Saturday, April 10, 2010

முல்லைவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!




சிங்களனும்
உடன் சங்கறுக்கும் துரோகிகளும்
தந்திரத்தால் செய்த
நச்சு குண்டுகள் வீசப் பட்டன;

அதை உள்ளிழுத்து
போரில் -
உமிழ்ந்து துப்பியதில்
இறந்தது
கோழைத்தனம்!
——————————————-

முல்லைவாய்க்கால் பகுதியில்
வீட்டிற்கு வீடு ஒருவர்
போரில் மரணம்.

வீட்டின் -
அத்தனை பேரும்
சிங்களன் வீசிய
நச்சு குண்டிற்கு
நரபலி தகனம்!
——————————————-

விடுதலை என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
எத்தனை மரணம்?

எத்தனையோ மரணங்கள்
நேர்ந்த பின்னும்
சிங்கள குண்டுவெடி சப்தத்தில்
கேட்கவேயில்லை
விடுதலை என்னும்
ஒற்றை சொல்!!

——————————————-

ஈழத்தின்
வருடங்களை கடந்த
இருட்டு,

ஜெயிப்போ தோற்ப்போ
என்பதான
பயம்,

இரண்டிலொன்றை
பார்ப்போமென்ற
நம்பிக்கை..

எதையுமே பார்க்கவில்லை
சிங்களன் வீசிய
நச்சுகுண்டு;

நியாயத்தை
விழுங்கிக் கொண்டதில்
நச்சு -
பிணங்களாய்
கொப்பளித்தன!
——————————————-

மயான கிடங்காய்
நீண்டது -
முல்லைவாய்க்கால்,

வெறும் செய்தியாக
மட்டுமே -
காண்பிக்கப் பட்டது
தமிழரின் மரணம்!
——————————————-

பசுமை வளர்த்த
இனம் -
பிறப்பு இறப்பு பதிவின்றி
பிணங்களாய் குவிந்தது
வரலாற்றில்!
——————————————-

ஒரு இனத்தின்
பிணவாடை -
உலகமெலாம் வீசியும்
மூக்கை மூடிக் கொண்டு
சேனல் மாற்றியது
அதே சுயநல இனம்!
——————————————-

போரில்
விடுதலைக்காய்
உயிர்விட்டவர்கள்
போர்வீரர்கள் ஆனார்கள்.

அருகில் இருந்தும்
வேடிக்கை மட்டுமே
பார்த்தவர்கள் -
கோழைகளா??
கல்நெஞ்சக் காரர்களா??
எதிர்க்கும் திராணி போதாதவர்களா???
அவரவரே -
முடிவு செய்துக் கொள்ளட்டும்!
——————————————-

வன்னித் தீவில்
ஒரு -
குழந்தை கதறி அழுதது.

போருக்குப் போன
அப்பா இறந்திருக்கலாம்..

அம்மா போருக்குப் போகும்
வழியில் கூட
இறந்திருக்கலாம்..

குழந்தை -
தானும் சென்று
ஒரு சிங்களனையாவது சுட்டு
என்னிரு -
தமிழரை காக்கவில்லையே – யென
அழுதது போல்!
——————————————-

காட்டிக் கொடுத்தவன்
திருடித் தின்றவன்
அண்டிப் பிழைத்தவன்
இறந்த -
சகோதரிகளின்
சவத்தின் மீதேறி ஓடிய
ஒருசில துரோகிகள்
சிங்கள இனமானான்.

கைகால் இழந்து
ஈழத்தையே சுவாசித்து
பட்டினி, போர், துக்கத்தால்
இறந்தவன் -
ஈழ விடுதலை வெல்லும்
வெற்றிக் கொடியை
நாளை -
விண்ணில் பறக்கவிக்கும்
காற்றாயினான்!
——————————————-

மொழி
இனம்
மதம்
யாராகவேனும்
எதுவாகவேணும்
இருந்துவிட்டுப் போகட்டும்
ஒரு மனிதராகக் கூட
என்னாது -
சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு
துணைபோன தேசத்தில் தான்
நானும் குடிமகன்;
தமிழன் வேறு;
மனிதன் என்று சொல்லத் தான்
எனக்கே வெட்கம்!
——————————————-
வித்யாசாகர்

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...