Friday, August 28, 2009

நக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள்

Source: http://texlords.wordpress.com/2009/08/25/நக்கீரன்-கோபாலின்-இருண்ட/




மூதறிஞர், கர்மவீரர், பேரறிஞர் போன்ற பட்டங்களைத் தொடர்ந்து கலைஞர், புரட்சித்தலைவர் வரை பட்டங்களை பெற்றவர்கள் அனைவருமே அவர்களின் தனிப்பட்ட ஆளுமையால் இன்று வரையிலும் அந்த காரணப்பெயர்கள் தமிழகத்தில் கலங்கரை விளக்கப் பெயர்களாகத்தான் காட்சி அளித்துக்கொண்டுருக்கிறது.
ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த துறைக்கு தேவையான புராணப் பெயரே உங்கள் வாழ்க்கையின் கௌவரப் பெயராய் மாறி உள்ளதைப் பார்க்கும் போது
சூறாவளிகளைக் கடந்து சூழ்நிலையை தனது வசமாக்கியவர்களுக்கு வாழ்க்கை வழங்கிய கொடையாகத்தான் தெரிகின்றது.
வணக்கம் திரு. நக்கீரன் கோபால் அவர்களே.
தூங்க வேண்டிய முழு இரவும் ஒரு புத்தகம் ஒருவரை ஆக்கிரமித்து தூங்கா இரவாக்க முடியுமா?
கதவு மூடப்பட்டு இருந்தும் நடுஇரவில் கூட படபடப்பாய் பயத்துடன் படிக்க முடியுமா?
புத்தகத்தின் 470 பக்கங்களையும் படித்து முடிந்ததும், ஒவ்வொரு ஓட்டையும் தனது தெய்வக்கடமைகள் போல் அளித்து விட்டு தெருவில் இன்று வரையில் ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களைப் பற்றி யோசிக்க வைக்க முடியுமா?
அத்தனையும் தந்த ஆச்சரிய புத்தகம் தான் உங்கள் “சேலஞ்”.
லண்டன் வானொலி அறிவிப்பாளரைப் போல எனக்கும் சற்று நெருடலாகத்தான் இருந்தது.
அதென்ன தமிழ்திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயர் போல நீங்களும் ஆங்கிலத்தில் பெயர் வைத்து இருக்கிறீர்களே என்று? ஆனால் இந்தப் பெயரை விட வேறு எந்தப் பெயர்களும் இந்தப் புத்தகத்திற்கு பொருத்தமாகவா இருந்து விடப்போகின்றது?
புலனாய்வு இதழியல் என்ற இரட்டை வார்த்தைகள் மூலமாகத்தான் அன்று கொடிகட்டி பரந்த பாகவதர்களின் சாம்ராஜ்யம் முதல் இன்று அசைக்க முடியா பெரும்பான்மை பெற்றவர்களின் சரித்திரம் வரைக்கும் சுருக்கி தரித்திர சாவு வரைக்கும் கொண்டு வரமுடிந்துள்ளது.
ஆட்சியில் ஏறுவதற்கு முதல் நாள் வரைக்கும் எடுபிடியாக வாழ்ந்தவர்கள் கூட ஏறிய பின்பு ஏற்றமான மகாராஜாக்கள் வாழ்க்கை பெறுவது நமது இந்திய ஜனநாயகத்தில் பெரிய ஆச்சரியம் இல்லை தான்.
ஆனால் அவர்களின் ஆசைகள் அதிகமாக அதிகமாகத்தான் அவர்களின் அருவருப்பான முகமும் அடிவருடிகளின் கொடூரமும் உங்களைப் போன்ற இதழியலில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு பல இன்னல்களை உருவாக்கி விடுகின்றது.
இஷடப்பட்டு கஷடப்பட்டால் எளிதான முன்னேற்றம் உண்டு.
எத்தனை இலகுவான வார்த்தைகள். ஆனால் வாழ்ந்தவனுக்குத்தானே புரியும்? கஷடங்களா? இல்லை கடைசி நேரத்தில் சாவா? என்று.
எழுதும் இன்னமும் கூட எனக்கு படபடப்பு, பயமும் அடங்கவில்லை. பொழுது புலர்ந்தாலே பூர்ண கும்ப மரியாதையுடன் எம தர்மன் வாசலில் ஒவ்வொரு நாளும் காத்துருந்து வணக்கம் சொன்னால் எப்படியிருக்கும்?
