Monday, April 30, 2012

கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!




விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம்.
புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உலோகங்களாக விற்பதற்காக, வன்னியில் சிதறிக் கிடந்த குண்டுகளின் பாகங்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில்தான், அந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
கிளஸ்டர் குண்டின் ஒரு பகுதியான சிறிய குண்டு ஒன்று வெடித்தே, சிறுவன் மரணமானதாக, ஐ.நா கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான், முதல்முறையாக கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளஸ்டர் குண்டுகள் உலகின் மிகமோசமாக ஆயுதங்களாக கருதப்படுபவை.
ஒரு குண்டை விமானத்தில் இருந்து வீசும் போது, அது கீழே விழுந்து, அதிலுள்ள நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் பிரிந்து, வெடித்துச் சிதறி பரவலான சேதங்களை ஏற்படுத்தும்.
பேரழிவு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை சர்வதேச போர்ச்சட்டங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்படும் விமானக் குண்டுகளும், ஆட்டிலறிகளும் இலங்கைப் போரில் மிகச் சாதாரணமாகவே பயன்படுத்தப்பட்டன.
இந்தநிலையில்தான் கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
பேரழிவு ஆயுதமாக கருதப்படுவதால், கிளஸ்டர் குண்டுகளை உலகில் இருந்தே நாடுகளுக்கிடையிலான போர்களின் போதும் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சர்வதேச உடன்பாடு ஒன்று 2010ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
உலகில் உள்ள 60 நாடுகள் இதில் ஒப்பமிட்டுள்ளன.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதும், இலங்கை அதில் கையெழுத்திடவில்லை.
கிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்தவில்லை என்று கூறும் அரசாங்கம், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது சந்தேகத்துக்குரியதே.
பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை கிட்டத்தட்ட ஒரு போர்க்குற்றமாகவே சர்வதேச சமூகம் கருதுகிறது.
அதுவும், இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த குறுகலான போர் தவிர்ப்பு வலயப்பகுதி ஒன்றின் மீது இத்தகைய குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
புதுக்குடியிருப்பில் தான் இந்த கிளஸ்டர் குண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா முதல் முறையாக கிளஸ்டர் குண்டு பற்றிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.
ஆட்டிலறி ஷெல்களின் மூலம் கிளஸ்டர் குண்டுகள் ஏவப்படுவதாக அப்போது சந்தேகம் எழுப்பப்பட்டது.
அதற்குக் காரணம், ஆட்டிலறி ஷெல்கள் வீசப்பட்ட சற்று நேரத்தில் அடுத்தடுத்து சிறிய வெடிப்புகள் பல நிகழ்ந்ததுதான்.
அரசாங்கம் அப்போது அதை நிராகரித்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் புதுக்குடியிருப்புச் சமர் மிகவும் உக்கிரமானது.
சிறியதொரு நகரான புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமர் பல வாரங்களாக நீடித்தது.
புதுக்குடியிருப்பையே தமது இறுதித் தளமாகக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, அது வாழ்வா சாவா என்ற போராட்டமாகவே இருந்தது.
இதனால் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி அவர்கள் கடுமையாகப் போரிட்டனர்.
இதனால், புலிகளைப் பின்தள்ளுவதற்கு அரசபடைகள் கடுமையாகப் போரிடவும் விலை கொடுக்கவும் வேண்டியிருந்தது.
எனவே, அந்தப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகளுக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
2009 ஏப்ரல் முதல் வாரத்தில் புதுக்குடியிருப்பை அடுத்து ஆனந்தபுரம் பகுதியில் நிகழ்ந்த சமர் தான், விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாகியது.
அதுவே அவர்கள் சந்தித்த மிகப்பெரிய இறுதிப் போராகவும் அமைந்தது.
இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் முக்கியமான தளபதிகள் உள்ளிட்ட 600 வரையான போராளிகள் கொல்லப்பட்டனர்.
அந்தச் சமரின் போது, அரசபடைகளின் முற்றுகையில் சிக்கியிருந்த புலிகளை அழிக்க, கிளஸ்டர் குண்டுகள், எரிகுண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
இந்தச் சமரின் பின்னர் அரசபடைகளால் மீட்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் மோசமாக சிதைந்து காணப்பட்டதும், எரிந்து போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும், இது பொதுமக்களைச் சார்ந்த ஒரு சம்பவமாக இல்லாததால், இதுபற்றி எந்தவொரு குழுவும் கவனத்தில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில், புதுக்குடியிருப்பில் கண்டறியப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரம், சர்ச்சையாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போன்போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்தது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக கூறியிருந்தனர்.
பலரின் காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன.
விமானத்தில் இருந்தும், ஆட்டிலறிகளின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும், தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர்.
ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வந்துள்ளது.
இந்தநிலையில் தான் புதிய ஆதாரங்களை ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.
இது இலங்கைக்கு கடும் நெருக்கடி ஒன்றை உருவாக்கக் கூடும்.
ஏனென்றால், அரசாங்கமே போர் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதிகளில், இலட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்த பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை சர்வதேச சமூகம் நியாயமானதென்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.
எனவே சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம்.
ஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகள், அழுத்தங்களில் சிக்கிப் போயுள்ள அரசாங்கத்துக்கு புதியதொரு சிக்கலாக கிளஸ்டர் குண்டும் உருவெடுக்கப் போகிறது.
தாம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிக்கவில்லை என்று கூறும் அரசபடைகள், புலிகள் அதனைப் பாவித்தற்கான ஆதாரம் இல்லை என்கிறது.
அப்படியானால் போர் நடந்த பிரதேசத்தில் இவை எப்படி வந்தன என்ற கேள்விக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும்.
வன்னியில் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பொதுமக்களையோ சர்வதேச அமைப்புகளையோ அரசாங்கம் உடனடியாக அனுமதிக்கவில்லை.
சர்வதேச சட்டங்களுக்கு முரணான சம்பவங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் தடயங்கள் அகற்றப்பட்ட பின்னர் தான், அங்கு வெளியார் அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும் அதையும் மீறி ஒரு சான்று ஐ.நாவிடம் சிக்கியுள்ளது.
கிளஸ்டர் குண்டுகள் வன்னியில் வீசப்பட்டதற்கு ஏற்கனவே ஆதாரங்கள் பல வெளியாகின.
விமானத்தில் இருந்து வீசப்பட்டு வெடிக்காத கிளஸ்டர் குண்டின் நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.
ரஷ்யத் தயாரிப்பான அந்தக் குண்டின் எழுதப்பட்டிருந்த ரஷ்யமொழி எழுத்துகள் பெயின்ற் பூசப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.
அப்போது சர்வதேச சமூகம் அதைக் கண்டு கொள்ளவில்லை.
ஐ.நாவின் கையில் இப்போது ஆதாரமாகச் சிக்கியுள்ள நிலையில், கிளஸ்டர் குண்டு விவகாரத்தை சர்வதேசம் இனிமேல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் சர்வதேச சமூகத்தை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் அரசுக்கு கிளஸ்டர் விவகாரம் பெருந்தலைவலியாகவே அமையப் போகிறது.
சுபத்ரா

No comments:

Post a Comment

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...