Showing posts with label Eelam. Show all posts
Showing posts with label Eelam. Show all posts

Wednesday, February 22, 2012

தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்!


பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநாடு அமைத்துக் கொள்ளக் கூடிய “சுயநிர்ணய உரிமை” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான்.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வேடத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஏற்காத அமெரிக்கா இப்போது சுயநல நோக்குடன் பலுசிஸ்தான் தனி நாடாகலாமே என்று சப்பை கட்டுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை இருமுறை அழைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு அனைத்து ஊடகங்களும் இத்தகைய தீர்மானங்களின் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் குற்றம்சாட்டி, அப்படியானால் இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் தனிநாடு அமைக்கும் சுயநிர்ணய உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றன.
பலுசிஸ்தான் விவகாரம் என்ன?
ஈரான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளைக் கொண்டது பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்கும் பலுசிஸ்தான்.
பலுசிஸ்தானியர்கள் பழங்குடி இன மக்கள். இவர்களது நலன்களை நீண்டகாலமாகவே பாகிஸ்தான் அரசுகள் புறக்கணித்து வருகின்றன என்பது குற்றச்சாட்டு.
இதனால் தங்களது மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி ஆயுதப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் பலுசிஸ்தானியர்கள்.
பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அனைத்துவித மூர்க்கத்தனமான இனப்படுகொலைகளையும் பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.
அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், தமிழினப் படுகொலை நிகழ்த்தியதுபோல் நாங்கள் பலுசிஸ்தான் இனப் படுகொலை நடத்த வகுப்பு எடுக்குமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பலுசிஸ்தானின் முக்கியத்துவம்
பலுசிஸ்தான் ஒரு தனி மாகாணம் மட்டுமல்ல. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பூகோளப் பிரதேசமும் கூட.
பலுசிஸ்தான் மாகாணத்தின் கவ்தார் துறைமுகம் மிக முக்கியமான ஒன்று. இந்த அரபிக் கடல் துறைமுகம் இப்போது சீனாவின் வசம் உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்த துறைமுகத்தில் இறக்கி வைத்து இங்கிருந்து எல்லை மாகாணங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்வதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று கணக்குப் போட்டது சீனா.
ஏனெனில் அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் மட்டுமின்றி மலாக்கா ஜலசந்தியைத் தாண்டி தங்கள் நாட்டுக்கு கொண்டுபோய் அங்கிருந்து மீண்டும் எல்லை மாகாணங்களுக்கு கச்சா எண்ணெய் அனுப்புவதற்கு பெரும் பொருட்செலவை செய்து வந்தது சீனா.
இந்த செலவுக்குப் பேசாமல் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை தூர்வாரி சீரமைத்து விரிவாக்கி ஒரு ரயில் பாதையையும் போட்டுவிட்டாலே பாதி பணம் மிச்சம் என்று கணக்குப் போட்டு வெற்றியும் பெற்றுவிட்டது சீனா.
துறைமுகப் பணிகளை சீனா மேற்கொண்டபோதும் ரயில் பாதை பணிகளின் போதும் பலுசிஸ்தானியர்கள் சும்மா இருக்கவில்லை. இத்தகைய பணிகளில் பலுசிஸ்தானியர்களுக்கு முன்னுரிமை கோரினர். சீனாவும் பாகிஸ்தானும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.சீன நாட்டவரையே பயன்படுத்திக் கொண்டனர்.
இதனால் அவ்வப்போது சீனப் பொறியாளர்களை பலுசிஸ்தான் ஆயுதக் குழு கடத்திச் செல்வது வாடிக்கையாகிப் போனது.
அமெரிக்காவின் தலையீடு
அரபிக் கடலின் ‘இங்கிட்டு’ கவ்தார் ‘அங்கிட்டு’ சவூதி அரேபியா, அப்பால ஈரான், இப்பால ஆப்கானிஸ்தான்.. சீனா என ஒட்டுமொத்த எதிரிகள் கூடி கும்மியடிக்கும் இடமாக பலுசிஸ்தான் இருக்கிறதே என்ற கவலை அமெரிக்காவுக்கு.