அதுவும் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே கொண்டுள்ள விஷயங்களே இத்தனை விவகாரமாக இருந்தால் நக்கீரன் பத்திரிக்கை தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் எதில் முழித்து நீங்கள் தினமும் திருஷடி கழித்துக்கொண்டுருப்பீர்கள்?
அருப்புக்கோட்டையில் பிறந்து, அரிசிக்கடையில் தவழ்ந்து அடித்து வந்த சென்னை பாத்திரக்கடையில் உருண்டு உருண்டு கடைசியில் வலம்புரித் தாய் தத்தெடுத்து ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்ற உங்கள் வீரம் வியக்க வைக்கின்றது?
போராட்டம் என்பது இங்கு யாருக்குத்தான் இல்லை. சென்னைக்குள் நுழைந்து நெருக்கியடிக்கும் வீடுகளுக்குள் தனிமரமாய் நின்று ஜெயிப்பது கூட பிரச்சனையில்லை. ஆனால் அத்தனை கூவ நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு ஆளுமையாக “என் திறமை இது தான் “ என்று பறைசாற்றும் அளவிற்கு பயணிக்கும் பல லட்சம் பேர்களில் சில நூறு பேர்களால் மட்டும் தானே முகம் காட்ட முடிகின்றது.
நிருபர்கள் என்றாலே வினியோகிக்கும் கவர்களை கச்சிதமாக பெற்றுக்கொண்டு கவர் ஸ்டோரி எழுதுபவர்கள் என்று பல பேர்கள் நிணைத்துக்கொண்டுருக்கிறார்கள். ஆனால் கதிரை, சண்முக சுந்தரம் பாடுகளைப் பார்க்கும் போது, கட்டிய பொண்டாட்டியும் பெத்த ஒரு பிள்ளையும் போதும்? கண்மாய் கரை மண் வெட்டியாவது பிழைத்துக்கொள்வோம் என்று தான் பின்னோக்கி வந்து விடுவார்கள்.
அழைப்பு விடுக்கும் அத்தனை போராட்டங்களுக்கும் அம்சமான அலங்காரங்களுடன் அலங்கார பதுமை போல் கை அசைத்து வெற்றிச் சின்னம் காட்டும் அரசியல் தலைவர்களைப் பார்த்த எனக்கு மிகுந்த ஆச்சரியம் உங்களின் அர்பணிப்பு உணர்வு.
எண்பது கிலோ மீட்டர் தானே என்று எம்பி ஓடிவிடாமல் முதல் ஆளாய் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உறுப்புகள் உடைக்கப்பட்டுருந்த நிருபரை பார்க்க ஆஜர் ஆனது முதல் ஆச்சரியம்.
கேட்கும் கோடிகள் தந்து விடுவதாக சொன்ன கேடிகளை புறக்கணித்து கேள்வி ஞானத்தையே வைத்து மொத்த வாழ்க்கையையும் வேள்வி போல் நெருப்பாற்றில் நீந்தி வந்து சேலஞ் செய்துருப்பது மொத்த ஆச்சரியம்.
விலகி வந்த போதும் கூட உங்களின் துலாக்கோல் முட்கள் கடைசி வரையிலும் மாறவே இல்லை. ஐந்தாம் படைகள், ஓட்டுண்ணிகள் என்று ஏராளமாய் இடற வைத்தாலும் எப்படை தோற்கின் இப்படை வெல்லும் என்ற உங்களின் போராட்ட குணமே மொத்த சட்ட மேதைகளும், சட்ட மாணவர்களும் கடைசிவரைக்கும் உங்களை ராஜகோபால் வெர்சஸ் தமிழ்நாடு அரசு என்ற அச்சிடப்பட்ட உண்மை பாடங்களை படித்தால் தானே கோர்ட் படியே மிதிக்க முடியும்.
எந்தப் இதழியல் பட்டயங்களும் வாங்காத உங்களிடம், உங்களுக்கு, உங்களுக்காகவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை படித்துதான் சட்டப் பட்டங்களே வாங்க முடியும் என்றால் இதை விட சிறப்பு எந்த மனிதன் தன் வாழ்நாளில் அடைந்து விடமுடியும்?
அரசாங்கத்தின் கடைநிலை ஊழியனுக்கு மகனாக பிறந்து, அவர் முன்னால் கண்களை கசக்கிக்கொண்டு நிற்காமல் 40,000 வைத்தே இந்த உண்மை, உறுதி, துணிவு சாம்ராஜ்யத்தை எழுப்பி இருக்கிறீர்கள் என்றால் அன்று நாலு லட்சம் இருந்து இருந்தால் உண்மையின் உரைகல்லாக தினந்தோறும் காலையில் உரத்துக் கூறி இருப்பீர்களோ?
