Saturday, November 20, 2010

காவல்துறை உங்கள் "நண்பன்': உதவிக்கு வந்தவர் மீதே வழக்கு

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Chennai&artid=334422&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%22%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D

சென்னை, நவ. 19: சென்னையில் சாலை விபத்து ஒன்றில் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்க உதவியவர் மீதே போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சாலை விபத்துகள் ஏற்பட்டால், அதில் காயமடைந்த நபரை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். காயமடைந்தவருக்கு விரைந்து மருத்துவ உதவி கிடைத்தால் மட்டுமே விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்க முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டு, விபத்துகளில் யார் காயமடைந்தாலும், காயமடைந்தவரை விரைந்து மருத்துவமனையில் சேர்க்க பொதுமக்களும், சக வாகன ஓட்டிகளும் போலீஸாருக்கு உதவ வேண்டும் என போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், அந்த பிரசாரத்துக்கு, போக்குவரத்துப் போலீஸாரின் செயல்பாடே எதிராக அமைவது போன்ற சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் கடந்த புதன்கிழமை காலையில் விபத்து ஒன்று ஏற்பட்டது.
கீழ்பாக்கம் மார்க்கத்தில் இருந்து அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் செல்வதற்கான சிக்னல் அனுமதி கிடைத்தவுடன் அங்கு நின்றிருந்த வாகனங்கள் வேகமாக புறப்படத்தொடங்கியுள்ளன.
அப்போது, முதல் வரிசையில் இருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதில், ஒரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பக்கவாட்டில் சென்ற கார் ஒன்றில் லேசாக உரசி கீழே விழுந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட காரும், மற்றொரு மோட்டார் சைக்கிளும் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, காயமடைந்தவருக்கு உதவ முன் வந்துள்ளனர்.
அங்கிருந்த போக்குவரத்துக் காவலர், காரில் வந்த சிங்காரவேலன் என்ற நபரை உதவிக்கு அழைத்துள்ளார்.


ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு தாமதமானதால், போக்குவரத்துக் காவலரின் வேண்டுகோளை ஏற்று, காயமடைந்த நபரை தனது காரில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிங்காரவேலன் சேர்த்துள்ளார்.
இந்த உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி 50-ஐயும் சிங்காரவேலனிடம் போக்குவரத்துக் காவலர் கொடுத்துள்ளார்.
அதேசமயத்தில், வேறு ஏதாவது தகவல் தேவைபடும் நிலையில் தொடர்பு கொள்வதற்காக என்று கூறி சிங்காரவேலனின் செல்போன் எண்ணையும் அவர் குறித்துக் கொண்டார்.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில், கீழ்பாக்கம் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் இருந்து முருகேசன் என்ற பெயரில் பேசிய அதிகாரி விசாரணைக்காக வருமாறு சிங்காரவேலனை அழைத்தாராம்.


இதன்படி, புதன்கிழமை மாலையில் சென்ற சிங்காரவேலனின் காரை சோதனையிட்ட போலீஸார், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துக் கொண்டனர்.
ஜாமீன் அளிக்க 2 பேரை அழைத்துக் கொண்டு, 5 ஆயிரம் பணத்துடன் அடுத்த நாள் காலையில் வருமாறு தன்னை போலீஸார் அறிவுறுத்தியதாக சிங்காரவேலன் தெரிவித்தார்.
விபத்தில் சம்பந்தப்படாத தனது காரை ஏன் பறிமுதல் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்ததாக சிங்காரவேலன் கூறினார்.


இருப்பினும், இந்த வழக்கு குறித்த உறுதியான தகவல் எதையும் தெரிவிக்க கீழ்பாக்கம் போக்குவரத்து போலீஸார் மறுத்துவிட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த போக்குவரத்து காவலர், சிங்காரவேலனுக்கும், விபத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ள நிலையில், உதவிக்கு வந்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது விநோதமாக உள்ளது.
விபத்து ஏற்பட்டால் விரைந்து உதவ வேண்டும் என்று ஒரு பக்கம் கூறிவரும் போக்குவரத்து போலீஸார், சிங்காரவேலன் போன்று உதவிக்கு வருவோர் மீதே வழக்கு பதிவு செய்தால் மற்றவர்கள் எப்படி உதவிக்கு வருவார்கள்?

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...