ற பகுதிகளில் அரசு ஊழியர்கள் குறிப்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 62-வது வார்டில் வசிக்கின்றனர். இது கொளத்தூரில் விரிவுபடுத்தப்பட்ட பகுதியாகும். நடுத்தர பிரிவைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு புதிதாகக் குடியேறியுள்ளனர்.
சாதிரீதியாக கணக்கிட்டால், இந்தத் தொகுதியில் முதலியார், நாயுடு, வன்னியர் இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த 3 சமூக மக்கள் மட்டும் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். தலித் மக்கள் 12 சதவீதத்தினரும், நாடார்கள் 7 சதவீதத்தினரும் வசிக்கின்றனர். கிறிஸ்துவர்கள் 6 சதவீதமும், இஸ்லாமியர்கள் 5 சதவீதமும் உள்ளனர்.
தி.மு.க.வின் பலம்: முதல்வர் கருணாநிதிக்கு அடுத்த நிலையில் தி.மு.க.வில் அதிக அதிகாரம் பெற்றுள்ளவரும், துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் இங்கு வேட்பாளராகப் போட்டியிடுவது கொளத்தூர் தொகுதியில் தி.மு.க.வின் மிகப் பெரிய பலமாக உள்ளது என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.
அரசு ஊழியர்கள் அதுவும் தலைமைச் செயலக ஊழியர்கள் இங்கு அதிக அளவில் வசிப்பது தி.மு.க.வின் வெற்றிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகள் மற்ற தொகுதிகளைப் போல இங்கும் மக்களால் பாராட்டப்படுகின்றன என்று கூறும் தி.மு.க. நிர்வாகிகள், 2009 மக்களவைத் தேர்தலின்போது கொளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் எதிர் அணி வேட்பாளரை விட தி.மு.க. வேட்பாளர் 18 ஆயிரம் வாக்குகளை கூடுதலாகப் பெற்றதிலிருந்தே இங்கு தி.மு.க.வின் வலிமையைத் தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர்.



அ.தி.மு.க.வின் பலம்: எம்.ஜி.ஆர். கால அரசியல்வாதியாக இருப்பதும், தனது "மனித நேய அறக்கட்டளை' மூலம் நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கிய சேவையும் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமிக்கு தொகுதி மக்கள் அனைவரிடத்திலும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னெப்போதும் கண்டிராத மிகக் கடுமையான விலைவாசி உயர்வு, மிக அதிகமான ஊழல்கள் போன்றவற்றால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவது என்று மாநிலம் முழுவதும் மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, இந்தத் தொகுதியிலும் அதிக அளவில் காணப்படுவதுதான் தனது வெற்றிக்கான மிகப் பெரிய பலம் என்கிறார் சைதை துரைசாமி.



பகுஜன் சமாஜ் கட்சி: 2006 மாநகராட்சித் தேர்தலின்போது, கொளத்தூரில் உள்ள 53-வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் செயல்படும் ஆர்ம்ஸ்ட்ராங், இப்போது கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேறு எந்த வார்டிலும் இல்லாத வகையில், மாநகராட்சி மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் எளிதாகக் கிடைக்கச் செய்வதில் தான் மேற்கொண்ட முயற்சிகள், அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு ஆகியவைதான் இப்போது தனக்கு பெரிய பலம் என்கிறார் ஆர்ம்ஸ்ட்ராங்.
எனவே, 53-வார்டில் இவருக்கு அதிக வாக்குகள் கிடைப்பதோடு, தொகுதியில் கணிசமாக உள்ள தலித்துகளின் ஆதரவும் இவருக்கு அதிக அளவில் கிடைக்கும் என்று கட்சியினர் கூறுகின்றனர்.

கள நிலவரம்: தொகுதியில் இப்போது மற்ற கட்சிகளைவிட, அ.தி.மு.க. வேட்பாளரின் பிரசாரம்தான் மிகத் தீவிரமாக நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணிக்கு முன்பே பிரசாரத்தைத் தொடங்கும் வேட்பாளர் சைதை துரைசாமி, பெரும்பாலும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார். வெயில் நேரங்களில் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளும் அவர் இரவு 10 மணி வரை தொய்வின்றி பிரசாரம் மேற்கொள்கிறார்.

