Monday, July 4, 2011

சென்னை சுங்கத்துறை அலட்சியத்தால் விளைபொருள் ஏற்றுமதி பாதிப்பு:

முகவை க. சிவகுமார்


Published in Dinamani


திருவொற்றியூர்:சென்னைத் துறைமுக சுங்கத்துறையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் கடந்த ஒரு மாதமாக ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது.

சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. இவற்றைக் கண்காணித்து, மேலாண்மை செய்து, சுங்க வரி வசூலிக்க சென்னைத் துறைமுகத்தை ஒட்டி முதன்மை ஆணையர், 3 ஆணையர்கள் உள்ளிட்டோர் தலைமையில் சுங்க இல்லம் செயல்பட்டு வருகிறது. சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 30 சரக்குப் பெட்டக மையங்கள் வழியாகத்தான் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன.
 மீன், இறால் உள்ளிட்ட கடலுணவுகள், மக்காச்சோளம், தேங்காய்நார்க் கழிவுகள், வெங்காயம், மிளகாய், வேர்க்கடலை உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் சரக்குப் பெட்டக மையங்களில் இல்லாததால் ஏற்றுமதியாளர்கள் தாங்களே அனைத்து வசதிகளையும் கொண்ட கிடங்குகளை அமைத்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
 இத்தகைய தனியார் கிடங்குகளிலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் சுங்கத் துறையிடம் விண்ணப்பித்து மதிப்பீட்டு அதிகாரி, சோதனையிடும் அதிகாரி ஆகியோரை அழைத்துச் சென்று அவர்கள் முன்னிலையில் கன்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றவேண்டும். பின்னர் அந்த அதிகாரிகள் சீல் வைத்து துறைமுகத்திற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்குவார்கள். இதற்குரிய கட்டணத்தையும் ஏற்றுமதியாளர்கள் சுங்கத்துறையிடம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புதிய நடைமுறை விதிகள்: உதாரணமாக பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் ஏற்றமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் நேரடியாக துறைமுகத்தை அடையும். ஆனால் புதிய விதிமுறைகளின்படி பூந்தமல்லியில் சரக்குகளை கன்டெய்னர்களில் ஏற்றிய பிறகு சுங்கத்துறை அதிகாரிகள் சீலிட்ட பிறகும் மீண்டும் மாதவரம் சரக்குப் பெட்டக மையத்திற்கு வந்து அங்கு மறுபடியும் சீல்களை சுங்கத்துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இது ஒரு மாதத்துக்கு முன்பு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
 நேரடியாகச் சென்றாலே வரிசையில் நின்று செல்ல இரண்டு நாளாகிறது. இந்நிலையில் மாதவரத்தில் ஒரு வரிசை, எண்ணூர் விரைவு சாலையில் ஒரு வரிசை என ஒரு கன்டெய்னரை ஏற்றி இறக்குவதற்கு ஐந்து நாள்கள் சராசரியாக ஆகின்றன.
அதிகாரிகள் பற்றாக்குறை: மேலும் ஒரு புதிய நடைமுறைவிதியையும் சுங்கத்துறை அறிவித்துள்ளது. இதன்படி ஏற்றுமதியை மேற்பார்வையிடச் செல்லும் அதிகாரிகளில் யார் மீதும் துறை ரீதியிலான விசாரணை ஏதும் நிலுவையில் இருக்கக் கூடாது (அவர்கள் பணியில் இருந்தாலும்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே அதிகாரிகள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் பணியில் இருக்கின்ற அதிகாரிகளில் பெரும்பாலானோர் மீது விசாரணை நிலுவை இருக்கின்றன. தனியார் கிடங்குகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 கன்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கென சுமார் 50 விண்ணப்பங்கள் தினமும் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால் இதற்கென தற்போது 4 அல்லது 5 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இவர்களும் தங்களது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரம், விடுமுறை நாள்களில் மட்டும்தான் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தொழில்களுக்காக அதிகாரிகளா, அதிகாரிகளுக்காக தொழில்களா? இப்பிரச்னை குறித்து கே.வி. மரைன் ஃபுட்ஸ் இயக்குனர் மோகன் கூறியது, நாங்கள் இறால், மீன் உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்கிறோம். இவைகளை ஏற்றுமதி செய்ய எந்த சரக்குப் பெட்டக நிலையத்திலும் குளிரூட்டப்பட்ட கிடங்கு உள்ளிட்ட வசதிகள் கிடையாது. நாங்களே வங்கிகளில் கடன் பெற்று அனைத்து வசதிகளும் நிறைந்த கிடங்குகளை அமைத்துள்ளோம்.