ஈராக்கில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரைக்கும் வந்து பாகிஸ்தானில் பின்லேடனை சாய்ச்சு எல்லாம் செஞ்சாச்சு..ஈரான்தான் பாக்கி… இஸ்ரேலைவிட்டு அடிச்சா சேதாரம் ரொம்ப அதிகம்… நாமளே அடிக்கலாம்.. எப்படி அடிக்கலாம்? என்ற யோசனைகளுக்கான விடைதான் அமெரிக்காவின் தற்போதைய தீர்மானம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பாகிஸ்தானை துண்டாடிட்டு பலுசிஸ்தானை தனிநாடாக்க அனுமதித்தால் சீனாவுக்கும் நெருக்கடி,பாகிஸ்தானுக்கும் ஆப்பு. பலுசிஸ்தானில் ஊடுருவிவிட்டால் மத்திய கிழக்கு நாட்டிலும் கால்வெச்சமாதிரி, தெற்காசியாவிலும் கால்வெச்ச மாதிரி என்கிறது அமெரிக்க கணக்கு.
இந்தியா நிலை
பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமை விவகாரத்தில் இந்தியா மெளனமாகவே இருந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியா என்ற நாடே பல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை கபளீகரம் செய்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் மூச்சேவிட வாய்ப்பில்லை.
இருப்பினும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிக்கல் என்பதால் மெளனமாக சிரித்தாலும் அடிவயிறு கலங்கியேத்தான் கிடக்கும். ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக சுயநிர்ணய உரிமை கோரி போராடிய வெற்றிபெற்ற இயக்கமாக வலம்வந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு அமைத்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து அகன்ற தமிழ்நாட்டை தென்னாசியாவில் உருவாக்கிவிடுவார்கள் என்ற அச்சமே முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று புதைக்க கரம் கொடுத்தது.
இந்த அச்சம்தான் இன்றளவும் தமிழ்நாட்டு விவகாரங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு இருக்கிறது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
SOURCE:www.tamilcanadian.com
விடுதலைப் புலிகளும் அமெரிக்காவும்
தற்போது பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் அமெரிக்கா, இதே உரிமை கோரி ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க துணை நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பலுசிஸ்தானத்தில் எப்படி ஒரு கவ்தாரோ அதுபோலத்தான் தமிழீழத்தின் தலைநகராக கருதப்படும் திருகோணமலை துறைமுகமும்.
திருகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தென்னாசியாவையே கையில் வைத்திருப்பவர்கள் என்பது ராஜராஜசோழன் காலத்திலிருந்து தெற்காசிய பிராந்தியம் கண்டுவரும் உண்மை.
திருகோணமலைக்காக 1980களிலேயே அமெரிக்கா முயற்சித்தது. இலங்கையும் இடம் கொடுத்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒருநாட்டுக்கும் இலங்கை அனுமதி கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் எச்சரித்தார்.
1990களுக்குப் பிறகு நிலைமை தலைமைகீழ்.
சுயநிர்ணய உரிமை, தனிநாடு கோரிக்கையை கெட்டவார்த்தையாக நினைத்து சொந்த நாட்டு குடிமக்களின் உறவுகள் என்று கூட பார்க்காமல் தமிழர்களை விரோதிகளாகப் பார்த்து சீனாவுக்கு சிங்களவர்களோடு இணைந்து சிவப்புக் கம்பளம் விரித்தது.
இதில் சீனா,பாகிஸ்தான், இலங்கை, இந்தியா அத்தனை எதிரிகளும் ஓரணியில் வரிந்து கட்டி தமிழினத்தையே நிர்மூலமாக்கிவிட்டனர்.
இறுதி யுத்தகாலத்தில் குறிப்பாக 2002-ல் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான நார்வேயின் தலையீட்டில் உருவான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகளுடன் திருகோணமலைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கேற்கவும் அமெரிக்கா பேரம் பேசியது.
தலிபான் விவகாரத்தை முற்றாக நிராகரித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமது மாவீரர் நாள் உரையில் பிராந்திய வல்லரசுகள் மற்றும் மேற்குலக நாடுகள் தமிழீழப் பிரதேசத்தின் மீது அக்க்றை கொள்வதற்கான பின்புலமாக அவர்களது நலன்களும் இருக்கின்றன என்பதை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி வந்தார்.
இந்தியாவின் தலையீட்டால் புலிகளை ஒழிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு கை கொடுத்தது. இதே அமெரிக்காதான் இப்போது தெற்காசிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக செக் வைப்பது போல ‘சுயநிர்ணய உரிமை” என்ற ஆயுதத்தை முன்வைக்கிறது.
எந்த சுயநிர்ணய உரிமை முழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று இந்தியா நினைத்ததோ அது இப்போது டெல்லிக்கு ரொம்ப பக்கத்திலேயே கேட்கிறது என்பதுதான் முக்கியம்.