அ.தி.மு.க.வினர் தவிர மனித நேய அறக்கட்டளையின் கல்விப் பணி மூலம் பலன் பெற்ற பலரும் தனித்தனியாக களத்தில் இறங்கி இருப்பது இவரது பலத்தை அதிகரித்துள்ளது.
ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, அ.தி.மு.க.வை விட தி.மு.க.வின் பிரசாரம் மந்த நிலையிலேயே காணப்படுகிறது. மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட இரண்டு நாள் பிரசாரம், நடிகர் வடிவேலுவின் பிரசாரம் நடைபெற்ற நாள்களைத் தவிர, மற்ற நாள்களில் எழுச்சியான பிரசாரம் எதுவும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இது பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத தி.மு.க.வின் வட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே சுற்றி வருகிறார்கள். ஆனால், ஸ்டாலின் அவ்வாறு தனது தொகுதியில் மட்டும் இருக்க முடியாது. கட்சியின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே, அவர் தொகுதியில் இல்லாத குறை தெரியாத வகையில், இங்குள்ள கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பிரசாரத்தை எழுச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும்.
எனினும் பெயரளவுக்குதான் பிரசாரம் நடைபெறுகிறது. தொகுதியில் உள்ள வார்டுகளில், அந்தந்த வார்டு நிர்வாகிகளின் ஏற்பாடுகளில் ஆங்காங்கே வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.
அதேபோல் தொ.மு.ச. பேரவையைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்களும் தினமும் கொளத்தூர் வீதிகளில் வலம் வருகிறார்கள்.
எனினும், வெறுமனே வீதிகளைச் சுற்றி வருவதும், எதிரில் தென்படும் மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும்தான் நடக்கிறதே தவிர, எதிர் அணி பிரசாரத்தைப் போல, வீடு, வீடாகச் சென்று, அரசின் திட்டங்களை விளக்கி ஆதரவு கேட்கும் வகையில் பிரசாரம் நடைபெறவில்லை என்கிறார் அவர்.
இதற்கிடையே, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஆம்ஸ்ட்ராங், வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் பிரசாரம் அவருக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று தொகுதி முழுவதும் பரவலாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் வாங்கும் வாக்குகள் தி.மு.க. தரப்பையே பாதிக்கச் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளதால், அந்தக் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் இயல்பாகவே தங்கள் வேட்பாளருக்கு வந்து சேரும் என்று அ.தி.மு.க.வினர் நம்புகின்றனர். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் மட்டும் தே.மு.தி.க.வுக்கு 10 ஆயிரத்து 610 வாக்குகள் கிடைத்தது என்றும், இப்போது அந்த வாக்குகள் தங்கள் அணிக்கு கூடுதல் வரவாக இருக்கும் என்றும் அ.தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.
இது தவிர, தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளில் முறைகேடுகளைத் தடுக்க இப்போதிலிருந்தே திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. தரப்பு கூறுகிறது.
எனவே, தி.மு.க.வினரின் மந்தமான பிரசாரம், அ.தி.மு.க.வின் திட்டமிட்ட, சுறுசுறுப்பான, தொடர்ச்சியான பிரசாரம், பகுஜன் சமாஜ் கட்சியால் தி.மு.க. ஆதரவு வாக்குகள் பிரியும் அபாயம் ஆகிய பல சவால்களைக் கடக்க வேண்டிய கட்டாயம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் கொளத்தூரில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்ய உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இங்கு வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்கிறார்.
கடைசி 10 நாள்கள்: தேர்தல் களத்தில் இன்னும் சரியாக 10 நாள்கள் பிரசாரம் செய்ய முடியும். இந்த கடைசி கட்ட பிரசாரத்திலும், ஒவ்வொரு தனிப்பட்ட வாக்காளரின் மனதை வெல்வதற்கான பிரத்யேக பிரசார உத்திகளை கையாள்வதிலும் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சிக்கே தேர்தல் முடிவும் வெற்றியாக கிடைக்கும் என்பதை மட்டும் இப்போது உறுதியாகக் கூற முடியும்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...