 கடலுணவு வகைகள் பதப்படுத்தப்பட்டு பின்னர் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். இதில் சரக்குகள் வரவேண்டும், கன்டெய்னர்கள் நேரத்திற்கு கிடைக்க வேண்டும், லாரிகள் கிடைக்க வேண்டும், கப்பல் தயாராக இருக்க வேண்டும். இது ஒரு சங்கிலித்தொடர் நடைமுறை.
இதில் சுங்கத் துறை சோதனை என்பது கண்காணிப்பு நடைமுறை மட்டுமே. ஆனால் அவர்கள் செய்யும் அலட்சியத்தால் ஒட்டுமொத்தத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்பு கன்டெய்னர்களை ஒரே நாளில் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று சேர்க்க முடியும். இப்போதைய தேவையற்ற நடைமுறைகளால் சென்னை புறநகரில் உள்ள எங்கள் கிடங்குகளில் இருந்து வெளியேறும் லாரிகள் துறைமுகத்தை அடைய குறைந்த பட்சம் 5 நாள்கள் ஆகின்றன.
இந்த ஐந்து நாளும் ஜெனரேட்டர் மூலம்தான் கன்டெய்னர்களை குளிரூட்ட முடியும். இதற்கு முன்பு ஜெனரேட்டரை இயக்க 10 லிட்டர் டீசல் தேவை என்றால் இப்போது 100 லிட்டர் டீசல் செலவாகிறது. இதில் எங்கேனும் தவறு ஏற்பட்டால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சரக்குகளும் பாழாகிவிடும்.
தொழில் வளர்ச்சிக்காகத்தான் சுங்கத்துறை, துறைமுகம் உள்ளிட்டவைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் தொழிலே நலிவடைய இவைகளே காரணமாக இருக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் இத்தொழிலை தொடர முடியாது என்பது மட்டும் உண்மை. நடைமுறைக்கு ஒத்துவராத, எவ்வித வலுவான காரணங்களும் இல்லாத புதிய நடைமுறைகளை ஏன் செயல்படுத்துகிறார்கள் என்பது சுங்கத்துறைக்கே வெளிச்சம் என்றார் மோகன்.
ஒரு லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: விவசாய விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் ராஜாத்தி குழுமத்தை சேர்ந்த பெரியசாமி கூறியது, வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம் போன்ற பொருள்களை மாதம் 1,500 கண்டெய்னர்கள்வரை ஏற்றுமதி செய்கிறோம். கட்டுப்பாடு என்ற பெயரில் அறிவித்துள்ள புதிய நடைமுறைகளால் மாதம் 300 கன்டெய்னர்களைக் கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை. விவசாயிகள், கூடை முடைவோர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனை நம்பியே உள்ளனர்.
ஏற்கனவே சென்னைத் துறைமுகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கத்துறையின் புதிய நடைமுறைகளால் அபாய கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து பலரது கவனத்திற்கு எடுத்துச் சென்றும் யாரும் இப்பிரச்னையில் தலையிடுவதாக இல்லை.

வலுவான எவ்வித காரணங்களும் இன்றி இந்த நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுங்கத்துறை ஆணையரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அமைச்சர் பழனிமாணிக்கம் தலையிட கோரிக்கை: விவசாய விளைபொருள்கள் ஏற்றுமதி மூலம்தான் நாடு தன்னிறைவு பெற முடியும் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடைமுறைக்கு ஒத்துவராத புதிய விதிகள் மூலம் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது
 புதிய விதிகளை அறிவிக்கும் முன்பு அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்தாதது ஏன்? சென்னையைச் சுற்றிலும் சுங்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 சரக்குப் பெட்டக மையங்களிலும் கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என்கிறபோது தனியார் நிறுவனங்கள் தாங்களே அமைத்துள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
 ஊழலில் ஒட்டுமொத்த சுங்கத்துறையே புரையோடிப் போயிருப்பதாக புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்தப் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்ததில் பயன் அடைவோர் யார்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து நிதித்துறையில் சுங்கத்துதுறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய இணை அமைச்சரான எஸ்.எஸ். பழனிமாணிக்கம்தான் பதில் கூற வேண்டும் என தெரிவித்தார் சுங்கத்துறை முகவர் ஒருவர்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...