நிருபருக்கு உற்சாக பானத்தாலும், சிறுநீராலும் அபிஷேகம் செய்து சித்ரவதை செய்தவர் திருச்செந்தூர் ஆண்டவருக்கு அருகில் இருந்து அவரை கவனிக்கும் கண்ணியமான தலைமைப் பொறுப்பில் அமர்த்தபடுகிறார் என்றால் இதை விட காமெடி ஜனநாயகம் வேறு எங்கு காண முடியும்?
பிறந்த ராஜஸ்தான் பாலை வன மண்ணாக இருந்தாலும் கண்ணியமான அந்த காவல் துறை அதிகாரி போல் இன்னமும் பல பேர்கள் வாழ்வதால் தானே கெட்டுப் போன கல்லீரல் கூட தன் கடமையைச் செய்து கொண்டுருக்கிறது?
இருபது வருடங்களாக படித்த எத்தனையோ புத்தகங்கள் எத்தனையோ உணர்வுகள் தந்த போதிலும் இந்த சேலஞ் தந்த அனுபவம் இனி வேறு ஏதாவது தருமா? இத்தனைக்கும் கல்லூரி பருவம் முதல் கண்ட காட்சிகள் தான். தொடராக படித்தது தான். பங்கு எடுத்த அத்தனை ஜனநாயக சார்பாளர்களையும் அருகில் இருந்து பார்த்த பாக்கியமானவன் தான். ஆனால் மொத்தமான பூக்களையும் மாலையாக கோர்த்து முகர்ந்து பார்த்த போது பரவசத்தை விட அதிக பயமே வந்தது.
உங்களின் மீசையைப் பார்த்தே ஓதுங்கிய பெண்களை மீறி உங்களிடம் மனைவியாக வந்தவர், உங்களின் தின போராட்ட வாழ்க்கையை பொறுப்பாக ஏற்றுக்கொண்டதால் தான் இன்று இத்தனை நறுவுசான நறுமண வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறீர்களோ?
மனைவியாக வாய்த்தவர் அப்பா வீட்டுக்கு மறுவீடு விஷேசத்திற்காக செல்பவர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் தினந்தோறும் நீங்கள் வாழ்ந்து கொண்டுருந்த மறு உலகத்தை பார்த்து பார்த்து பாய்ந்து ஓதுங்கிய பதுங்கு குழிகள் இலங்கைப் பெண்களை விட அதிகமானது தான்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு ஆறெழு மாதங்களக்கு முன்னாலே அவர்களின் அத்தனை வளர்ப்பு ஜாதகங்களை அலசிப் பார்க்கும் அந்த பத்திரிக்கை ஆசிரியர்களை நம்மூர் அரசியல் ஆசான்களின் நதிமூலத்தை அலசச் சொன்னால் எத்தனை சிறப்பு இதழகள் போட வேண்டும். அதில் எத்தனை வீரப்பன்கள், ஆட்டோ சங்கர் வருவார்கள்?
அத்தனை விஷயங்களையும் உண்மையாய் துணிவாய் உறுதியாய் உலகுக்கு எடுத்து வைத்தீர்கள்? இந்த இலங்கை கன்னிதீவு கதையை எந்த ரூபத்தில் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து முடிக்கப் போகிறீர்கள்?
உங்கள் “சேலஞ்” புத்தகத்திற்கு எத்தனையோ கணவான்கள் கண்ணியவான்கள் மதிப்புரை தந்து இருந்தாலும் இதயத்தை திறந்து அளித்த பத்ரிக்கைப் போல் வேறு எவரும் இந்தப் புத்தகத்தின் சிறப்பை வேறு வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
“உண்மை பேசியால் அரிச்சந்திரின் மயானம் வரைக்கும் போய் வெட்டியான் வேலை பார்த்ததாக படிக்கும் போது அய்யோ என்று இருக்கும். அந்த அடிப்படையில் இந்த “சேலஞ்” பத்து அரிச்சந்திர புராணத்திற்கு சமம் “.
என்னைப் போன்றவர்களுக்கு ஒரே ஒரு வருத்தம். நான்கு காசு பார்த்ததுமே தனது அகந்தை வாழ்க்கையை அட்டகாசமாக சுயம்பு வாழ்க்கையாக சுயசரிதமாக தரும் சுத்தமான உண்மைத் தமிழர்களை பெற்றது இந்த புண்ணிய தமிழகம். உங்களைப் போன்றவர்களின் இருண்ட தொழில் வாழ்க்கை போல உங்களின் உண்மை சுயசரிதத்தை படிக்க முடிந்தால் பல இருண்ட மனங்களில் ஏற்ற வைத்த சேலஞ் 2 விளக்காக இருக்க முடியும்?
நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு, அதிகாரவர்க்கத்திற்கு, அடிவருடிகளுக்கு, அலையும் தாதாகளுக்கு என அத்தனை பேருக்கும் உங்களைக் கண்டால் பயம். ஆனால் அத்தனையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் அந்த அனுமன் காமராஜ் கண்டால் எங்களைப் போன்றவர்களுக்கு எக்கச்சக்கமான உற்சாகம்.
உங்கள் வாழ்க்கை முடிந்து மரணம் அருகில் சம்பவித்தாலும் கூட வாங்கும் கவர் பற்றிய கவர் ஸ்டோரி அடுத்த நக்கீரன் பதிப்பில் வருகின்றதா என்று பரிதவிப்போடு பார்த்து தான் இந்த அதிகார வர்க்கம் அடுத்த வாரத்தை வரவேற்கும். அப்போது தானே உங்கள் இதழ் கடைகளில் கிடைக்கும்.
நட்புடன்
தேவியர் இல்லம். திருப்பூர்.
25.08.2009


நல்ல பதிவு.

ஆனால் அண்ணன் ராஜகோபால் என்கிற நக்கீரன் கோபால் அவர்கள் பத்திரிக்கை ஆரம்பிக்கும் முன் முட்டி மோதி தன் வாழ்க்கையில் பெரும்பாடு பட்ட விசயங்களை மிகத்தெளிவாக தெரிவித்திருக்கிறீர்கள். இது நக்கீரன் கோபாலின் ஒரு பக்கம் மட்டுமே!
மறு பக்கம் பற்றி தெரியுமா?* நக்கீரன் பத்திரிக்கைக்கு இருவிதமான நிறுபர்கள் இருக்கிறார்கள். ஒன்று நேரடியாக அரசியல் தலைவர்களை ,விழாக்களை, நடிகைகளை பேட்டி எடுத்து (ரூம் போட்டுத் தண்ணியடித்து புலணாய்வு செய்து) செய்தியாக வெளியிடுவார்கள்.இரண்டாவது வகை “பிளாக் ரிப்போர்டர்” எனப்படும் உளவு நிறுபர்கள். அதாவது இவர்களின் வேலை என்னவென்றால் பெரியப் பெரிய அரசியல் புள்ளிகளின் பிள்ளைகளைப் பின்தொரடந்து அவர்களின் அந்தரங்களை படம்பிடித்து வைத்துக்கொண்டு அவர்களின் தந்தைகளிடம் பண பேரம் ஆரம்பிப்பார்கள். அதாவது அவர் தன்னை நக்கீரன் நிறுபர் என காட்டிக்கொள்ள மாட்டார். அவ்வாறு பேரம் படியாத சூழ்நிலைகளில் அந்தப் போட்டாக்கள் அனைத்தும் நக்கீரன் பத்திரிக்கையில் “பிரபல புள்ளி மகனின் காம லீலைகள்” என்ற பெயரில் வெளியாகும். அத்தனையும் பொம்பளை கேஸ் என்பதால் அதிகபட்சமாக பேரம் படிந்துவிடும்.
* சின்ன சின்ன தவறுகள் செய்து கொண்டிருந்த சந்தன வீரப்பனை ஆள்கடத்தல் செய்ய பழக்கியதே இந்த கோபால் தான். அதிலும் முக்கியமாக ராஜ்குமாரை கடத்த திட்டம் வகுத்துக்கொடுத்தது கோபால் தான்.
* ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில் அவருக்கு கைமாறிய பிணையத்தொகை சுமார் 200 கோடிகள். இதிலே வீரப்பனுக்கு கிடைத்தது வெறும் 4 முதல் 5 கோடிகள் தான்.* இரண்டு முறை அரசு தூதராக சென்று வந்த நிலையில் பணப்பேரம் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நெற்றிக்கண் ஆசிரியர் பாயும் புலி காட்டுக்குள் நுழைந்து விட அவரை போலீஸ் என நினைத்த வீரப்பன் , பாயும்புலியை கட்டிவைத்து பதம் பார்த்துவிட்டு கடைசியில் அவரை சோதனையிடும் போது நெற்றிக்கண் அடையாள அட்டையைக் கண்டு அவரை விடுவித்து விளக்கம் கேட்க அங்கு தான் 200 கோடி விசயத்தை போட்டுடைக்க வெறியாகிய வீரப்பன் இனிமேல் அவன் வந்தால் அவனின் உயிர் இங்குதான் சமாதியாகும் என எச்சரித்து அனுப்பியது முழுமையாக ஆதாரத்துடன் நெற்றிக்கண்ணில் வெளியாகியது.