Sunday, February 19, 2012

அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றுமா? - தாயகத்தில் இருந்து வீரமணி


"உலக வல்லரசான அமெரிக்கா நினைத்தால் ஈழத்தமிழ் மக்களுக்கு நிலையான நிம்மதியான தீர்வொன்றைப் பெற்றுதர முடியுமென்று இன்றுவரை தமிழ் மக்கள் நம்புகின்றனர்."


ஜெனீவாவில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஈழத்தமிழ் மக்கள் சிறியதொரு மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இந்தச் செய்திகளின் தொடர்ச்சியாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்டீபன் ரெப் இலங்கை வந்துள்ளமையும், அவர் தமிழர் பிரதேசங்களுக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளமையும் மக்களுக்கு இந்த நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது.

ஆனால், அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து தமிழ் மக்கள் அபரிமிதமான நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை யாழ்.குடாநாட்டு மக்களின் கருத்துக்கள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது. 2008 ஆம் ஆண்டு தீவிரம் பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தமாக மாறி வன்னியில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்டபோது, தமிழர்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் நம்பியிருந்தனர். பாரிய கப்பல்கள் சகிதம் அமெரிக்கா கடல்வழியாக வரும் என்றும், அவற்றின் மூலம் பொதுமக்களும் போராளிகளும் மீட்கப்படுவார்கள் என்றும் அப்போது தமிழ் மக்கள் வெகுவாகவே நம்பியிருந்தனர்.

யுத்த வலயத்தில் சிக்குண்டிருந்த மக்கள் மட்டுமன்றி வடக்குக் கிழக்கு உட்பட ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் வசித்த தமிழ் மக்கள் மத்தியிலும் இந்தக் கருத்துக்கள் வேகமாக பரவியிருந்தன. மக்களின் இந்த அதீத நம்பிக்கைக்கு காரணமும் இல்லாமலில்லை. சிறுபான்மை மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க கூடியவரும், சிறுபான்மை மக்களின் உரிமைகளில் கூடிய கவனம் செலுத்துபவருமான பராக் ஒபாமா அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தமையே தமிழ் மக்களை இந்த நம்பிக்கைக்குள் ஈர்த்திருந்தது.

ஆனால் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும், நாசகார குண்டுகளையும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது வீசி அவர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, இதே அமெரிக்கா பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்காக சிறீலங்கா அரசிற்கு அழிவு ஆயுதங்களை வழங்கிய நாடுகளை தண்டிப்பதற்கோ, தட்டிக்கேட்பதற்கோ பதிலாக அந்த நாடுகளுடன் அமெரிக்கா நட்புரிமை பாராட்டிக் கொண்டிருந்தது.

ஒரு இனத்தை எந்த வகையில் அழித்தொழிக்க முடியுமோ, எந்த வகையில் துன்புறுத்த முடியுமோ, அத்தனை கொடூரங்களையும் மேற்கொண்ட சிறீலங்கா அரசை தண்டிக்காவிட்டாலும் தட்டிக்கேட்காமலிருந்த அமெரிக்காவின் செயல் குறித்து, ஈழத்தமிழ் மக்கள் இன்றுவரை கடும் விசனத்துடனும் கவலையுடனும் இருக்கின்றனர்.

யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்களை எட்டுகின்ற தற்போதைய நிலையில் சிறீலங்காவிற்கு எதிரான யுத்தக்குற்ற தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு அமெரிக்கா முயற்சியெடுத்திருப்பது குறித்து தமிழ் மக்கள் மனதில் சிறியதொரு மகிழ்ச்சி நிலவுகின்றபோதிலும் அந்த மகிழ்ச்சிக்குள் சந்தேகப் பார்வையும் தலைதூக்கியுள்ளது.

சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவரும் பட்சத்தில் அது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவிபுரியுமென்று ஜெனீவாவுக்கான அமெரிக்க தூதுக்குழுவின் பேச்சாளர் டேவிட் கெனடி கருத்து வெளியிட்டிருக்கின்றார். இக்கருத்து தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கின்றபோதிலும், என்ன நோக்கத்துடன் தற்போது அமெரிக்கா இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றது என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் யாழ்.குடநாட்டிலுள்ள சில புத்திஜீவிகள் கூறியுள்ளனர்.

சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கடும்போக்குடன் செயற்படும் சிறீலங்கா அரசாங்கத்தை தண்டிப்பது போன்று பாசாங்கு செய்வதன் மூலம் தனது பூகோள நலன்களை சாதிப்பதற்கு அமெரிக்கா முற்படுகின்றதோ என்று தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்டீபன் ரெப்பின் செயற்பாடுகள் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தமை தமிழ் மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது.

ஸ்ரீபன் ரெப் கடந்த 8ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்திருந்தார். ஏனைய நாடுகளிலிருந்து வருகை தரும் தூதுவர்களைப்போல் அல்லாது பல்வேறு விடயங்களையும் அவர் கேட்டறிந்திருக்கின்றார்.

குறிப்பாக யாழ்.மாவட்டத்திலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவத்தின் நிலைகள் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டிய இடங்கள், இராணுவத்தினர் தற்போது அமைத்துள்ள புதிய முகாம்கள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை விரிவாக கேட்டறிந்தார். யாழ்.மாவட்டச் செயலகத்திலுள்ள மாவட்டத்தின் கட்டமைக்கப்பட்ட பெரிய புவியியல் வரைபடமொன்றினுடாக மேற்படி விபரங்களை அவர் அறிந்து கொண்டார்.

மேலும் யுத்தத்தின்போது காணாமல்போனவர்கள் தொடர்பான விபரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்தார். அரச அதிபர் சிறீலங்கா அரசிற்கு சார்பான கருத்துக்களை கூறியபோதிலும் ஸ்டீபன் ரெப் அதனை பெரியளவில் கவனத்தில் எடுக்கவில்லை. மறுநாள் 9ம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்ற தூதுவர் செல்வபுரத்திலுள்ள யூதா தேவாலயத்தில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதுவரை வடக்குக் கிழக்கு மாகாணங்களிற்கு வருகை தந்த ஏனைய நாட்டுத் தூதுவர்கள் எவரும் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியாத நிலையில், அமெரிக்கத் தூதுவர் மக்களைச் சந்தித்துள்ளமை மக்கள் மனதில் சிறியதொரு நம்பிக்கையினைத் தோற்றுவித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் என்பதை அறிந்த மக்கள் தமது வேதனைகளை வெளிப்படையாகவே கொட்டித்தீர்த்தனர். யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அவரிடம் எடுத்துக் கூறிய மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நேரடியாக இராணுவத்திடம் தாங்கள் கையளித்த தமது பிள்ளைகள், தமது கணவன்மார் தொடர்பிலும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லையென்று கண்ணீர் மல்க கதறியழுதவாறு கூறினர்.

1990 ஆம் ஆண்டு யுத்தம், 2004 ஆம் சுனாமி இயற்கைப்பேரழிவு அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தம் என்று பல பேரழிவுகளை சந்தித்த பின்னர் தற்போது மீளக்குடியேறியுள்ள தங்களுக்கு இதுவரை எந்தவித அடிப்படைத் தேவைகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும் கூறினர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் அவர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் சில பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் ஏனைய இனங்களைப்போன்று தமிழ் இனமும் சமமான உரிமைகளுடன் வாழ விரும்புவதாகவும் கூறிய முல்லை மக்கள், இவ்விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நிலையான நிம்மதியான தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அமெரிக்கத் தூதுவர் ஏறக்குறைய 3 மணித்தியாலங்கள் வரை மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் வேதனைகளைப் பதிவாக்கினார்.

10ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்குச் சென்ற அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ரெப் குழுவினர் அங்கும் பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினர். முதல்நாள் வியாழக்கிழமை முல்லைத்தீவில் தனியிடமொன்றில் பொதுமக்களைச் சந்தித்ததால் அவர்கள் சென்ற பின்னர் இராணுவத்தினர் அந்த மக்களை விசாரணைக்குட்படுத்தியதை அறிந்த அமெரிக்கத் தூதுவர் கிளிநொச்சியில் பொது இடத்தில் மக்களைச் சந்திக்காமல், பல்வேறு இடங்களுக்கும் சென்று நேரடியாகவே மக்களுடன் கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு மக்கள் கூறிய அதே வேதனையான கருத்துக்களையே கிளிநொச்சி மக்களும் அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். மக்களின் வேதனைகளையும் விம்மல்களையும் பதிவாக்கிச் சென்றுள்ள அமெரிக்கா, சிறீலங்கா அரசு தொடர்பிலும் ஈழத்தமிழர் தொடர்பிலும் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதே தமிழ் மக்கள் மத்தியிலுள்ள எதிர்பார்ப்பாகவுள்ளது. நிலையான தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஈழத்தமிழ் மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தொடர்சியாக நடத்தி வரும் போராட்டங்களின் மத்தியில் அமெரிக்கா தற்போது தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டுவதாக வெளிப்படுகின்றது.

இந்தக் கரிசனையானது தமிழ் மக்களின் நலன்களுக்குச் சார்பானதா என்ற சந்தேகம் நிலவுகின்ற நிலையில் சார்பானதாக அமையவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா நினைத்தால் ஈழத்தமிழ் மக்களுக்கு நிலையான நிம்மதியான தீர்வொன்றைப் பெற்றுதர முடியுமென்று இன்றுவரை தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கை வீண்போக கூடாது. அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றக் கூடாது. சர்வதேச நாடுகளும் அமெரிக்காவும் இணைந்து தமிழ் மக்களுக்கு நிலையானதொரு தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்கவேண்டும் என்பதே ஈழத்தமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

நன்றி :ஈழமுரசு

Saturday, February 18, 2012

ராஜீவ் காந்தியை கொன்றது பிரபாகரனல்ல சி.ஐ.ஏ : விமல் வீரவன்ச


ராஜீவ்காந்தியைக் கொன்றால் தமது இயக்கத்திற்கு பாதகம் வருமென்பதை உணராத முட்டாள் இல்லை பிரபாகரன் என அமைச்சர் வீரவன்ச, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.
ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது.
பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.
காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய நண்பர் விமல் வீரவன்ச. சிங்கள அரசின் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் கூறியுள்ள கருத்து அந்த அரசின் கருத்தாக அமைய இடமுண்டு. சிறீலங்கா அரசு மீது சர்வதேச சமுதாயம் கொண்டு வரும் அழுத்தம் காரணமாக அது தாறுமாறாக கதைக்க ஆரம்பித்துள்ளது. போகும் போக்கில் மேலும் பல செய்திகள் விமல் வீரவன்ச வாயால் வரக்கூடிய வாய்ப்புண்டு.

Sunday, May 8, 2011

'Disseminate Lanka’s genocidal ambitions’

Published in The New Indian Express, Chennai on May 8, 2011:
CHENNAI: : Even though the United Nation’s Advisory Panel’s report asserts massive war crimes were committed by Sri Lanka during the last phase of the war, Tamils should not only toe the UN’s line, but disseminate to the international community that the state had indeed orchestrated a genocide on thousands of innocent Tamils under the pretext of ‘war on terrorism’, Prof Manivannan from Madras University has said.
Addressing a conference on ‘UN Advisory Panel Report-Eezham Freedom Struggle in geo-political web’ here at Loyola College on Saturday (organised by Save Tamils organisation), Manivannan said, “We the Tamilians have the moral obligations to go beyond the UN line of only war crime were committed by Lanka and should expose the island nation, which organised a mass genocide to kill the aspirations of a community over the past six decades, to the world.
Though many of us feel let down by the UN panel for merely stating that war crimes were committed by Lanka, we should see the report in a new dimension that it would (in future) pave way for the Tamils and even the other communities feeling suppression in their countries to rely upon the report to seek justice from internationally acclaimed tribunals, Manivannan said.
Since the massacre and systematic cleansing were meted out on ethnic Tamils for the past six decades, it is high time for the island nation to own up the moral responsibility to render justice to the oppressed Tamils in the country in future, Manivannan demanded.
Besides him, Prof. Paul Newman from Bangalore presented the mandate of the UN panel and elaborated on how the three-member panel worked to collect different data to nail the Lankan state, which had committed war crimes at the end of the war in 2009.

