Monday, November 16, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 167: ரணில் பிரதமரானார்!

By Paavai Chandran

புலிகளிடம் இழந்த ஆனையிறவை மீண்டும் கைப்பற்றி விடுவோம் என்ற நினைப்பில், பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே கொழும்பிலிருந்து ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை விமானத்தில் கூட்டி வந்திருந்தார். அவர்களனைவரும் பலாலி விமானதளத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

உயிரிழந்த, காயம்பட்ட, கண்ணிவெடியில் கால்களை இழந்தவர்களை நூற்றுக்கணக்கில் கொண்டு செல்ல, பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டன. போதாக்குறைக்கு கொழும்பிலிருந்து மேலும் விமானங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்களை ஏற்றி அனுப்புவதைப் பத்திரிகையாளர்கள் நேரில் கண்டு திகைத்தனர். அவர்களில் பலரும் தாங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு இட்டிருந்த தலைப்பு: "அக்னி ஜ்வாலை நெருப்பை கக்காதது ஏன்?' என்பதாகும்.

இலங்கை ராணுவத்துக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டபிறகும் சந்திரிகா, நார்வே சமரசத்தை ஏற்கவில்லை. நார்வே நாட்டுக்கு முன்பாக, வாஜ்பாய் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்று, ஜஸ்வந்த் சிங்கை கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

இக்காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவருடனான சந்திப்புக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா முயன்றார். சந்திக்கலாம், என்ன தகவல் வேண்டுமோ அதைப் பெற்றுத்தர முடியும்; ஆனால் பிரபாகரனிடம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடச் சொல்லக்கூடாது என்று பிரஜேஷ் மிஸ்ராவிடம் சொல்லி, அதற்கு அவர் உறுதிகொடுத்த பின்பு, அவ்வாறு கேட்கமாட்டோம் என்று பிரஜேஷ் சொன்னபிறகு பிரபாகரனிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா விதித்த தடையை நீக்கினால் நல்லது என்கிற பிரபாகரனின் விருப்பத்திற்கு, தடைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்று பிர்ஜேஷ் மிஸ்ரா விளக்கமளித்தார். இந்திய சமரச முயற்சிக்கு ஒத்துக்கொண்டதைப் பிரபாகரன் 2, ஜூன் 2000-இல் பிரஜேஷ் மிஸ்ராவுக்கு தெரிவித்தபின்னர்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கொழும்பு சென்றார். சந்திரிகாவிடம் பேசினார்.

இந்தியாவின் சமரச முயற்சிக்கு சந்திரிகா ஒத்துக்கொள்ளாததால், அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. இந்த முயற்சிகளில் இந்திய சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, மறவன்புலவு க.சச்சிதானந்தம், காசி.ஆனந்தன், பழ.நெடுமாறன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோன்று இங்கிலாந்தும் சமரச முயற்சியில் ஈடுபட முயன்று, எதிர் எதிரான சிங்களக் கட்சிகளிடையே இனப் பிரச்னையில் ஒத்த கருத்தை உருவாக்க முயன்றது. இந்தத் திட்டத்துக்கும் சந்திரிகா முன்வரவில்லை.

இவ்வாறே நார்வேயின் சமரச முயற்சியையும் அவர் புறந்தள்ளிவிட முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. விடுதலைப் புலிகள் சந்திரிகாவுக்கு ஒரு பாடத்தைச் சொல்ல விரும்பினார்கள்.

"1983-ஜூலை படுகொலை நினவுநாளி'ல், ஜூலை 24, 2001 அன்று அதிகாலை, விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த 14 பேர் கொழும்புக்கு வடக்கே உள்ள கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை முற்றுகையிட்டனர். புலிகளின் உளவுப் பிரிவு பல மாதங்களாக திரட்டிய தகவல்களின் அடிப்படையில், போராளிகள் ராணுவ வீரர்களின் சீருடையில் உள்ளே நுழைந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில், 8 விமானப்படை விமானங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அதிர்ந்த விமானப்படை வீரர்களுக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. விமானப்படைத் தளத்தையொட்டிதான் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையமும் இருந்தது. போராளிகள் அங்கும் நுழைந்து 3 பயணிகள் விமானங்களைத் தாக்கி அழித்தனர். அதுதவிர இரு இடங்களிலும் சேர்த்து 16 சிறு போர்விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.

விமானங்கள் தாக்குதலுக்குள்ளானதும், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் வீரர்கள் அங்கே குவிந்தனர். அவர்கள், 14 புலிகளையும் சுற்றிவளைத்து தாக்கிய நிலையிலும், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை அழித்த அவர்களில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் சயனைட் குப்பி கடித்து உயிர்துறந்தனர்.

இந்தச் சம்பவம் இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி, பரபரப்புக்குள்ளானது. இதன் உடனடித் தாக்கமாக சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொண்டு, இலங்கைப் பயணத்தை ரத்து செய்ததில் முடிந்தது. இன்னொரு விளைவாக, வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன.