*இந்த செய்தி வந்த அடுத்த நிமிடம் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல கோபால், தான் இனிமேல் காட்டிக்கு செல்ல போவதில்லை என வெளியான செய்தி* வீரப்பன் அந்தப் பகுதி கலெக்டருக்கு அனுப்பிய கேசட்டில் இனிமேல் கோபால் இங்கே வரக்கூடாது என தெரிவித்து அனுப்பியதும் மாற்று ஏற்பாடாக நெடுமாறன், கல்யாணியை தூதராக அனுப்பி ராஜ்குமாரை மீட்டது.* காட்டுக்குள் இருக்கும் போது கோபாலை தன் வாழ் நாளில் மறக்க மாட்டேன் என பேட்டி கொடுத்திருந்த ராஜ்குமார் மீண்டு வந்ததும் கோபாலின் மூஞ்சியில் முழிக்காமல் சென்றது.*ராஜ்குமார் மீண்டு வந்து கலைஞரை சந்தித்த போதும் அந்த சந்திப்பில் கோபால் கலந்து கொள்ளாதது.
என இன்னும் இன்னும் பட்டியல் நீளும். நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பிற்கு சரியான செய்தி நான் கொடுத்த இது தான். ஆக கோபால் ஒரு முழு தமிழ் வியாபாரியன்றி நீங்கள் புகழ்வதற்கு எந்தவிதமான தகுதியும் கோபாலிடம் கிடையாது. பச்சையாக சொல்லப்போனால் கோபால் ஒரு கிரிமினல்.
பிகு: கோபால் பற்றி இன்னும் எக்கச்சக்க விசயங்கள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் வெளியிட்டால் பல முக்கிய புள்ளிகளையும் இழுக்க வேண்டி வரும் எனபதால் இது போதும்.
பதில்
ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். - ஆகஸ்ட்27, 2009
இந்திய ஜனநாயகத்தில் விமர்சனம் என்பது இன்று வரையில் இருப்பதால் இன்று வரையிலும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். உங்கள் விமர்சனத்தை நான் மறுக்க வில்லை. காரணம் நான் அருகில் இருந்து எதையும் பார்க்க வில்லை.
நக்கீரனின் முன்னாள் வாசகர் - ஆகஸ்ட்27, 2009

நக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள் – உங்கள் தலைப்பிலே உள்ளது நிச்சயம் அவருக்கு என்று இருண்ட பக்கங்கள் உண்டு.
அவரின் உழைப்பு / வளர்ச்சி பாராட்டுகுறியது. ஆனால் பாதை மாறிய பயணங்கள். லட்சியத்திற்காக ஆரம்பிக்கபட்ட பத்திரிக்கை இன்று லட்சங்களுக்காக நடத்தபடுகிறது.
“நக்கீரனின்” வளர்ச்சிக்கு ஐயா கணேஷன் போன்றவர்களின் உயிர்தியாகமும் ஒரு காரணம்.
ஆரம்பகாலத்தில் விளம்பரங்கள் இல்லாத / சினிமா செய்திகள் இல்லாத ஒரு தரமான ஏன் சொல்ல போனால் ஒரு இயக்கத்தின் பத்திரிக்கையாக / லட்சிய பத்திரிக்கையாக இருந்தது.
விளம்பரங்கள் தவிர்க்க முடியாதது… ஏற்று கொள்கிறோம் ஆனால் கால ஓட்டத்தில் நடிகைகளின் அங்கங்களை காட்டி பிழைப்பதற்கு துணிந்தவர் தானே இவர்… ஏன் அப்படி ஒரு பிழைப்பு? நீங்கள் சொல்லும் 40,000 வைத்து லட்சியத்துடன் துவங்கிவர் லட்சங்களையும் நல்ல தொரு பெயரினையும் பெற்ற பிறகு ஏன் அந்த தடுமாற்றம்.