Tuesday, October 5, 2010

மனநலம் பாதித்த குழந்தைகளுடன் பரிதவிக்கும் இலங்கை பெண் அகதி


Source:http://www.dinamani.com
கும்மிடிப்பூண்டி, அக். 4: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 2 பிள்ளைகளுடன் போராடி வருகிறார் இலங்கை பெண்மணி தவமணிதேவி (60).

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன் பிரகாஷ் (25), மனநலம் பாதிக்கப்பட்ட மகள் சந்திரவதனா (30) ஆகியோருடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் இவர் தமிழக அரசின் உதவியை எதிர்நோக்கி இருக்கிறார்.

இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த வீரப்பபுரத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி தவமணிதேவி. சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அமிர்தலிங்கம் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. அப்போது சுமார் 10 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தினர், தவமணிதேவியின் வீட்டுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இச் சம்பவத்தில் தவமணிதேவி, அவரது மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனா உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். பிரகாஷுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அவருக்கு வலிப்பு நோயும், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது. சந்திரவதனாவுக்கும் மனநிலை பாதிக்கப்பட்டது.

அந்த நிலையில் தவமணிதேவி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வீடு, நகைகளை விற்று குடும்பத்துடன் தமிழகத்துக்கு அகதியாக வந்ததாகக் கூறுகிறார். மண்டபம் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அங்கு பிரகாஷ் மற்றும் சந்திரவதனா உடல்நிலை மோசமானதால், கூடல்பூதூர் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு தவமணிதேவி, தனது 90 வயதான தந்தை, மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனா ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருக்கிறார்.

இதுகுறித்து தவமணிதேவி கூறுகையில், ""சொந்த வீடு, நிலபுலன், வயிறார உணவு, அமைதியான வாழ்க்கை என்று இலங்கையில் வாழ்ந்து வந்த நாங்கள் விதி வசத்தால் உயிரைக் காத்துக்கொள்ள அகதிகளாய் தமிழகம் வந்தோம். வயிறார உணவுக்கே போராடி வரும் இந்த சூழலில், எனது மகன், மகள் ஆகியோரின் மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு உதவிட எனக்கு யாருமில்லை. எனவே தமிழக அரசு உதவிட வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் தவமணிதேவி தனது குடும்ப சூழலை விவரித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அகதிகள் முகாம் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.
தவமணிதேவியின் குடும்ப நிலையை உணர்ந்து, தமிழக அரசு உதவ முன் வரவேண்டும் என்பதே முகாம் மக்களின் கோரிக்கையாகும்.

Monday, July 20, 2009

கறுப்பு ஜூலை




இலங்கையின் வரலாற்றில் கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்பட்ட இனக் கலவரம் நடந்து இருபத்தாறு ஆண்டுகளாகின்ற போதிலும் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி மூட்டப்பட்ட தீ இன்னும் அணையவில்லை. தமிழர்களின் துயரம் தொடர்கிறது. இனப்பிரச்சினையும் தீரவில்லை. அந்த இனக் கலவரத்தினால் அகதியான பல தமிழ் மக்கள் இன்றுவரை அகதிகளாகவே வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.


உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி முகாம்கள் தொடர்கின்றன. சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்த போதிலும் தமிழினப் பிரச்சினை தீரவில்லை. தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையும் மங்குகின்றது. பிரச்சினையும் போராட்டம் புதிய வடிவம் எடுக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தையும் , தொடர்ச்சியாக கலவரங்களினாலும் போரினாலும் இறந்தவர்களையும் நினைவு கூர்ந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.