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில், "தொடர் யுத்தம் காரணமாக, பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வளர்ச்சித் திட்டங்களுக்குப் போகவேண்டிய நிதி, யுத்தச் செலவுகளுக்கும், ஆயுதங்களுக்குமே திருப்பிவிடப்படுகிறது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.352).

ஆனையிறவு மீட்பில் பலத்த அடிவாங்கிய சந்திரிகா, அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், ராணுவரீதியாகவும் கடும் நெருக்கடிக்கும், தொடர் விமர்சனங்களுக்கும் ஆளானார். இதற்கு மேலும் அழிவைச் சந்திக்க முடியாது என்று முடிவெடுத்த சந்திரிகா, லட்சுமண் கதிர்காமரை அழைத்து, நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளைப் புதுப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

லட்சுமண் கதிர்காமர், நார்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஜான் வெஸ்ட்போர்க்கைத் தொடர்பு கொண்டார். அவர் முந்தைய முயற்சிகளில் காயமடைந்த விடுதலைப் புலிகளிடம் தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்களை விளக்கினார். இருப்பினும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக ஜான் வெஸ்ட்போர்க் தெரிவித்து, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைத் தொடர்பு கொண்டபோது, அவர், விடுதலைப் புலிகள் மீதான தடையையும், பொருளாதாரத் தடையையும் விலக்குவதுடன் இருதரப்பு போர்நிறுத்தத்துக்கான அறிவிப்பை வெளியிடுவதும் அவசியம் என வலியுறுத்தினார். ஆனால், சந்திரிகா இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதே வேளையில், நார்வே நாட்டிலும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருந்தது. தொழில்கட்சி அரசு பதவி விலகி, கன்சர்வேடிவ் கட்சியும், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியும் இணைந்த அரசு பதவியேற்று, அதன் பிரதமராக கே.எம்.பாண்டெவிக் மற்றும் புதிய வெளியுறத்துறை அமைச்சராக ஜான் பீட்டர்சன் பொறுப்பேற்றதும், இலங்கை சமாதான முயற்சிகளின் தூதுவராக எரிக் சோல்ஹைம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ரணில் விக்ரமசிங்கே இருக்கும்போது, தனது தேர்தல் அறிக்கையில் "அமைதி, அமைதி மட்டுமே தனது கட்சியின் முக்கிய அம்சமாக இருக்கும். முந்தைய அரசின் தவறான அணுகுமுறைகளால் ஏற்பட்ட போரின் விளைவாக அல்லலுற்ற நாம், ஒன்றிணைந்த இலங்கையில் அனைவரும் ஏற்கும் வகையிலான சமரசத் திட்டத்தை முன்வைத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம். சமாதானப் பேச்சைத் தொடர்வோம். விடுதலைப் புலிகளை அரவணைத்துச் செல்வோம். அனைவரும் ஏற்றால் நாட்டின் அரசியலமைப்பில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த புதிய இலங்கையைப் படைப்போம். வடக்கு-கிழக்கில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை அவர்களது பகுதியிலேயே மீண்டும் குடியமர்த்தவும், "கமிஷன்' ஒன்றையும் அமைப்போம். முதற்கட்டமாக அங்குள்ள மக்களின் அன்றாடத் தேவைக்குண்டான அனைத்துப் பொருள்களும் தினசரி கிடைக்கும் வகையான சூழலை உருவாக்கித் தருவோம்' என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று, வே.பிரபாகரன் 27, நவம்பர் 2001 மாவீரர் நாள் உரையில், "ராணுவமயம் என்றும் அதன் மூலமே தீர்வு என்றும் நம்பிக்கை கொண்ட அடக்குமுறையாளர்களை சிங்கள மக்கள் அடையாளம் கண்டு இத் தேர்தலில் ஒதுக்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வுரையில் அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் சிங்களவர்களின் எதிரிகளல்ல. அவர்களுக்கெதிராகவும் நாங்கள் போராடவில்லை. சிங்களப் பேரினவாதிகளையும், பேரினவாத அரசியலாளர்களையும் மட்டுமே எதிர்க்கிறோம். இவர்களால்தான் தமிழ்-சிங்கள மோதல்கள் உருவாகின்றன. எங்களுக்கு நன்றாகத் தெரியும், போர் என்பது தமிழர்களை மட்டுமல்ல, அது சிங்களவர்களையும் பாதிக்கிறது என்று. போர் வெறியால், அடக்குமுறையால், அப்பாவி சிங்கள இளைஞர்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கின்றனர். எனவே இத் தீவில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தவல்ல, தமிழர்களுக்குரிய நல்ல தீர்வைத் தரக்கூடியவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் அணி பெரும்பான்மை பலம் பெற்றது. 5, டிசம்பர் 2001-இல் ரணில் பிரதமரானார். புலிகள் வழக்கம்போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஒரு மாதம் போர்நிறுத்தம் அறிவித்தார்கள். புதிய பிரதமரான ரணிலும் பதிலுக்கு போர்நிறுத்தம் அறிவித்தார்.
Source: www.dinamani.com

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...