+12 படித்த கால கட்டத்தில் க.சுப்பு அவர்களின் இங்கே ஒரு ஹிட்லர் தொடர் வந்தது. நக்கிரன் கொளுத்த பட்ட கால கட்டம் அது. கல்லலில் இருந்து மதுரக்கு பஸ்ஸில் சென்று வாங்கி வருவேன். இன்னொரு தொடர் அமெரிக்க வாழ் பெண் (பெயர் சரியாக நினைவில் இல்லை) எழுதியது பல தூண்டியது. காமராஜ் அவர்கள் அவர் பெயரால் எழுதிய ஆரம்ப கால புலணாய்வு கட்டுரைகள் அபாரம். ஆனால் சில ஆண்டுகளாக அவர் பெயரில் கட்டுரைகள் வரவில்லை சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.
காமராஜ் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை சென்று சிவகங்கை மாவட்ட நண்பர் ஒருவரின் உதவியுடன் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றோம். தூக்கம் என்றால் என்ன? கேட்கும்… ஏங்கும் கண்கள். பேச்சிலர் ரூம்களுக்கே உண்டான அலங்கோலமான அறையில் அதிகம் சிதறி கிடந்தது புத்தங்கள் தான்.
நக்கீரனின் வளர்ச்சி என்பது ஓட்டு மொத்த டீமின் அயராத உழைப்பு. ஆனால் இன்று அவர் என்ன செய்கிறார் தி.மு.கா வின் அதிகார பூர்வ ஏடாக மாறியுள்ளார். நக்கீரனின் நடுநிலை தவறி வேண்டியவர் வேண்டாதவர் என்ற நிலைக்கு வந்து வெகு நாளாகிவிட்டது.
90 களின் ஆரம்பத்தில் முதல் தர பத்திரிக்கையாக இருந்தது இன்று அதே நிலையில் உள்ளதா? என்ற கேள்வியை ஆசிரியர் திரு கோபல் அவர்கள் கேட்டு பார்க்கட்டும். பழைய வெறியை / லட்சியத்தை நான் அவர்களிடம் எதிர் பார்க்கிறேன். யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்ற அளவில் இருக்க வேண்டும்
அதை விடுத்து அந்த அந்த காலகட்டத்தில் உள்ள பரபரப்பு செய்திகளை வெளியீட்டு கல்லா கட்டும் சராசரி வியாபாரியாக இருக்க கூடாது.
ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யட்ட்டும் முதல் இதழில் இருந்து இன்று வரை வெளி வந்த அனைத்து இதழ்களையும் இடம் பெற செய்தால் பாதை மாறிய பயணம் தெரிய வரும் 95 க்கு முன் பின் என்று தான் நாம் தரம் பிரிக்கலாம்.
அவரின் மீது தனிப்பட்ட கோபம் இல்லை… ஓரு ஆரம்ப கால வாசகனால் அவர்களின் பாதை மாறிய பயணத்தை ஏற்க முடியவில்லை…
இன்றும் அவர்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. புலனாய்வு செய்திகளை படிப்பதற்கும் ஆர்வமும் நம்மிடம் இருக்கிறது அதற்காக ஒருவரின் அந்தரங்கத்தை அம்பலபடுத்துவது தான் என்றில்லாமல் சமுதாயத்தை பாதிக்க கூடிய கரை படிந்தவர்களை தோலுரித்து காட்ட வேண்டும்.
இன்றைய தமிழக இளைய சமூதாயம் பணம் தான் எல்லாம் அதை எப்படி வேண்டுமானலும் சம்பாதித்தால் சரி எதுவும் தவறில்லை என்ற மன நிலையில் சென்று கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அரசியலில் நேர்மைக்கு சுத்தமாக இடம் இல்லை.
போரட்ட குணம் மிக்க திரு கோபால் / காமராஜ் போன்றவர்களால் சிறு மாற்றத்தை கொண்டு வர முடியும்… பலரை தோலுரித்து காட்ட முடியும் அதை விடுத்து நடிகைகளில் அழுக்கு உள்ளாடை ரகசியங்களை வெளியீட்டு தமிழ் வாசகனின் அந்தரங்க அபிலாசைகளுக்கு தீனி போடுவதை தான் தொடருவோம் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.
மீண்டும் சொல்கிறேன்…..அவரின் மீது தனிப்பட்ட கோபம் இல்லை… ஓரு ஆரம்ப கால வாசகனால் அவர்களின் பாதை மாறிய பயணத்தை ஏற்க முடியவில்லை… தவறான வார்த்தைகள் இருந்தால் நீக்கி விடலாம்.