இவ்வாறு ஜூலை கலவரம் பற்றி வெளியிட்ட அறிக்கையில் செங்கொடிச் சங்கப் பொதுச் செயலாளர் ஏ. ஓ. இராமையா தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அகதிகள் நிலையில் தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டுக்குப் பின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் குறிப்பாக இந்தியாவில் தமிழ் மக்களுக்கான அநுதாபம் அலை மோதியது. ஓங்கி இருந்தது. சிங்கள மக்கள் மத்தியிலும் அநுதாப அலை வீசியது. ஆனால் தற்போது இந்நிலை மாறி வருகிறது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் அநுதாப அலை மங்கி வருகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் மக்களே காரணமென்ற பேரினவாத சக்திகளின் பெரும் பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சவால்கள் விட்டு பின் சரணாகதிப் பாதையில் செல்லும் பல தமிழ்த் தலைமைகளும் இப்பிரசாரத்திற்கு ஒத்து ஊதுகின்றன. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சிங்களப் பேனவாத சக்திகளால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகின்றனர். ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் மக்கள் வீறு கொண்டு எழுவர் என்பது வரலாற்று நியதி என்ற போதிலும் தற்போது அகதிகளின் பிரச்சினையே விஷ்வரூபமெடுத்துள்ளது.


1983 ஆம் ஆண்டு அகதிகளானவர்களிலிருந்து தற்போது அகதி முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் திறந்தவெளி சிறைச்சாலைகளிலும், சிறைக் கூடங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பிரச்சினையே பிரதானமானது. பலஸ்தீன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் அகதி முகாம்களில் வாழும் நிலைக்கே தற்போது தமிழ் அகதிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.


ஆகவே அகதிகளின் அவலக் குரலுக்கு ஏனைய தமிழ் மக்களும் அமைப்புகளும் செவிசாய்க்க வேண்டும். 1981, 1983 ஆம் ஆண்டு இனக் கலவரங்கள் 1981ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்திலும் 1983ஆம் ஆண்டு தலைநகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்களை நேரடியாக காணும் சந்தர்ப்பம் எனக்கும் எனது குடும்பத்தினர்களுக்கும் எனது தோழர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது.


இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அகதிகளாகச் சென்றனர். அகதிகளாக அகதி முகாம்களிலும் வெளியிலும் வாழ்கின்றனர். அதிகமான மக்கள் அகதி முகாம்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் திறந்த வெளி சிறைச்சாலைகளிலும் சிறைகூடங்களிலும் அவல வாழ்வு நடத்துவார்களென 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்திற்கு பின் எதிர்பார்க்கவில்லை. இலட்சக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்து உற்றார் உடைமைகளை இழந்து ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வாழும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை.





முன்பு யூத மக்களைப் போன்று தற்போது பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கைத் தமிழ் மக்களில் கணிசமானோர் அகதிகளாகக் காலங்கழிக்கின்றனர். எவ்வளவு காலத்திற்கு இந்த அகதி வாழ்வு தொடரும். சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது அங்கு வாழும் இலங்கை தமிழ் அகதிகள் சிலர் தாங்கள் வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்தை வெளியிட்டனர். ஆகவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் அகதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் பற்றியும் தமிழ் அமைப்புகளும் இடதுசாரி இயக்கங்களும் அக்கறை செலுத்துவது அவசியம்.


இலங்கையில் தமிழினப் பிரச்சினை இல்லை என பேரினவாத சக்திகள் பிரசாரம் செய்யும் போது நாடாளுமன்ற தமிழ்த் தலைமைகளும் ஏனைய தமிழ் அமைப்புகளும் இப்பிரச்சினை பற்றி போதிய அக்கறை செலுத்தாதிருப்பது சந்தர்ப்பவாதமாகும். சரணாகதி கொள்கையாகும். 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தை நினைவு கூரும் போது அகதிகளின் புனர்வாழ்வு பற்றி அக்கறை எடுத்து தோழமைச் சக்திகளை அணிதிரட்ட வேண்டும்.

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...