Saturday, January 30, 2010

தேர்தல் மோசடியில் இந்திய சதியா? முள்ளிவாய்க்கால் தொடர்ச்சியா?

இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் மாற்றி அமைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவியுடன் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சதியில் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, இலங்கைப்போக்குவரத்துச் சபையின் தலைவர் தம்மிக்க ஹேவாபத்திர போன்றோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே இந்த கணணி சித்து விளையாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. வழமையாக இவ்வாறானா தேர்தல் பணிகளுக்கு கொழும்பு பல்கலைக்கழகமே கணனி தொழில்நுட்ப செயற்பாட்டை மேற்கொண்டு வந்துள்ள போதும், இம்முறை பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த தேர்தல் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இத்திட்டத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. இந்த சதிக்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் பின்னணி இருந்துள்ளதாக கருதப்படுகிறது.

அமெரிக்க விசுவாசியான 'சரத்பொன்சேகாவை விட மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதையே இந்தியா விரும்புகிறது' என தேர்தலுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் குறிப்பிட்டமை இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சரத் பொன்சேகா ஜனாதிபதியானால் விடுதலைப்புலிகளை அழித்தொழித்ததில் இருந்த தமது பங்கு குறித்த இரகசியங்கள் வெளியாக கூடும் என இந்தியா நம்பியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை சரணடைய வைத்து படுகொலை செய்த விடயத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஜெகத் கஸ்பர் எழுதிய கட்டுரையில் ;

“கடைசி நாளில் பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப. வீரபாண்டியனை தொடர்பு கொண்டதாகவும், பின்னர் கனிமொழியின் உதவியோடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரோடு பேசிய போது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று தொலைமடல் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று அந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் கூறியதாக ஜெகத் கஸ்பர் தனது கட்டுரையில் கூறுகிறார்.

மேலும் இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்ரின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடமோ அல்லது ஐ.நா அதிகாரிகளிடமோ ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இரவு 11.50 மணிக்கு முடிவை அறிவித்தார். பின்னர் கனிமொழி காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரை தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்னார் . எனினும் அந்த காங்கிரஸ் தலைவர் ''இப்போது கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இப்போதைய சூழலில் இலங்கை ராணுவத்திடமே சரணடைய முடியும். வேறு வழியில்லை'' கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை எடுத்து திங்கள் கிழமை அதிகாலை வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டது என ஜெகத் கஸ்பர் தனது கட்டுரையில் எழுதியிருந்தார்.

இங்குள்ள முக்கிய விடயம் என்னவென்றால் ஜெகத் கஸ்பர் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்ற அந்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம்தான் என்ற செய்தியே.

இவ்வாறான பல சிக்கல்களில் இந்திய தரப்பு சிக்கிக்கொண்டதனால்தான் அவர்கள் மீண்டும் மகிந்தவே ஜனாதிபதியாக வேண்டும் என விரும்பியுள்ளனர். அதன் மூலம் தமது இரகசியம் பாதுகாக்கப்படும் என எதிர்பார்த்தனர் என சில தகவல்கள் கூறுகின்றன.

இவை எல்லாம் கசிகின்ற தகவல்களே. இவை உறுதிப்படுத்தப்பட்ட, நிருபிக்கப்பட்ட விடயங்கள் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எவ்வாறெனினும் நடந்த உண்மைகள் எதிர்வரும் நாட்களில் வெளிவரவும்கூடும் அல்லது அப்படியே முள்ளிவாய்க்கால் மண்ணோடு மண்ணாக புதைந்து விடவும் கூடும்.

(இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் முடிந்த முடிவு அல்ல. கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றன. பல சமயங்களில் உங்களது கருத்து இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்).

--- ஜீவேந்திரன் ----
Source:http://jeevendran.blogspot.com/2010/01/blog-post_29.html

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...