பதில்
ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். - ஆகஸ்ட்27, 2009
வீரம் சொறிந்த மண்ணில் இருந்து பிறந்து, இன்று வரை வீரர்களாகவே வாழ்ந்து கொண்டுருக்கும் கூட்டத்தில் இருந்து விவேகமான வார்த்தைகளை எழுதி விட்டு விருப்பம் இல்லாவிட்டால் நீக்கி விடுங்கள் என்றால் என்ன அர்த்தம்?
வாழ்க்கையின் வலிகள் உளிகளாக மாறி என்னை உருக்குலைக்காத கால கட்டத்தில் நானும் இந்த விஷயங்களை தொடராக படித்தவன். ஆனால் 2000 ல் வௌிவந்த வந்த போது அது வெறும் எழுத்துக்களாகத்தான் தெரிந்தது.
ஆனால் இன்று போராட்ட வாழ்க்கையில் போராடியவர்கள் எப்படி வெற்றி பெற்றுள்ளார்கள் என்று மொத்தமாக படிக்கும் போது தான் நம்முடைய தோல்விகள் தற்காலிகம் என்பதாக உணர்த்துகிறது.
மிக மிக அதிக வீச்சை சென்றடைந்து விட்ட இந்த தலைப்புக்கும் மொத்த பார்வையாளர்களுக்கும் பொதுவான விமர்சனமாய் நீங்கள் தந்த உங்களுக்கு நன்றி.
என்னுடைய பதிவு எழுத்துக்களின் ராசியே அது தான். ஒரே ஒருவரின் விமர்சனம். அதுவே தரமும் தராதரத்தையும் விளக்கி விடுவதாக இருந்து வருகின்றது.
எவருக்கும் நான் சார்பாளனன் இல்லை. எவரையுமே வெறுக்கும் சூழ்நிலை வாழ்க்கையும் இல்லை.
இந்த எழுத்துக்கள் சேர வேண்டிய தூரம் அதிகம் என்பதாக நினைத்து போது சேர்ந்து விட்டது என்ற தகவல் வந்தது. ஒரு சந்தோஷம் என்பதாக எடுத்துக்கொள்வதோடு தரமும் மாறும் என்ற நம்பிக்கை உங்களை போல் எனக்கும் உண்டு. அதற்கான சான்றிதழ் விரைவில் வரும் என்ற நம்பிக்கை உண்டு.
காரணம் அவரே ஒரு பேட்டியில் நான்கு வெவ்வேறு துறை சார்ந்த பத்திரிக்கை வௌியிடும் போது முரண்பட்ட கருத்துக்களை திணித்து கேலிகுறியாக்கி விடாதீர்கள் என்று அறிவுறுத்தி உள்ளேன் என்று சொல்லி உள்ளேன் என்பதில் இருந்து வளர்ந்து விட்டார் என்பதும், வாழ்க்கையில் மொத்த நிர்வாகமும் சார்ந்தவர்களின் ஆளுமையில் இருப்பதாகவும் புரிகின்றது.
எத்தனையோ பத்திரிக்கைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. காரணம் அவர்களுக்குண்டான விலை கிடைத்த அவஸ்யத்தில் அவசரமாய் மறைந்து விட்டார்கள்.
ஆனால் உங்களைப் போலவே திரு. கோபால் அவர்களின் மேல் நிறைய நம்பிக்கை உண்டு.
கனவு மெய்ப்பட வேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும்.
சீ.பிரபாகரன் - ஆகஸ்ட்26, 2009
நக்கீரனின் உழைப்பும் அதன் வளர்ச்சியும் பாராட்டக்கூடியது.
குற்றமெனில் இன்று நக்கீரனின் நெற்றிக்கண் திறக்கப்படுகிறதா? கடந்த காலங்களை விட்டுவிடுவோம்… கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் கருணாநிதியின் குடும்ப ஆட்சியில் குற்றங்களே நடைபெறவில்லையா?
கருணாநிதியும் அவரின் குடும்பத்தினரும் ஊழலே செய்யவில்லையா? யாரையும் மிரட்டவில்லையா? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லையா? யாரையும் மிரட்டி சொத்துக்களை எழுதிவாங்கவில்லையா?
கடந்த மூன்று ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகத்தை இதுவரை நக்கீரன் கண்டித்தது உண்டா?
பதில்
ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். - ஆகஸ்ட்26, 2009
மிகச் சரியான விமர்சனம். நன்றி.
முதல் பதில் / முடித்தே ஆக வேண்டிய வழக்குகளின் எண்ணிகை வாழ்க்கைப் பாதையை மாற்றி இருக்குமோ?
