Friday, March 19, 2010

குளம் வற்றும்வரை காத்திருந்த கூட்டமைப்புக் கொக்குகள்!




அந்த வன்னிக் குளம் நிரம்பியிருந்தது. அங்கே, அழகான தமிழ் மீன்கள் துள்ளி விளையாடின. கரையோர மரத்தில் குடியிருந்த கூட்டமைத்துக் குடியிருந்த கொக்குகளுக்கு அந்த மீன்களின் ஆனந்த அழகு பிடிபடவில்லை. என்றாலும், குளத்துடன் கோபிக்கும் தைரியமும், அதனை உடைக்கும் ஆற்றலும் இல்லாமல் அந்த மீனகளை இரையாக்கும் ஆசையுடன் தவித்தன. ஆனாலும், அந்த மீன்களை அரவணைத்துப் பாதுகாத்தது அந்த வற்றாத குளம். மீன்களும் ஆனந்தமாக நீச்சலடித்தன. அபார நம்பிக்கையுடன் எந்த அச்சமும் இல்லாமல் நீந்தி மகிழ்ந்தன.

அயற்காட்டுச் சிங்கள நரிகளுக்கும் அந்த அழகு பிடிக்கவில்லை. குளத்திலிருந்துகொண்டு கும்மாளம் போடும் அந்த மீன்களை நினைத்தபோதெல்லாம் பசி எடுத்தது. அதனால், அந்த மீன்களைக் குரூரத்துடன் பார்த்தது. அவற்றைச் சிதைத்து, உணவாக்க ஆசை கொண்டது. அந்தக் குளத்தின் அணைகளை உடைத்தாவது அந்த மீன்களைப் பிரித்து எடுக்க யோசனை போட்டது. அயற்காட்டு இந்திய நரிகளுக்கும் தூது அனுப்பியது. ஆலோசனை கேட்டது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எப்படி நழுவ விடுவது? இரண்டு நரிக் கூட்டங்களும் இணைந்து திட்டம் தீட்டின.

நாங்கள் பிரிந்திருந்து தனித் தனியாக இந்தக் குளத்தை உடைப்பது சாத்தியமேயில்லை. இருவரும் இணைந்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று தோழில் கைபோட்டு உறவாடின. இந்திய நரிகள் செய்யும் உபகாரத்திற்கு, கிடைக்கும் இரையைப் பங்கு போடவும், தப்பிப் பிழைத்து எஞ்சிய தண்ணீரில் சிக்கித் தவிக்கும் மீன்களைத் தேவைக்கேற்றவாறு பகிர்ந்து கொள்ளவும், அதற்காக அந்தப் பகுதியில் நிலை கொள்ளவும் இந்திய நரிகளுடன் சிங்கள நரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டன.

வெகு நாட்கள் திட்டம் தீட்டப்பட்டு, ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குளத்தை உடைக்கும் தாக்குத்களும் மேற்கொள்ளப்பட்டது. பலமான குளக் கட்டுக்களும் தொடர்ந்த நரிக் கூட்டங்களின் தாக்குதல்களால் சிதைந்து உடைந்தே போய்விட்டது. தண்ணீர் கரை கடந்தது. மீன்கள் தவித்தன. தண்ணீரின் போக்கில் தப்பி ஓடின. நரிகளின் வேட்டையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் பலிகொள்ளப்பட்டன. அப்படியும் தொடர்ந்தது தாக்குதல். இறுதிக் கரைவரை ஓடி ஒழிந்த மின்கள் சிறைபடுத்தப்பட்டன. நரிகளால் சித்திவதை செய்யப்பட்டு, சீரழிக்கப்பட்டன.

குளம் வற்றியதை கொக்குகளால் கொண்டாட முடியாவிட்டாலும், இரைக்கு இனிப் பஞ்சம் எப்போதும் இல்லை என்று திருப்தி கொண்டன. அதற்காக நரிகளுடனும் பேச்சுக்கள் நடாத்தின. அந்தக் குளத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்தும் எங்களது ஆளுகைக்குட்பட்டது என்று ஏற்றுக்கொண்டால், உங்களையும் சேர்த்துக்கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது ஆனால், எங்கள் மீன் வேட்டைக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்தன.

குளத்தின் எல்லைக்குள் நாங்களும் இருந்தால்தான், சிங்கள நரிகளின் மீன் வேட்டையைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு, எங்கள் பிரன்னத்தை ஏற்றுக் கொள்வதுடன், எங்கள் ஆலோசனை கேட்டுத்தான் நீங்கள் நடக்க வேண்டும். நாங்கள் மீன் வேட்டையில் சிங்கள நரிகளுடன் சமரசம் செய்து கொள்ளுகின்றோம் என்றன தலைக் கொக்குகள் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தன.

தப்பிப் பிழைத்த மீன்கள் மீதான பகுதி ஆதிக்கம் கொக்குகளிடம் வந்து சேர்ந்தது. அத்துடன் அவைகளுக்கிடையே போட்டிகளும் உருவெடுத்தன. சில கொக்குகள் சிங்கள நரிகளுடன் கூட்டுச் சேர்ந்தன. சிங்கள நரிகளாலேயே எஞ்சியிருக்கும் மீன்களை வாழ விட முடியும் என்று பட்டயம் போட்டு அறிவித்தன. இல்லை, இல்லை… இந்திய நரிகள்தான் இந்த மீன்களின் இரட்சகர்கள். அவர்களை மீட்பர்களாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த மீன்களுக்குப் பாதுகாப்பு என்றன தலைமைக் கொக்குகள். இந்திய நரிகள் சிங்கள நரிகளை விடவும் கொடுமையானவை, கோரமானவை. அந்த இரண்டு நரிகளாலும் இந்த மீன்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கப்போவதில்லை. மீண்டு அணையைக் கட்டும் உதவியை எவரிடமிருந்தாவது அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் இந்த இடத்தில் வாழ முடியும் என்று போர்க் குரல் எழுப்பின மீன்களின் அவலம் கண்டு கலங்கிநின்ற சில மனச்சாட்சியுள்ள கொக்குகள். முரண்பட்ட கொக்குகள் அங்கிருந்து தலைமைக் கொக்குகளால் வெளியேற்றப்பட்டன.

இழப்புக்களுடன் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கும் தமிழ் மீன்கள் சோகமாகத் தங்கள் விதியை நொந்து சிரித்துக்கொண்டன. குளத்திற்கு அணை கட்டித் தங்களை வாழ வைக்க யாராவது வரமாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் அவைகளால் காத்திருக்கத்தான் முடிகின்றது.

நீங்கள் அணை கட்டக் கைகொடுக்கப் போகின்றீர்களா? சிங்கள நரிகளின் தொடர் வேட்டைக்குத் துணைபோகப் போகுறீர்களா? அல்லது தலைக் கொக்குகளின் துணையோடு இந்திய நரிகளின் தொடர் துரோகங்களை அனுமதிக்கப் போகின்றீர்களா?
இனி நீங்களே முடிவு செய்யுங்கள்!

சி. பாலச்சந்திரன்
ஆசிரியர்
ஈழநாடு.




No comments:

Post a Comment

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...