Saturday, July 28, 2012

டி.என்.எஸ்., பட்டயப் படிப்பு ரத்தாகுமா?


கப்பலில் பயிற்சி பெறுவதில் சிக்கல்:நடவடிக்கை எடுப்பாரா புது துணைவேந்தர்?
சென்னை:கடல்சார் கல்வியான "நாட்டிகல் சயின்ஸ்' பிரிவில், டி.என்.எஸ்., எனப்படும் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்கள், கப்பலில் 18 மாதங்கள் பயிற்சி பெற வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நாடு முழுவதும், ஆண்டுக்கு, 2,500 மாணவர்கள் இப்படிப்பில் சேரும் நிலையில், வெறும், 300 பேருக்கு மட்டுமே பயிற்சி பெறும் வாய்ப்பு கிட்டுகிறது.

இதனால், மீதமிருக்கும் மாணவர்கள், பட்டம் பெற முடியாமலும், வேலை வாய்ப்பு பெற முடியாமலும் திண்டாடி வருகின்றனர். இந்த படிப்பை ரத்து செய்வது ஒன்று தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும் என, இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு, கடல்சார் பல்கலைக்கழக புது துணைவேந்தர் ரகுராம் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரபலம்:நாடு முழுவதும், 85க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், கடல்சார் படிப்புகளை வழங்கி வருகின்றன. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், மகாராஷ்டிராவில், 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இதர மாநிலங்களில், மற்ற கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
கடல்சார் படிப்புகளில், பல பாடப்பிரிவுகள் இருந்தாலும், அதில் "டி.எஸ்சி., நாட்டிகல் சயின்ஸ்' பாடப் பிரிவு மிகவும் பிரபலம்.
மூன்றாண்டு பட்டயப் படிப்பான இதில், ஆறு செமஸ்டர்கள் உள்ளன. முதல் 12 மாதம், கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும். இதில், இரு செமஸ்டர்கள் வருகின்றன. அடுத்து, 18 மாதங்கள், கப்பலில் பயிற்சி பெற வேண்டும். இதில், மூன்று செமஸ்டர்கள் வருகின்றன.

கப்பல் பயிற்சிக்குப் பின், மீண்டும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு வந்து, ஆறு மாதங்கள் படிக்க வேண்டும். அப்போது, ஒரு செமஸ்டர் உண்டு. இவற்றில், கப்பல் பயிற்சி முடிக்கும் மாணவருக்கு, சிறப்பு பட்டயமும் வழங்கப்படுகிறது.
வாய்ப்பு:நாடு முழுவதும், ஆண்டுக்கு, 2,500 பேர் இதில் சேர்கின்றனர். ஆனால், முதல் ஒரு ஆண்டு படிப்பு முடிந்ததும், 18 மாதங்கள் கப்பல் பயிற்சிக்கு செல்லும்போது, மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. தேசிய அளவில், வெறும், 300 மாணவர்களுக்கு மட்டுமே, கப்பலில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற மாணவர்களுக்கு, இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. போதிய கப்பல்கள் இல்லாததும், இருக்கும் கப்பல்களில், மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக நேரம் ஒதுக்க முடியாததும், முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.

இதனால், கப்பல் பயிற்சி பெறுபவர்கள் மட்டுமே, மீதமுள்ள படிப்பை நிறைவு செய்து, பட்டயம் பெற முடிகிறது. மற்றவர்கள், படிப்பை முடிக்க முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
துறை சார்ந்தவர்கள் கருத்து:கடல்சார் படிப்புகள் சார்ந்த துறை வல்லுனர்கள் கூறியதாவது:
கடந்த 2007ல் இருந்து, இந்தப் பிரச்னை நடந்து வருகிறது. இதுவரை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கப்பல் பயிற்சி பெறாமல் உள்ளனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. தேசிய அளவில், கடல் சார் பல்கலைக்கழகம், சென்னை அருகே இயங்கி வருகிறது. எனினும், இந்த படிப்புகளுக்கான குடுமி, மும்பையில் உள்ள கப்பல் துறை இயக்குனர் ஜெனரலிடம் உள்ளது.

படிப்பை, பல்கலைக்கழகம் வழங்கினாலும், கப்பலில் பயிற்சி பெற, இயக்குனர் ஜெனரலின் அனுமதி தேவை. கப்பலில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததைக் காரணம் காட்டி, பி.எஸ்சி., நாட்டிகல் சயின்ஸ் பாடப் பிரிவை நிறுத்திவிடலாம் என, ஏற்கனவே கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் தெரிவித்தார். ஆனால், இதை பல்கலைக்கழகம் ஏற்காமல், தொடர்ந்து மாணவர் சேர்க்கையை அனுமதித்து வருகிறது. இதனால், பிரச்னையும் தொடர்கிறது. இந்த படிப்பை ரத்து செய்வதன் மூலம் மட்டுமே, இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.இவ்வாறு, துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு, கப்பல் துறை இயக்குனர் அலுவலகம்( டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங்) இயங்கி வருகிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, கடல்சார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த இரண்டும் பல வழக்குகளில் முட்டி மோதி வருகின்றன. மேலும், கடல் சார் பல்கலைக்கழகம், பல ஊழல் வழக்குகளில் திளைத்து வருகிறது.இந்த பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது ஊழல் வழக்குகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்திற்கு ரகுராம் என்பவர், புது துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ளார். நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியை தீர்க்க, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...