இரண்டாவது பதில் – இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரையில் ஒரு பத்திரிக்கையாளரின் பங்களிப்பை மற்றவர்களை விட அவர் நன்றாகத்தான் செய்துள்ளார். அவரால் எந்த எல்லை வரையில் முயற்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு? மேலும் செய்தியாளரின் கடமை என்பது செய்திகளை மட்டுமே விரும்பினாலும் மற்றவர்கள் விரும்பாவிட்டாலும் தந்தே ஆக வேண்டியது.
மூன்றாவது பதில் – முதல் கேள்வியின் பதில்
உங்கள் இடுகையில் அஞ்சல் வழியே பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தாருங்களேன். உங்களின் சமூக சிந்தைக்கு தலை வணங்குகிறேன்.
ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். - ஆகஸ்ட்26, 2009
உங்களைப் பற்றி முழுமையாக தெரியவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும் போது என்னுடைய இறந்து போன தகப்பனார் நினைவுக்கு வந்து போகிறார். காரணம் அவர் வாழ்ந்த வரைக்கும் வீட்டுக்கு கடைக்கு தினமணி செய்தித்தாள் மட்டும் தான் வரும். கல்லூரி வரைக்கும் அதைமட்டுமே படித்து விட்டு கோபம் கோபமாக வரும். வெவ்வேறு இடங்களில் படங்கள் பார்ப்பதாக தினந்தந்திக்கு அலைவதுண்டு.
அத்தனை கண்ணியமான எழுத்துக்களையும் தௌிவான விஷயங்களையும் மட்டுமே மறைமுகமாக படிக்க உதவிய திரு ஏ.என். சிவராமன் அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிதான வித்யாசம் எனக்குத் தெரியவில்லை.
தேவியர் இல்லம். திருப்பூர்.
சுந்தர் - ஆகஸ்ட்25, 2009
அதுல எவ்வளவு உண்மை ? அதை பார்க்க வேண்டாமா – தி.மு. க. வின் எத்தனை ஊழல்களை பற்றி எழுதி இருக்கார் – நான் நக்கீரன் படிப்பதில்லை ஆனால் தீர்மானமாய் சொல்ல முடியும்- அவ்வளவாக எழுதி இருக்க மாட்டார்.
தருமபுரி பஸ் எரிப்பு – மூன்று மாணவி சாவு எப்படி கவர் ஸ்டோரி எழுதினார், – மதுரை தினகரன் ஆபிஸ் , மூன்று ஆள் எரிப்பு – எப்படி கவர் பண்ணினார் ????
தாழ்த்தப்பட்ட ராஜா என்ன செய்தார் யாருக்காவது தெரியுமா ???? நக்கீரன்ல இருக்கா?
ஸ்டாலின் இங்கிலாந்து , ஜப்பான் , பாங்காக் …எதற்காக போனார் –
அவர் எத்தனை கவர் வாங்கினாரோ, ….????????
ஏன் சார் நீங்க வேற… அதெல்லாம் இருண்ட பக்கத்தில் இருக்கலாம்.
ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். - ஆகஸ்ட்26, 2009
முதலில் கை கொடுங்கள். உங்களின் உண்மையான விமர்சனத்திற்கு. இது தான். இதைத்தான், இந்த மாதிரி தான் எதிர்பார்க்கின்றேன். இத்தனை ஆக்ரோஷம் உங்களிடம் இருந்து வருமா?
உண்மை தான். உங்கள் கூற்று மறுப்பதற்கு இல்லை.
எனக்கு கூட ஓரத்தில் சற்று அந்த எண்ணங்கள் உண்டு. ஆனால் நம்முடைய ஜனநாயகத்தில் இரண்டே கேள்விகள் உண்டு மட்டுமே உண்டு.
தெரிந்த பழகிய ……………….வேண்டுமா? தெரியாத பழகாத………….. வேண்டுமா?
எதையாவது ஒன்றைத் தான் நாம் தேர்ந்ததெடுக்க முடியும்?
கடைசியாக ஒரே விஷயம் உங்கள் பார்வைக்கு. இந்திய சட்ட இபிகோ வரலாற்றில் ஒரே நாளில் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே நபரின் மேல் பதியப்பட்டு அத்தனையும் பொய் வழக்குகள் என்று தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு மனிதன் வௌியே வந்து தன்னுடைய கடமையை இன்று வரையிலும் செய்து கொண்டுருக்க முடியுமா?
படித்துப் பார்த்தால் ஒரு வேளை உங்கள் பார்வைகள் மாறக்கூடிய வாய்ப்புண்டு?

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...